இன்னும் மீட்டப்படாமல் புல்லாங்குழலில் பதுங்கிய இசையாய் என்னுள் நிரம்பியிருக்கும் அன்பே கடைசியாக கடல் கொண்ட தனிமையை பரிசளித்தாய் கன்னங்களில் வழிந்தோடும் நீரைத் துடைக்கும் பொருட்டு நீ என்னை ஆட்சிசெய்தாய் வாசனைகளால் நிரம்பி வழிந்த சொற்கள் மயக்கமூட்டுகின்றன இரவும் பகலும் தீய்ந்து பொசுங்குகின்றன காலம் வெளி மறந்து மங்குகின்றன நினைவுகள் தடித்த முத்தங்களால் புண்ணாகிப்போன உதடுகள் கேலி செய்கின்றன மறைக்கப்பட்ட காதல் கடிதங்கள் வாழ்வின் தீராத் துயரங்கள் அன்பின் நிழலுருவம் கண்ணிமைகளில் தொக்கி நிற்கிறது தூரங்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றன நடக்க மறுக்கும் கால்கள் அமைதியை விரும்புகிறது இதயம் எல்லாவற்றிர்க்கும் மேலே நானே எழுதிய துயர்கொண்ட நீண்ட பாடல் வரிகள் அயர்ச்சியூட்டுகின்றன.
நிலையின்றி விடாமல் பறந்துகொண்டிருந்த வழிதவறிய பட்டாம்பூச்சி என் அறைக்குள் வீழ்ந்து மரித்தது சந்தனம், கறுப்பு, வெள்ளை,பழுப்பு வண்ணங்களில் பளபளத்த அதன் இறக்கைகள் சோர்ந்து துவண்டிருந்தன பட்டாம்பூச்சி வாழ உவந்ததாக இல்லை பெருநகரத்தின் நிலம் எங்கிருந்து வந்தது அம்மாவின் அதிசயமான கேள்வி பட்டாம்பூச்சி அழுத்தமாக உச்சரித்து வீட்டுக்கு வந்தால் நல்லது என்பார்கள் என்றது ஆனால் இறந்த பட்டாம்பூச்சி அம்மாவின் கவலை இறந்த பட்டாம்பூச்சியை என்ன செய்ய அம்மா புதைத்துவிடு மகனே என்றேன் இடம் தேடி அலைந்தான் மகன் கான்கிரிட் கட்டிடங்களின் சிமெண்ட் தளங்கள் அவனைச் சோர்வடையச் செய்தன கடைசியாக என் புத்தகம் ஒன்றில் பத்திரப்படுத்தினான் புத்தகத்தின் வரிகள் திருத்தி எழுதப்பட்டன பட்டாம்பூச்சி பற்றி மகன் எழுதிய சிறந்த கவிதை.
என் கருந்தசைகளை தின்ன ஆசைப்பட்டபோது உன் காதலைச் சொன்னாய் மாமிச பட்சியின் ஒளிர்ந்த கண்கள் கிளர்ச்சியூட்டியது இதயத்தில் அல்லாது மூளையில் உன்னை அமர்த்திக்கொண்டேன் குற்றவுணர்வில்லையே என்றபடி லிங்கத்தை கூர்மையாக்கி என் துயரினில் செருகினாய் அதிர்ந்தது உடல் கீற்றைப்போல் கூட அன்பு ஒளிந்திருக்கவில்லை அதில் துக்கத்தை முழுமையாக்கினாய் என் உடலை காகங்களுக்கு தின்னக் கொடுத்தேன் மாமிச வாடை பிரபஞ்சத்தை நிறைக்கிறது.
நகரம் பெருமழையாய் காட்சியளித்தது அவனுக்காக மரமல்லிப்பூக்கள் உதிரும் சாலையில் வெகுநேரம் காத்திருந்தாள் அவள் கண்களில் துளிர்த்த கண்ணீர் நகரை மூழ்கடித்தது எப்படியும் பெருக்கெடுக்கும் வெள்ளத்தில் தன்னை அடைவான் என்றிருந்தாள் தன் சுவடுகளை அருவமற்று அழித்து அவன் பாலையில் குடியேறியதாகச் சொன்னான் மழைக்கோட்டணிந்த வழிப்போக்கன் ஒருவன்.
பெருநீலக் கரையில் தனித்து அலைந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சொல்லும் மண்கோர்த்த சிப்பிகளில் சேகரிப்படுகிறது அதை திறக்கும் சிறுமி உலகின் தனிமையின் தேவதை ஆகிறாள் சொற்களைப் பிரித்து பிரபஞ்சம் முழுக்க விசிறி எறிகிறாள் அது உங்கள் ப்ரியமானவர்களையும் சென்றடையலாம்
நீலமலர்கள் ஆற்றங்கரையில் விரவிக்கிடந்த ஒளிநிரம்பிய மழைநாளில் மலர்வாசனையில் மயங்கிக் கிடந்தன கனவில் கண்ட பட்டாம்பூச்சிகள் இறக்கை மூடாத அவைகளை எனது வலது கையில் வண்ணங்களாய் மலரச் செய்தேன் ஆற்றின் ஒளிநிரம்பிய நீரைப்பிடித்து என் கைகளில் ஊற்றி ஒளிநீரைக் குடி என்றாய் என் உடலில் பெருகியது ஒளிவெள்ளம் கையிலிருந்த பட்டாம்பூச்சிகள் திசையற்றுப் பறந்துபோயின அன்றிரவு ஒளிநிரம்பியநீர் சூடாக வெளியேறியது கொல்லையில் அமர்ந்திருந்த பலவண்ணப் பட்டாம்பூச்சிகள் என்னை பார்த்துச் சிரித்தன வெறுமை.
சரி எல்லாவற்றையும் வெறுங்கள் பரவாயில்லை துக்கமாய் இருங்கள் நீங்களே உங்களை வன்கத்தியால் இருதயத் தசையில் சொருகிக்கொள்ளுங்கள் கவலை தரும் அவர்களை மறக்க முடியுமென்றால்
சிரமமின்றி வெகு இயல்பாய் சேர்த்துச் செய்வான் வார்த்தைகளை முதன் முதலாய் கடல் பார்த்த குதூகலத்துடன் நெம்பி வழியும் அது உப்புக்கரிக்கும்நீர் காயம் படிந்த தசைகளில் தெறிக்கும் ஆனந்தம் அதில் விரும்பிச் சேரும் மீன்கள் சிக்கலின்றி பின்னலிடப்பட்ட வலையில் உன்னைவிட ஒருமாற்று குறைந்த அன்பே என்னுடையது என்று சொற்கள் உண்மையை விளம்பும் ஆகா! என்ன ஒப்புதல் வாக்குமூலம் குற்றங்களே ஆனாலும் மனம் ஆராதிக்கும் இவனே சரியென்று... இடப்பட்ட சொற்கள் எல்லாம் ஒருநாள் மௌனங்களால் வெளியேற்றப்படும் அலைகழியும் மனதுடன் நிறைய சொற்களுடன் அவனைப் பிராத்தித்தால் சொற்களில் நிரம்பாதவன் நான் என்பான் கவனம்.
உன்னை நான் அடையாளம் காணாத அந்த முதல் தருணத்தில் கடும் தேனீர் சாப்பிட்டபடி ஆக்ரோசமாக பேசிக்கொண்டிருந்த என்னை யாரென்று கவனித்து கேட்டேன் என்றாய் பின்னாளில். அங்கேயே பெரும்நகரம் நடுங்க அன்பின் கருத்தை உன் வார்த்தையால் கொடுங்கத்தியாக்கி கூட்டத்தில் செருகினாய் என் வன்மம் தூண்டி அன்று நான் புறக்கணிக்கும் எதிரியானாய் மற்றொரு சந்திப்பில் உன்னைக் கடந்து சென்ற போதும் பாவங்களின் பாவி என்றே கருக்கொண்டேன் பிரிதொருநாளில் என் நண்பர்களுடன் நீ நிற்கையில் எதிர்பாராமல் உன்னிடம் பேச வாய்த்தபோது நீ சிறந்த கவிஞன் என்றேன் சொல்லிவிட்டு என் வாகனத்தை திருப்பினால் மரணம் மிக அருகில் நின்றது உயிர் எழுப்பும் ஒசையைப்போல பார்த்து போங்க உன் தாய்மையின் குரல் அன்பின் பெருத்த விழிகளால் நான் திரும்பிப் பார்த்தேன் இனி எல்லாம் நிகழும் என்பதை உன் நண்பனும் என் தோழியும் அறிந்தே வைத்திருந்தார்கள் நாம் இப்போது இல்லாமல் இருப்பதையும்.
ஏசு முள்கீரிடம் சூட்டி சோகமாகக் காட்சியளித்த நகரத்தின் பெருங்கட்டடத்திற்கு அப்பாவை முதலில் அழைத்துச் சென்றேன்
அன்றிரவு தூக்கத்தில் தாதியை அழைத்து பிதாமகனின் முள்கிரிடத்தை அகற்றி மருந்திடச் சொன்னார்
அவர் கடவுளப்பா தானே உயிர்த்தெழுவார் என்றேன்
தலையசைத்து சமாதானம் அடைந்தார் மறுநாள் கடவுள் தன்னருகே படுத்துறங்கியதாகச் சொன்னார் எலும்பை உருக்கும் வலி மட்டும் நீள்வதாகச் சொன்னவர் கடவுளும் கொடூர வலியின் உச்சத்தை அடைந்திருப்பார் என்றார்
அப்பா தூங்குங்கள் இசையை முடுக்கினேன் தலையை வருடினேன் தூங்கிப்போனார்
உறக்கச் சடவில் பாவம் கடவுள் அவர் இறக்கும் தறுவாயில் இசையை கேட்டிருப்பாரா யாராவது அவர்மீது முத்தங்களை பதித்தனராவென முனங்கினார்
அப்பா அவர் கடவுளப்பா தானே உயிர்த்தெழுவார் என்றேன்
அவருக்கும் வலித்திருக்கும் இல்லையா என்ற அப்பா தன் சிரசின் வழியே வெளியேறி மூடிய கதவை திறவாமல் இவ்வுலகை மறுதலித்துச் செல்லும்போது கடவுள் அவர் தோளில் அமர்ந்திருந்தார்.
(உயிர் எழுத்து இதழில் டிசம்பர் 2009 ல் வெளியான எனது கவிதை)
பருத்தி பூ போட்ட சட்டையணிந்து மண்குதிரை ஏறி பறக்கிறாய் மகளே என் கனவில் என்றேன் நான் பால்யம் அற்றவள் அம்மா நிறங்களில் வழியும் உன் கனவுகள் பொய்யானவை ஏன் அம்மா என் கனவுகளை நீ கண்டுகொண்டிருக்கிறாய் கருப்பு வெள்ளைகளால் ஆன அவைகள் எனக்குச் சொந்தமானவை கனவுகளில் என் ரெக்கைகளை வரையாதே அம்மா இயல்பிலேயே அவை என்னோடிருக்கின்றன என் விளையாட்டினைப் பூட்டி உன் அறைக்குள் சுருட்டிக்கொண்டிருக்கிறாய் உன் தோழமைகள் எனக்கு பிரிவினைச் சொல்லிக்கொடுக்கிறது வந்துபோகும் அவைகளை நான் வெறுக்கிறேன் அம்மா உன் குழந்தமையும் பால்யமும் என்னை பொறுமையிழக்கச் செய்கிறது பொறுத்துக்கொண்டிருக்கிறேன் உன் விழிகளில் ததும்பும் நீரை சகிக்காமல் என் பால்யம் நிரம்புவதற்கு முன்பே ருதுவாகும் நாளை குறித்துக்கொண்டிருக்கிறாய் உன் குருட்டுத்தனத்தால் போ அம்மா கருப்பு வெள்ளையிலான என் கனவுகளை நானே கண்டுகொள்கிறேன்.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் வளர்ப்பு பிராணியாக்கப்பட்ட நான் உடனிருந்தேன் வாலாட்ட மட்டுமே பழக்கப்படுத்தப்பட்ட என் குரல்வளை நசுக்கப்பட்டிருந்தன அது இயல்பென்றிருந்தேன் உங்களுக்கு கோபம் வரும்போதெல்லாம் என்மேல் சிறுநீர் கழித்தீர்கள் போதையின் உச்சத்தில் என் மேல் காரி உமிழ்ந்தீர்கள் குருட்டு பிச்சைக்காரியைப்போல் திசையற்று பார்த்து துடைத்துக்கொண்டேன் எல்லாம் அன்பின் மிகுதியால் நிகழ்த்தப்படுகிறது என்றே கட்டமைக்கப்பட்டிருந்தேன் கடைசியாக உங்களுக்கு நன்றி செலுத்திய என் வாலை நறுக்க முற்பட்டபோது எனக்கு கூர்பற்கள் இருப்பதை மறந்துவிட்டிர்கள்
என் ஆன்மாவின் நிகறற்ற அன்பே உன் காலடியில் வைப்பதற்கு ரேகை படர்ந்த உள்ளங்கையின் வெம்மை எப்பவும் துளிர்ப்புடனே இருக்கும் என் உயிர்வழி கசியும் மூச்சு உன் இதயத் தசைகளைப் பிளந்து செல்வதை நீ எப்படித் தடுக்க முடியும் உள்ளே அனுமதிப்பதைத் தவிர
நீ செலுத்திய அன்பின் ஆயிரம் குறுங்கத்திகளை உன் கண்முன்னே பிடுங்கவே உன்னை அழைத்தேன் வன்முறையின் துர்நாற்றங்கள் உனக்கு புதிதல்ல சிரிக்கவே செய்வாய் நமக்கான கடைசி உரையாடல் இதுவென்று தெரிந்தும் நீ அமைதியாகவே இருப்பாய் குருதியை துடைத்தபடி குறுங்கத்திகளை மௌனமாகவே வாங்கிச் செல்வாய் உன் குருட்டுப் புன்னகைக்குள் ஒளிந்திருக்கும் தடம் தெரியாத வார்த்தைகளை நான் அறிவேன் அன்பே உதிராத உன் அன்பினை ஒருநாளும் முத்தங்களால் நிரப்ப முடியாது நீ என்றும் சலிக்காதவன் அன்பின் ஆகுருதியில் செலுத்த விஷம் தோய்ந்த அம்புகளை தயாராகவே வைத்திருப்பாய் அன்பின் ஓட்டைகளை அடைப்பது எப்படி என்பதை உன்னிடமிருந்தே பழகிகொண்டேணடா சிதறிய ரத்தத் துளிகளை சேமித்துச் செல் அவையற்று பின்தொடராது உன் நிழலின் நாய்க்குட்டி
வெகுநேரமாய் தனிமையின் சோகை பிடித்த ரயில் நிலையத்தில் விசிலுடன் காத்திருந்தான் கெண்டைக்காலுக்குமேல் சேலை உயர்ந்து கறுத்த கொலுசின் ஒலியில் நடந்து வருவது தாமரைதான் வயிறு புரண்டு வலித்தது தோளில் படுத்திருந்த குழந்தை அவள் சாயலிலே இருந்தது பால்ய சாயல் காணாமல் போயிருந்த அவனைக் கடந்து போனாள் காற்றைப்போல. கையில் இரண்டு பைகளைச் சுமந்திருந்தாலும் ஓடிப்போய் அவள் கையிலிருந்த பையைவாங்கி தன் கைக்குள் திணித்துக்கொண்டவன் அவள் பின்னாலிருந்து புன்னகை வழிய குழந்தையைக் கொஞ்சியபடி போனான் நல்லவிதமாய்த்தான் இருக்கிறது வாழ்க்கை
என் உள்ளங்கையில் பரந்து விரிந்து நாடி நரம்பெங்கும் கிளைபிரிந்து குருதி வெள்ளமாக பாய்கிறது உன் அன்பின் நெடிய வாசனை கொதி அமிலமாய் அன்பை என் முகத்தில் பீய்ச்சியடிக்கிறாய் நாறி சீழ்வடியும் நீரை என் வலியோடு சேர்த்துக் குடிக்கிறாய் உலகின் உன்மத்தம் இதுவென்று நாட்டியமாடுகிறாய் ஆனால் ஈரம் கசியும் என் புண்களில் உன்னால் ஒருநாளும் கனிந்த முத்தத்தைக் கொடுக்க முடியாது லட்சம் சிறகுகள் கொண்ட உடலை குறுக்கி என் ஆன்மாவின் செல்லக் குழந்தைகளை பொதிந்து வைத்திருக்கிறேன் அதிகாரத்தின் அன்பை அவை ஏளனத்தோடு பார்த்துச் சிரிக்கும் அவ்வளவே அதன்முன் மண்டியிட்டு உன்னால் தோற்றுப்போகவே முடியும்.
உன் மௌனத்தின் லட்சம் புழுக்கள் என் மூளையில் பாறையாய் இறுக்கி ஞாபகத்தை அழிக்கிறது பிரிதொரு கணத்தில் புழுக்கள் இடையறாது ஊறி அதில் பல லட்சம் நினைவுகள் தொடர்பின்றி தோன்றி மூளையை சிதறடித்து கண் காது மூக்கு வழியே வேகத்துடன் வெளியேறும் போது நினைவில் உயிர் பிரிவதை உணரமுடிகிறது ஆன்மாக்கள் பற்றி எரியும் நம் உறவில் பகிர்ந்துகொள்வதற்கு அழுகிய முத்தங்களே உள்ளன என்பதை அறிவேன் இருந்தும் பிரிவின் வலியை பாதத்தின் நடுநரம்பு சுண்டியிழுத்து உணர்த்துவதை விரும்பவே செய்கிறேன்.
புத்தங்களை விட உட்கார்ந்த இடத்தில் பலவிதமான செய்திகளை படைப்புகளை வலைப்பூக்களில் படிப்பது மிக எளிமையாக போய்விட்டது. ஒரு சில பத்திரிக்கைகளே புதிய படைப்பாளிகளை ஏற்றுக்கொண்டு படைப்புகளை வெளியிடுகிறது. இதனால் நல்ல படைப்பாளிகள் வெளியே தெரிவதற்கு கொஞ்ச நாளாகலாம்.ஆனால் இப்போதெல்லாம் அதைப்பற்றி கவலைப்படுவதற்கு இல்லை. வலைப்பூக்கள் பிரபலமாகிவிட்டதன் மூலம் ஒவ்வொரு வாசகனும் எழுத்தாளராக ஆகலாம். புத்தகங்கள் படிப்பதற்கு நிகராக வலைப்பூக்களை படிக்க ஆரம்பித்துவிட்டேன். பல வலைப்பூக்களில் பிரமிக்கும் வகையில் படைப்புகளை காணமுடிகிறது. அரசியல் அதன் எதிர்வினைகள் என்று மிக தைரியமாக எல்லா விசயங்களையும் எவ்வித சமரசம் இன்றி அலசி ஆராயிறார்கள்(அவை சண்டைகளாக இருந்தாலும்). கருத்துச் சுதந்திரத்தின் பெட்டகமாக இருக்கிறது வலைப்பூ.பல்வேறுவிதமான எதிர்க்கருத்துக்களை தெரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக ஈழத்தமிழர்கள் உலக அளவில் தங்களுடைய அரசியல் மற்றும் அழிக்கப்பட்ட, அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் கொடுமையான நிலையை எடுத்துச் சொல்ல வலைப்பூ மிகச் சிறந்த ஊடமாக விளங்குகிறது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் கருவியாக அவர்கள் வலைப்பூக்களை பயன்படுத்துவது மிகச் சிறந்த சமூக விஞ்ஞான வளர்ச்சி. புதிதாக நேற்று தொடங்கிய வலைப்பூ ‘குப்பைத் தொட்டி’ http://aghambrahmashmi.blogspot.com/2009/10/blog-post.html முதல் எனக்குப் பிடித்த வலைப்பூக்கள்.
அன்புடன் என்னை முத்தங்களால் ஆரத்தழுவி நான் அருமையான துரோகி என்று அறிமுகப்படுத்திக் கொண்டான் எப்போதும் போதையேற்றிக் கொண்டிருக்கும் அவன் துரோகத்தின் மீது ஒரு குஷ்டரோகியின் ஆழ்ந்த கனிவை ஆழப்பதிந்தேன் எச்சிலை கவனமாய் துடைத்தவனின் கண்களைக் கவனித்தேன். நிழலைப் போல படர்ந்திருந்த துரோகத்தை வழியும் உதிரமாகக் காட்சிபடுத்தினான். அவன் உண்மையின் குரூரத்தின் மீது என் பொய்யின் அறுவெறுப்பு பெரும் அச்சக் குரலாக மாறி துரோகத்தை இறுக்கப் பற்றியது உண்மையின் அன்பையும் பொய்யின் வன்மத்தையும் பெருத்த துரோகமாக்கி ஒரு குடுவையில் ஏந்தி இருவரும் பருகினோம்.
அப்பாவின் சுருக்கமற்ற முதுகுத் தசையின் அணுக்களில் மரணம் தன் அன்பின் முத்தங்களை மெதுவாக பாய்ச்சியிருக்கிறது கடுமையானதும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாத அம்முத்தங்களை என் மென்விரல்களால் அழுந்தத் துடைக்கிறேன் மரணத்தின் வாசனை என்னை மூர்ச்சையாக்கி தூரத்தள்ளி சங்கிலியிடுகிறது அது வீரியம் கொண்டு உயிரின் தசைநார்களை கிழித்துபடி மிகப்பலம் கொண்ட எதிரியைத் தாக்குவது போல் வாள்வீச்சுடன் காற்றை கிழித்தபடி அப்பாவின் முன் அதிர்ந்து நிற்கிறது பின் மண்டியிட்டு உயிரைக் கொடுத்துவிடு என்று பிச்சை கேட்கிறது.
ஊசி முனையில் கருந்தட்டுகள் சுழல,காற்றின் தேகமெங்கும் இசை பதிந்த காலமது.நம் விருப்பங்கள் தாண்டி,நம் அனுமதியற்று,நமக்குள் வந்தமரும் கலை.. இசை. என்னுள்ளும் இசை இப்படித்தான் வந்து சிம்மாசனமிட்டது. எங்கள் ஊர் ஒரு மலை கிராமம். மூன்று புறமும் மேற்குத் தொடர்ச்சி மலை அரண் அமைத்து இருக்கும் கூடலூர். அந்த ஊரில் இசையற்ற பொழுதுகளோ, காலங்களோ இல்லை.அது விசேசங்களின் ஊர்.. சடங்கு, காது குத்து, மொட்டை, மொய்விருந்து, மார்க் கல்யாணம், கிடா வெட்டு,..இப்படி ஏதாவது ஒரு விசேசம் நடந்துகிட்டே இருக்கும்.. எங்க வீட்டிலேயே இரண்டு வருசத்திற்கு ஒரு முறை விசேசம் நடக்கும். அந்த நேரங்களில் கரும் இசைத்தட்டுகள் சுழலுவதை பக்கத்திலிருந்து அதிசய பொருளைப் போல பார்ப்பேன். மைக் செட் போடுபவர் எனக்கு இசைக் கலைஞனாகத் தெரிவார். இவர் எப்படி இதில் பாட்டை வரவைக்கிறார் என்று வியப்பில் ‘எப்படிண்ணே இதுல பாட்டு வருது’ என்று கேட்பேன். ‘இந்த தட்டுல ஊசியை வச்சா பாட்டு வரும் அதை எடுத்துட்டுடா பாட்டு நின்னுடும்’ என்று ‘இங்கேயெல்லாம் வரக்கூடாது செட் கெட்டுப்போகும் ஓடிப்போ’ என்பார்.
ஊரில் திரும்பும் திசைகளெங்கும் கூம்புக் குழாய்கள்(loud speakers) ஏதோ ஒரு பாட்டை இசைத்துக் கொண்டிருக்கும். சிலசமயங்களில் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று இடங்களில் பாடல்கள் ஒலிபரபப்பாவதும் உண்டு. ' தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா' என ஒன்று கேள்வி கேட்கும்,மற்றொன்று ‘உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி’ என பதில் சொல்லும்.இப்படித்தான் என் பால்யங்கள் பாடல்களால் நிரப்பப்பட்டது. என்னைத் துயில் கொள்ளச் செய்வதும் ,என்னைத் துயில் எழுப்புவதும் ஏதோ ஒரு பாடலாய் இருக்கும். வெறும் பாடல்கள் என்ற நிலையிலிருந்து பாடல்கள் என்னை பித்துக்கொள்ளச் செய்தன. இளையராஜாவின் இன்னிசை பாடல்கள் என்று மைக் செட்காரர்கள் அறிமுகம் செய்து பாடல்களை ஒலிபரப்பினார்கள். பின் அந்தப் பெயர் மந்திரச் சொல் ஆனது. அது என் பாவாடை சட்டை காலம்.
சூரியன் மறையும் நேரம் அநேகமாய் எங்களூர் வானம் செந்நிறமாய் இருக்கும்.செவ்வானம் பார்த்தபடியே பாடல்கள் கேட்பது ஒரு சுகம். அப்படி பாடல்கள் கேட்கும் நேரத்தில் நானே செந்நிறமாக மாறி வானத்தில் மிதப்பது போன்ற உணர்வை இளையராஜாவின் பாடல்கள் ஏற்படுத்தின. அந்த காலக்கட்டங்களில் நான் என்னையே ஒரு கரும் இசைத்தட்டாகத்தான் உணர்ந்தேன். விழித்திருக்கும் கணங்களிலெல்லாம் என் உதடுகள் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்தபடி இருக்கும் அல்லது என் மனதிற்குள் ஏதோ ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.என் உடலுக்குள்ளும், மனதுக்குள்ளும் திரையிசைப் பாடல்கள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியிருந்தது. அது என் படிப்பினை பாதிக்கவில்லை. இசை மனது எல்லா நல்ல விசயங்களையும் அழகாக உள்வாங்கியது. வகுப்பில் முதல் ஐந்து ரேங்க்குள் வாங்கினேன்.
பாடல்கள் என் ஆடை
பாடல்கள் என் அணிகலன்
பாடல்கள் என் உலகம்
என வாழ்ந்த காலம் அது. எல்லா பாடல்களும் ஒரு சிறகு முளைத்த பறவைபோல வானத்தில் மிதந்து கொண்டிருப்பதாகத் தோன்றும்.பறக்கும் பறவைகளைப் பார்த்தபடியே பாடல்கள் கேட்டிருக்கிறீங்களா? சிறகசைக்காமல் தாளப் பறக்கும் பறவை 'பருவமே புதிய பாடல் பாடு’ என்று பாடியபடிப் பறப்பதாகத் தோன்றும். என் கற்பிதங்களும், என்னைச் சுற்றி இருந்த இயற்கையும் எல்லா பாடல்களுக்கும் ஒரு உருவத்தைக் கொடுத்து வைத்திருந்தது. பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் வழியெங்கும் பாடல்கள் ஒரு வழித்துணையாக வரும்.என் வீட்டிலிருந்து எங்கள் பள்ளிக்கூடம் இருக்கும் தூரம் இரண்டு பாட்டு கேட்கும் தூரம். நல்ல பாடல் என்றால் மூன்று பாடல் கேட்கும் தூரம். நினைத்தபோது மழை வரும் இயற்கைச் சூழல் உள்ள ஊர்(இப்போது வானிலை எல்லாம் மாறிப்போய்விட்டது). அதற்கு கால நேரமெல்லாம் கிடையாது பள்ளிக்குச் சென்று திரும்பும் பலசமயங்களில் எதிர்பாராமல் ஒரு திடீர் மழையைச் சந்திப்போம். அப்போதும் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். குடைகளற்ற அந்த பொழுதுகளில் மழையில் நனைந்தபடியே பாட்டு கேட்டுக் கொண்டே வருவேன்.
மழையில் நனைந்தபடி கேட்கும் பாடல்கள் இனிமையுடன், அந்த மழையோடு என்னைக் கரைத்துவிடுவதாக இருக்கும். ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையின் பூங்கோதையின் மனம்கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ பாடலை முதல் முறையாக கேட்டபோது மழையில் நனைந்தபடிதான் கேட்டேன். அது பள்ளியிலிருந்து திரும்பும் ஒரு மாலைப் பொழுது. அன்று கருஞ் சாம்பல் வண்ணத்தில் இருந்தது வானம். உதடுகளில் மழை வழிய நானும் அந்தப் பாடலை பாடியபடி வீடு வந்து சேர்ந்த ஞாபகத்தை, இன்றும் எல்லா மழைப் பொழுதுகளும் கிளர்த்துகிறது.
நான் என் சக வயது தோழிகள் போல் இல்லை என்பதில் என் குடும்பம் அநேக கவலை கொண்டிருந்தது. ஆனால் என் படிப்பு சிறப்பாக இருந்ததால் அவர்களால் என்னை தண்டிக்க முடியவில்லை. இது இல்லாமல் அப்பா ஒரு பிலிப்ஸ் ரேடியோ வாங்கி வந்தார். அதிலிருந்து அது என் உடமையாகி விட்டது. அப்பா செய்தி கேட்பதோடு சரி. நான் வீட்டிலிருக்கும் மற்ற நேரங்களில் அது என்னுடனே இருக்கும். அதில் பாடல்கள் ஒலிப்பரப்பாகும் நேரங்களை கணக்கிட்டு அப்போது வெளியே செல்லாமல் பாட்டு கேட்பேன். எல்லா இரவுகளிலும் என் தலைமாட்டிலேயே ரேடியோ ஒலித்துக் கொண்டிருக்கும் அல்லது என்னோடு தூங்கிக் கொண்டிருக்கும். அப்பா காலையில் எடுத்து செய்தியை போடுவார். அவர் மட்டும் நான் பாடல் கேட்பதை தடுத்ததே இல்லை. அம்மா,அக்கா, அண்ணன் எல்லோரும் என்னை பாட்டு பைத்தியம் என்பார்கள். நான் வேலை செய்யாமல் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும் நாள்களில் ‘ஒரு நாளைக்காவது இந்த ரேடியாவை போட்டு உடைக்கப் போறேன் என்று அம்மா கத்தும்.
அப்பாவோட புளியமரக் காட்டுக்குப் போகும்போது ‘வேலை முடியறவரைக்கும் இந்த ‘ஊஞ்சல்ல ஆடிகிட்டிரு’ என்று ஒரு கயிற்றில் ஊஞ்சல் கட்டிக் குடுப்பார். எங்க காடு மலைக்குப் பக்கத்தில் இருந்தது. மலைக்கு நடுவில ஊஞ்சல் கட்டி ஏகாந்தமா பாடற சந்தோசத்துக்காகவே நான் அப்பாகூட காட்டுக்குப் போவேன். மலைவாசத்தோடும் பயிர் வாசத்தோடும் பாடல்களை பாடுவது அல்லது பாடல்களில் நினைவுகளில் மூழ்குவது உலகில் இணையற்ற சந்தோசத்தை தந்தது.
எல்லோரும் விளையாட்டும் சிரிப்புமாக இருந்த பல நேரங்களில் எங்கேயோ தூரத்தில் சன்னமாக ஒலிக்கும் பாடலைக் கூட உட்கார்ந்து கவனமாகக் கேட்பேன். நான் எப்போதும் மாய உலகத்தில் மிதப்பதாக தோழிகள் பேசிக்கொண்டார்கள்.
இசை ஒரு அன்பான கலை என்பதை நான் தொடர்ச்சியாக பாடல்கள் கேட்பதன் மூலம் உணர்ந்திருந்தேன். இசை என்னுள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியையும் வலியையும் ஒருசேர ஏற்படுத்தியிருந்தது. நான் எதையோ தேடிக் கொண்டே இருந்தேன். கோடை வெயில் ,குளிர் இரவின் தனிமை ,பனியின் கூதல்,மழைவாசம்,எங்கள் ஊரின் இயற்கை..எனக்குள் வேறெதையோ உந்தித் தள்ளிக் கொண்டிருந்தது. முட்டையைத் தகர்த்து வெளியே வரத்தவிக்கும் ஒரு பறவைக் குஞ்சின் தவிப்பைப் போலிருந்தது.
ஒரு திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் கழித்துத் தான் எங்கள் ஊர் திரையரங்கிற்கு வரும் காலகட்டம் அது. அந்தப் படங்கள் வருவதற்கு முன்பே பாடல்கள் எனக்கு மனப்பாடமாக இருக்கும். திரையரங்கில் பாடல் காட்சிகள் வரும் போது அந்தப் பாடல்களைச் சத்தமாக பாடுவதற்காகவே நான் திரைப்படம் பார்க்கச் செல்வேன். ஒரு திரைப்படத்தையே பல முறை பார்த்திருக்கிறேன். எனக்குள்ள சினிமா மோகம் ஏற்பட்டதற்கு காரணமே பாட்டு மேல இருந்த பைத்தியம்தான்.
மழையில் இருளில் அதிகாலையில் செந்நிற மாலையில் நான் கேட்ட பாடலெல்லாம் திரையில எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்க்காகவே நான் சினிமாவுக்குப் போவேன்.ஒரு படத்தையும் விடறதில்ல.டப்பிங் படம் ஓடாத படம் எல்லாத்தையும் பாத்துடுவேன்.
அப்பத்தான் பாட்டு மேல் இருந்த அதிகப்படியான உணர்ச்சி சினிமா மோகமாக மாறியது. பத்து பைசா குடுத்து பிலிம் வாங்கி வீட்ல அப்பா வேட்டியில சினிமா போட்டுக் காட்டியிருக்கிறேன். என்னைப் போல பொண்ணுங்க யாரும் பிலிம் வாங்க மாட்டாங்க. வளையல் பாசி என்று வாங்கிக் கொண்டிருப்பார்கள். என்னைப் பார்த்து சரியான ‘கிறுக்கச்சி’ என்பார்கள். நான் படம் காட்டும் விளையாட்டில் ஆண்பிள்ளைகள்தான் ஆர்வம் காட்டுவார்கள்.
நிறையப் படம் பாத்து படம் பாத்து நல்ல படம் கெட்ட படம் எது என்று பிரிச்சுப் பார்க்கும் ரசனை வந்தது. அப்பவும் எல்லாம் மசாலாப் படங்களையும் பார்க்கும் கட்டாயத்திற்கு ஆளானேன். வீட்டில் மற்றவர்கள் அந்தப் படத்தை விரும்பிப் பார்த்தார்கள். அப்போது சினிமா தவிர வேறு பொழுது போக்கு இல்லை என்பதும் ஒரு காரணம். பாலச்சந்தர் ,பாரதிராஜா ,மகேந்திரன், பாலு மகேந்திரா படங்களை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படங்களில் கதாநாயகிகள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் அல்லது தன்மேல் திணிக்கப்படும் அதிகாரத்தை எதிர்பவர்களாக இருந்த கதாநாயகிள், உண்மையில் என் இயல்பில் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அதன் பின் நடிகர் நடிகைகளில் நடிப்பில் என் கவனம் சென்றது.
அப்போது எனக்குள் வந்த தேவதைதான் ஷோபா. ஒரு தீவிர மோகத்தோடு நான் சினிமா பார்த்துக் கொண்டிருந்தாலும் எந்த நடிகர், நடிகையருக்கும் ரசிகையாக இருந்ததில்லை. ஆனால் ஷோபாவை என்னாலே எனக்குள்ள இருந்து பிரிக்க முடியவில்லை. ‘என்னை பாரு என்னை ரசி என்னை நினைச்சுகிட்டே இரு வேற எதுவும் செய்யாதே’ என்று சொன்ன மாதிரி இருந்தது. அத்தனை எளிமையான கதாநாயகியை அதற்கு முன் நான் திரையில் பார்த்ததில்லை. பக்கத்து வீட்டு காலேஜ் படிச்ச அக்கா மாதிரி, இயல்பான வாழ்வில் வரும் அன்பான தங்கை மாதிரி, நான் மாற நினைக்கும் ஒரு நாகரீகப் பெண்ணாக இருந்தார். அதுவரைக்கும் எந்த நடிகையாகவும் என்னை கற்பனை பண்ணிப் பார்க்காத நான் திரையில் வரும் ஷோபாவின் கதாபாத்திரத்தைப் போல் இயல்பில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்..அதுக்கு ஒரு அன்பான காரணம் இருந்தது. ஷோபா தனக்கு கிடைச்ச எல்லா கதாபாத்திரங்களையும் ஒரு நுட்பமான அன்பின் வெளிப்பாட்டை கொண்டு நடித்திருந்தார். இயற்கையையும் அன்பையும் நேசிக்கின்ற ஒரு மனுசிதான் இத்தனை நுட்பமான அன்பை வெளிப்படுத்த முடியும்.
ஷோபாவும் என்னைப்போல் இசையும், மழையும் விருப்பமுடைய பெண்ணாக இருக்க வேண்டும். அவர் தனக்கு விருப்பப்பட்ட பாடல்களைச் சத்தமாக பாடுபவராக இருக்க வேண்டுமென்று விரும்பினேன். கள்ளமில்லாத அந்த சிரிப்புக்குள்ள ஒரு தேடல் தெரிந்தது. மனசுக்குப் பிடிச்ச விஷயங்களில் தன்னைத் திளைத்துக் கொண்டு அதில் கரைந்து போகும் மனம் இருந்தது. ஆனால் அவர் விருப்பங்கள் எதுவாக இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்குள் இருந்த ஷோபா இப்படித்தான் இருந்தார். அந்த முகத்தில் வழிகின்ற சந்தோசத்தை, சிரிப்பை, குழந்தைத்தனத்தை,தேடலை எனக்குள்ளேயும் கொண்டு வர விரும்பினேன். வள்ளியா ,இந்துவா நடிச்ச ஷோபாவுக்குள்ள நான் எங்கே இருக்கிறேன் என்று தேடினேன்.
அழியாத கோலங்கள் படத்தில் வருகின்ற இந்து டீச்சர் படத்தில் வருகின்ற எல்லா கதாபாத்திரங்களின் மேலும் சந்தேகமற்ற அன்பை செலுத்தும் பெண்ணாக இருப்பார். கடைசியில் அந்த ஆத்ம அன்பு அந்த கதாபாத்திரங்களை வாழ்நாளில் கடைசி வரைக்கும் கரைய வைக்கும். அந்தப் படம்தான் அவங்களை எனக்குத் தேவதையா காட்டியது. என்னைப் பொருத்தவரைக்கும் தேவதைகள் அழகானவர்கள் இல்லை. அன்பானவர்கள் .அன்பும் குழந்தைத்தனமும்தான் ஒரு பெண்ணை அழகாக்கும்.
சின்னச்சின்ன பாவனைகள்ல அவங்க காட்டற அக்கறை.ஒரு பாவத்திலயிருந்து இன்னொரு பாவத்துக்கு மாறி இரண்டையும் இயல்பான நடிப்பாக மாற்றி பார்வையாளனுக்கு கொண்டு சேர்த்த நடிகை ஷோபாவாகத்தான் இருக்கும்.
அப்படியொரு காட்சி முள்ளும் மலரும் படத்தில் வரும். மருத்துவமனையிலிருந்து திரும்பி வருகின்ற அண்ணனை(ரஜினி) வீட்டுக்கு தூரத்தில் வரவேற்க ஓடுவார். அண்ணனை பார்த்ததும் முகம் கொள்ளா மகிழ்ச்சியில் கட்டிக் கொள்வார். மெது மெதுவாக காற்றில் அண்ணனின் கை இல்லாத சட்டையை தொட்டும் உணரும் போது அந்த மகிழ்ச்சி கொஞ்ச கொஞ்சமாக இறங்கி தாங்க முடியாத துக்கத்தில் விம்மி அழுவார்.
அதே திரைப்படத்தில் கடைசி காட்சியில் தான் விரும்பும் ஆண், ஒரு வளமான வாழ்க்கை, தனக்காக வரும் ஊர் மக்கள் இவை எல்லாவற்றையும், அண்ணன் கூப்பிட்டதும் உதறித்தள்ளிவிட்டு ஒரு குழந்தையைப் போல் ஓடிவந்து உன்னைத் தவிர வேறு எதுவும் வேண்டாமென்று சொல்லி அழும் காட்சியைப் பார்த்தால் இன்றும் என் கண்கள் ஈரமாகிவிடும்.
மூடுபனி படத்தில் ஷோபா ஒரு சினிமா தியேட்டருக்கு போகும் காட்சி. அக்காட்சியில் இடைவேளையில் திரையரங்கிற்கு வெளியே வருவார். அப்போது யார் என்று தெரியாத ஹீரோவிடம் விரிந்திருக்கும் கூந்தலை மிக இயல்பாக கொண்டை போட்டபடி மணி என்ன என்று கேட்டுவிட்டு ஒரு திண்டில் உட்காருவார். ஹீரோவைப் போல் இப்படியொரு இயல்பான பெண்ணா என்று நாமும் திண்டாடிப் போவோம். இப்படி அவர் நடித்த படத்தை மிக நுட்பமாக பார்க்கும்படி அவர் என்னை இன்னமும் ஈர்த்துக் கொண்டிருக்கிறார்.
இன்று சினிமாதான் தொழில் ,சினிமாதான் வாழ்க்கை என்றானபின் உலகத் திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்த பிறகும் ஷோபா எனக்குள் ஏற்படுத்திய பிம்பம் உடையவே இல்லை.
ஒரு தேவதைப் பெண் திடீரென்று விளிம்புநிலை கதாபாத்திரத்தில் நடித்தால், உடனே நாம் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையயோடு ஏற்பது சிரமம். ஒரு பிரியாணிக்காக தன்னை இழப்பது தெரியாமல் இழக்கும் இரு வெகுளிப்பெண்ணாக, பசித்தலையும் குப்பத்து பெண்ணாக அந்த கதாபாத்திரமாக மாறியிருப்பார்.
புத்தகங்களை மறுவாசிப்பு செய்வது போன்று அவருடைய திரைப்படங்களை திரும்பப் பார்க்கிறேன். அதே நடித்த படங்களின் பாடல் காட்சிகளையும் திரும்பத் திரும்ப பார்க்கிறேன். இன்று என்னைப் பற்றி, இசை பற்றி, சினிமா பற்றி, ஷோபா பற்றி எழுத முக்கிய காரணம் அவர் நடித்த ‘பூ வண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்’ பாடல் என் பழைய ஞாபங்கங்களை கிளப்பிவிட்டது. இந்தப் பாடல் முழுதும் அன்பால் நிறைந்து இருக்கும். இசையில், குரலில், பாடல் வரிகளில்,ஷோபா நடிப்பில் அன்பு தளும்பி வழியும். அந்தப் பாடலைக் திரும்ப கேட்க கேட்க ஷோபா என் மனதில் ஆழமான அழகான படிமமாக படிந்து போயிருப்பது தெரிந்தது. அவர் நடித்த நான்கு பாடல் காட்சிகளை என் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாது. ஒரு முழுநீளத் திரைப்படத்தில் காட்ட வேண்டிய பாவனைகள் அனைத்தையும் ஒரு பாடல் காட்சிக்குள்ளயே செய்து காட்டிடுவார்.
‘பூவண்ணம் வண்ணம்’ பாடல் காட்சியில் காதலனும் காதலியும் ஒருத்தரை ஒருத்தர் இறுக்கமாக கட்டிக்கொள்ளமாட்டார்கள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் உயர்ந்த அன்பை, காதலை, ரொமான்ஸை தன்னோட முக பாவனைகளில் ,உடல் மொழியில் கொண்டு வந்திருப்பார்.
‘அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை’ பாடல். இது ஷோபா மட்டும் தனிமையில் பாடகின்ற பாடல் .இயற்கையை நேசிக்கின்ற எந்தப் பெண்ணும் அந்தப் பாடலோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது.தனக்கான ஆணின் முகம் தெரியாது,அவனுக்கான அன்போடவும் தாபத்தோடவும் இருக்கின்ற பெண்ணோட உணர்வை வெளிப்படுத்துகின்ற பாடல். ஒரு ஏரிக் கரையில தண்ணீரில் முழ்கி தன் கூந்தலை லேசாக அசைத்து தன் முகம் தெரியாத காதலனுக்காக தவிக்கின்ற தவிப்பை மிக நுட்பமாக கலை உணர்வோட வெளிப்படுத்தியிருப்பார். அந்த உணர்வு அந்த நீரோடையோடு கலந்திருக்கும் ஒரு தூய்மையான அன்பின் ,ஏக்கத்தின் வெளிப்பாடாக இருக்கும்.
தன்னை கடத்திட்டு வந்தவன் தன் மேல் இருக்கும் அதீத காதலை பாடலாகப் பாடுகிறான்.’என் இனிய பொன் நிலாவே’ ..அந்தப் பாடலை சூழ்நிலை இறுக்கம் ,மனத்தவிப்பு இதையெல்லாம் மீறி அந்த நிமிசத்துக்கான நேர்மையோடு ரசனையோடும் அந்த பெண் பாடலைக் கேட்கிறாள்.இதுதான் அந்தக் காட்சி. அதில் குழந்தைத்தனமான முகபாவத்தோடும் ரசனையோடும் குறுகுறுப்பான அழகில் மின்னுவார்.
ஒரு ஆண் இயற்கையை வர்ணித்துப் பாடுகின்ற பாடல்தான் ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா’ பாடல். படத்தில் சரத்பாபுதான் பாடுவார். இடையிடையே சின்னச்சின்ன குளோசப் காட்சிகளில் ஷோபாவின் முகம் காட்டப்படும்.அந்த சின்னச்சின்ன காட்சிகள்தான் அந்த பாடல் காட்சிக்கு ஒரு ஜீவனைத்தரும் .அந்த பாடல் காட்சியிலிருந்து ஷோபாவோட குளோசப் காட்சிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் அந்தப் பாடல் ஒரு முழுமையற்ற தன்மையோடு இருக்கும்.
இந்த எல்லாவற்றையும் நான் ஒரு ஏக்கத்தோடு எப்பவுமே நினைச்சுப் பார்ப்பேன்..ஏனெனில் இப்போது அந்த தேவதை உயிருடன் இல்லை. மிக அதீதமான அன்புதான் ஷோபாவின் தற்கொலைக்கு காரணம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆமாம் அவர் ஒரு அன்பின் உருவமாகத்தான் எனக்குத் தெரிந்தார். ஆனாலும் அவர் புன்னகைக்குள் ஒரு மென்சோகம் இழையோடி இருக்கும். ஷோபாவின் புன்னகை ஒரு மோனலிசா புன்னகை. அவர் அன்பை மட்டுமே நேசித்த பெண்ணாக இருந்திருக்க வேண்டும். அது முழுமையாக கிடைக்காத போதுதான் அவர் இந்த உலகத்தைவிட்டுப் போயிருக்க வேண்டும். ஷோபாவின் மரணத்தை நான் ஒரு தோற்றுப் போன அன்பாகத்தான் பார்க்கிறேன்.
இந்த மாதம் உயிரெழுத்து இதழில் வெளியான எனது கட்டுரை
என் வலிதரும் காயங்களிலிருந்து பிறந்தவை உனக்கான அன்பு காயங்களைக் குறுக்குவெட்டு தோற்றத்தில் பிளந்து உன்னை ஒரு அணுவும் வெளியேறதவாறு இறுக்கி அணைக்கிறேன் துவளும் மயிலிறகால் இனி நீ என் காயங்களைப் பிளந்தால் மணக்கும் நிணத்துடன் நீதான் வடிவாய் அன்பே. எனக்காக கண்டுபிடிக்கப்பட்ட துக்கத்தாலான பழக்குடுவையை ஏந்தி சத்தமின்றி மென் புன்னகையுடன் ரசித்துப் பருகுகிறாய் தவறி விழுந்து சிதறிய துளியை புன்னகையால் இட்டு நிரப்பும் வித்தையை உன் களவில் ஒளித்துவைக்கிறாய். என் கையில் இருப்பதோ இதயத்திலிருந்து உருஞ்சி எடுக்கப்பட்ட குருதி நிரம்பிய முத்தக் குடுவை அதை உனக்கு ருசிக்கக் கொடுப்பதா இல்லை பிடிநழுவ விடுவதா உன் பழரசமும் என் குருதி முத்தமும் ஒன்றல்ல அன்பே இரண்டும் ஒரே உதட்டில் உறிஞ்சப்படுகிறது அவ்வளவே.
பழுத்த மஞ்சள் சருகுகளின் மூர்க்கமும் நீர் விலகாத பச்சை இலைகளின் குளுமையும் சாயம் இழக்காத காட்டுப் பூக்களின் வாசனையும் நிறைந்து புதிதாய் உன் நிலத்தில் தறிகெட்டு ஓடும் காட்டாறு அன்பே நான் என் பயணத்தின் வேர்கள் உன்னுள் கிளர்ந்து பரவி என் தனிமையை முற்றடையச் செய்யும் பெருங்காதலாய்.
நகரம் முழுதும் தீப்பிடித்து எரிவதைப்போன்று வெக்கை வழிந்துகொண்டிருந்தது. அன்று நாள்முழுதும் சங்கர் நகர்ந்து கொண்டே இருந்தான். ஒரு இடத்திலும் அவனால் நிலையாக நிற்க முடியவில்லை. நடந்தோ பஸ்ஸில் ஏறியோ தன் நகர்வை நிறுத்தாமல் தொடர்ந்துகொண்டிருந்தான். தனக்கான ஒரு மனிதனைத் தேடிக் கண்டுபிடிப்பது இல்லை யாரையேனும் தன்மீது கவனம் செலுத்த வைப்பது இதுதான் அவனது இன்றைய நோக்கமாக இருந்தது. வாழ்வின் மிகப்பெரும் சூது தன் மேல் செலுத்தப்பட்டதாக உணர்ந்தவன் அதன் ஆட்டத்துக்குள் மிக மெதுவாக நுழைந்தான்...
வேலை பார்த்து வந்த எந்த இடத்திலும் அவனை இதுவரை யாரும் மரியாதையாக நடத்தியதில்லை. பிச்சை போடுவதைப்போலதான் வேலை கொடுத்திருக்கிறார்கள். படித்த பி.ஏ வரலாறுக்கு நாற்காலியில் உட்கார்ந்து வேலை செய்யும் பணிகிடைக்கும் என்று நினைத்தவனுக்கு பல மாதங்கள் அலைந்து திரிந்ததில் கிடைத்த முதல் கௌரமான வேலை துணிக்கடையில் சேல்ஸ்மேன் வேலை .
துணிக்கடையின் பிரமாண்டம் முதலில் அவனை மயக்கியது. அந்தக் கடையில் கம்பியூட்டர் முன்னால் உட்கார்ந்து கணக்கு பார்க்க வேண்டும் என்ற கற்பனையிலேயே உள்ளே நுழைந்தான். சேல்ஸ்மேன் வேலை மட்டும்தான் இருக்கிறது பார்க்கிறாயா என்று கேட்டார்கள். பசி அவனை விழுங்கிக்கொண்டிருந்தது. மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டான். முதல்நாள் விற்பனை பிரிவில் சீருடையோடு போய் தயக்கதோடு நின்றான். அங்கிருந்தவர்கள் இவன் பெயரைக்கூட கேட்காமல் புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கியா என்று கேள்வியோடு தங்கள் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
அவன் யாரோடும் பேசி பழக்கம் இல்லாதவனாக இருந்தான். எவரிடமும் பேசாமல் வரும் போகும் கஸ்டமர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். முதல் நாள்தானே வேலை பழகியதும் அவனும் தங்களைப்போல் ஆகிவிடுவான் என்று நினைத்தார்கள். அதற்கடுத்து தொடர்ந்த நாட்களிலும் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்ப்பவனாக மட்டுமே இருந்தான். கஸ்டமர்களிடம் நயமாகப்பேசி துணிகளை வாங்க வைக்க முடியவில்லை. ஒரு ஊமையைப்போல துணிகளை எடுத்துப் போடுவதும் மடித்து வைப்பதுமாக இருந்தான். இப்படி யாரோடும் பேசாமல் இருந்தால் வேலையைவிட்டு எடுத்துவிடுவோம் என்று சூப்பர்வைஸர் பலமுறை எச்சரித்துவிட்டார். சரி சரி என்று தலையாட்டிவிட்டு அமைதியாகப் போவான்.
எப்படியும் தன்னை மாற்றிக் கொள்ளவேண்டுமென்ற முனைப்பில் மேன்ஷனில் உடன் தங்கும் அறைவாசிகள் யாரும் இல்லாத நேரத்தில் மற்ற விற்பனையாளர்கள் பேசுவதைப்போல் தானாகப் பேசிப்பார்த்தான். இளம்பெண்களிடம் 'இந்த கலர் உங்க ஸ்கின் கலருக்கு கரெக்ட்டா இருக்கும்' என்று இவன் சொல்ல அவர்களும் சிரித்துக்கொண்டே அந்த துணியை வாங்கிச் செல்வது போல் கற்பனை செய்தான். மறுநாள் எப்படியும் இன்று கஸ்டமர்களிடம் பேசி துணிகளை வாங்க வைப்பது என்ற முடிவுடன் சென்றால், அவன் திட்டம் எல்லாம் விற்பனை பிரிவுக்கு உள்ளே நுழையும் வரைதான். அதன்பின் அவன் வாய் விலங்கிட்டது போலாகிவிடும். சாதாரண நாள்களில் இருப்பதைவிட அப்படித் திட்டமிட்ட நாள்களில் முகம் இன்னும் காய்ந்து இறுகிக்கொள்ளும்.
தான் இருக்கும் இடத்தில் அடுக்கப்பட்டிருக்கும் துணிகளை பார்க்காமல் எல்லோரும் கடந்து செல்வதாகவே நினைத்தான். எல்லோர் மீதும் எரிச்சலாக வந்தது. விற்பவன் எதையாவது பேசவேண்டும் என்று ஏன் கஸ்டமர்கள் நினைக்கிறார்கள்? பிடித்திருத்தால் துணியை வாங்கிச் செல்ல வேண்டியதுதானே. எதற்காக பேசிச் சிரிக்க வேண்டும். எல்லாமே அவனுக்கு விகாரமாகப்பட்டது.
அவனால் ஒருபோதும் கஸ்டமர்களை கவரமுடியாது என்று நினைத்த நிர்வாகம் எல்லா விற்பனை பிரிவுகளிலும் மலைமாதிரி குவிந்து கிடக்கும் துணிகளை மடித்து வைக்கும் வேலையை மட்டும் செய்தால் போதும் என்று விற்பனை பிரிவிலிருந்து மாற்றிவிட்டார்கள். நாளெல்லாம் துணிகளை மடித்து மடித்து அவன் மணிக்கட்டிலும் முழங்கையிலும் எப்போதும் நீங்காத வலி இருந்துகொண்டே இருந்தது....
உடன் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் சிநேகமாக பேச மறுப்பதும், யாரும் தன்னை விரும்பாதவர்களாக இருப்பதும் ஏன் என்றும் அவனுக்கு தெரியவில்லை. யாரும் தன்னிடம் நட்போடும் கைகுலுக்கி கொள்ளவில்லை என்பது அவனுக்கு பெரும் பாரமாக இருந்தது. இதுவரை முத்தத்தின் ஸ்பரிசத்தையும் அடையவில்லை என்று நினைக்கும்போது துக்கம் கழிவிரக்கமாகி உள்ளுக்குள் உடைந்து போனான். அந்த முதல் முத்தம் ஒரு பிச்சைக்காரியிடமிருந்தோ இல்லை ஒரு பைத்தியகாரியிடமிருந்தோ கிடைத்தால் கூட பரவாயில்லை ஆனால் அது வெகுவிரைவில் கிடைக்க வேண்டும் என்று நினைத்தான்.
எல்லோரும் எதன் நிமித்தமாகவோ விடாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள் பேசவிடாமல் தன்னைக் கட்டிப் போட்டிருப்பது எது என்றும் புரியவில்லை. எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு பெயிலானவர்கள் எல்லாம் அங்கே வாய்கொள்ளாச் சிரிப்பும் பேச்சுமாய் நிறைய ஆடைகளை விற்றுத் தீர்க்கிறார்கள். தான் படித்த டிகிரி இங்கே பேச்சற்று கேவலமாக மதிப்பிடப்பட்டு கிடக்கிறது. பேச்சுதான் எல்லாம் என்றால் படிக்காமல் சிறுவயது முதல் பேசுவதை மட்டுமே தகுதியாக வளர்த்திருக்கலாம். அதுவும் கொஞ்சம் பொய்யாக பேச பழகிவிட்டால் வாழ்க்கை சிரமம் இல்லாமல் கழியும் என்று தனக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டான்.
சங்கருக்கு விவரம் தெரிந்த நாளில் உடம்பெல்லாம் புண்களோடு ஒரு சிறு நகரத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தான். எங்கிருந்து எப்படி அங்கே வந்தான் என்று யாரும் அவனுக்குச் சொல்லவில்லை அவனும் யாரிடமும் அதைக் கேட்க விரும்பவில்லை. முன்பு இருந்த பசி என்ற ஒரு விசயம் இல்லை என்பது மட்டுமே அவனுக்கு விடுதலையாக இருந்தது. சீழ் ஒழுகிய புண் ஏற்படுத்திய வேதனையால் அவன் இரவெல்லாம் கத்திக்கொண்டிருந்தான். அவன் கதறல் எல்லோருடைய தூக்கத்தைக் கெடுப்பதாகவும் அப்படிச் செய்தால் மீண்டும் தெருவில் கொண்டு விட்டுவிடுவோம் என்று அவர்கள் சொல்ல அவன் பற்களை கடித்தபடி வலியைப் பொறுத்துக்கொண்டான்.
சீழ் வடிந்து புண் தழும்பாகிப்போனது. வலியடக்கி பழக்கப்பட்ட நாளில் தானாக யாரிடமும் போய் பேசுவதை நிறுத்திக்கொண்டான். யாராவது பேசினால் மட்டும் பதில் சொல்பவனாக இருந்தான். அங்கே இருந்தவர்கள் என்ன செய்யச் சொன்னார்களோ அதை மட்டும் செய்துகொண்டிருந்தான். நான்கு மூலைக்குள் படிப்பு நான்கு மூலைக்குள் தூக்கம் இதுமட்டுமே வாழ்க்கை என்றாகிப்போனது. வரிசையாக சாப்பாட்டுக்குச் செல்வது. வரிசையில் நின்று குளிப்பது இது மட்டுமே உலகத்தின் ஒழுக்கம் என்று அங்கே கற்பிக்கப்பட்டது. சொல்லிக்கொடுக்கும் பாடங்களை அவனால் கற்பனைக்குள் கொண்டு விரிவுபடுத்த தெரிந்திருக்கவில்லை. கண்களில் பார்க்காத எதையும் காட்சிக்குள் கொண்டுவரமுடியாமல் தவித்தான். படித்ததில் மூளைக்குள் தங்கிய கொஞ்ச வார்த்தைகளை பேப்பரில் எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டான். அரசு கல்லூரி, அரசு விடுதி என்று அவனுடைய கல்லூரி காலத்திலும் வாழ்க்கை குறுகிய இருந்தது. கல்லூரி படிப்பை முடித்ததும் மிகப்பெரும் ஜன நெரிசலில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பது கனவாக இருந்தது. ஆதவற்றோர் இல்லத்திலிருந்து ஒருநாள் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறி இந்த பெரு நகர வாழ்க்கைக்குள் கரைந்தான்...
2
அக்கா வீட்டில் இல்லாத சமயங்களில் எல்லாம் படுக்கைக்கு அழைக்கும் மாமாவை சமாளிக்க முடியாமல் ராஜலட்சுமியும், கொடுமைப்படுத்தும் சித்தியை தட்டிக்கேட்காமல் மௌனசாட்சியாக அமர்ந்திருக்கும் அப்பாவை சகிக்க முடியாத கவிதாவும் ஊரைவிட்டு வெளியேற முடிவு செய்தனர். ராஜலட்சுமிக்கும் பதினெட்டு வயதும் கவிதாவிற்கு பதினேழு வயதும் ஆகியிருந்தது.
இருவரும் ஒன்றாக கயிறுமில்லுக்கு பஸ்ஸில் ஏறி வேலைக்குச் செல்லும் நாளிலிருந்தது சிநேகிதிகளாக இருந்தனர். எப்போதும் சோகம் அப்பியிருக்கும் முகத்துடன் காணப்படும் அவர்களின் கற்பனை ஒன்றாக இருப்பதை கண்டுகொண்டனர். இந்த ஊருக்கு வெளியே எங்கோ தூர நகரத்தில் தங்களுடைய வாழ்க்கை சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்த அவர்கள் கிராமத்தைவிட்டு வெளியேறி சென்னை பஸ்ஸில் ஏறிய அன்று பெருமழை பெய்தது. பயண வழியெங்கும் கற்பனையைப் பெருக்கி ஆடையில் படிந்த ஈரவாசனையோடு கனவுகளை சுமந்து கோயம்பேடு பஸ்நிலையத்தில் வந்து இறங்கினார்கள்.
ஆதவற்றோர் இல்லத்திற்கு வாசகர்கள் நிதி அனுப்புமாறு நாளிதழில் வந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியை தேடிச் சென்றனர். அந்த ஆதவற்றோர் இல்லம் நகரத்திலிருந்து விலகி ஒதுக்குப்புறமாக இருந்தது. இருவரும் எட்டாம் வகுப்புவரை படித்திருந்ததால் நாளிதழில் குறிப்பிட்டிருந்த முகவரியை தேடிக் கண்டுபிடித்துச் சென்றுவிட்டனர்.
யாருமே இல்லாத அநாதைகளுக்கு மட்டும்தான் இங்கே இடம் என்று இல்லத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்களை வெளியே போகச்சொன்னார்கள். அதுமட்டும் இல்லாமல் அவர்களுக்கும் கிடைக்கும் நிதியில் ஏற்கனவே அங்கே தங்கியிருக்கும் ஆதவற்றோர்களை கவனிக்கவே போதவில்லை என்று கூறினார்கள். தங்களால் ஊருக்கு திரும்பிப் போகமுடியாது, தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்று இரண்டு பெண்களும் அழுது புலம்பி அங்கேயே உட்கார்ந்தனர். மனமிறங்கிய இல்லத்தினர் தங்க இடம்கொடுத்து அவர்களுக்கு தையல் பயிற்சி அளித்தனர்.
அதற்குபின் இரண்டு பெண்களும் தூங்கும் நேரத்தில் பெருங்கனவுகளை பேசிக்கொண்டிருந்தனர். அந்த இல்லத்தைவிட்டு வெளியேறி எப்போதும் வாகனங்கள் இரைந்தோடிக்கொண்டிருக்கும் நகரத்தின் மையத்தில் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆறுமாத காலத்தில் தையல் பயிற்சி முடித்த அவர்கள் பெரிய துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டி பகலெல்லாம் நகரத்தில் அலைந்துகொண்டிருந்தார்கள். அந்த மாதிரியான நேரங்களில் பைக்கில் ஆண்களை கட்டிப்பிடித்து பறக்கும் பெண்களை பார்த்து ஏங்கினார்கள். சினிமா தியேட்டருக்குள் உள்ளே போகாமல் வெளியே இருந்தபடி சந்தோசமாக பேசி சிரித்துக்கொண்டிருக்கும் மனிதர்களை உற்றுநோக்கினார்கள். அவர்களைப்போல் தங்களுடைய சந்தோஷம் எதில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியும் நோக்கில் அவர்கள் தேடுதல் நகர வீதிகளில், பிரமாண்டமான கட்டடங்களில், வாகன நெரிசல்களில் தொடர்ந்துகொண்டிருந்தது.
ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாத நிறத்தில் பாவாடை தாவணி அணிந்திருந்த பெண்கள் இருவரும் சங்கர் வேலைபார்த்த அந்த பிரமாண்டமான கடைக்குள் நுழைந்தார்கள். அந்தக் கடையில் வேலை கேட்பதே அவர்கள் நோக்கமாக இருந்தது. தாங்கள் அணிந்திருக்கும் கவனமில்லாத ஆடைகளை பார்த்து யாரும் வேலை தரமாட்டார்கள் என்று முடிவுசெய்து ஒரு புதுச் சுடிதாரை வாங்கும் பொருட்டு அந்த கடைக்குள் நுழைந்தார்கள்.
அன்று சுடிதார் செக்ஷனில் தள்ளுபடி போட்டதால் பெருங்கூட்டமாக இருந்தது. துணியை மடித்துக் கொண்டிருந்த சங்கரை கஸ்டமர்களை கவனிக்குபடி அங்கே அனுப்பினார் சூப்பர்வைஸர். அதை நிரந்தரமாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் வரிசையாக தொங்கவிடப்பட்டிருக்கும் துணிகளுக்கு மத்தியில் புன்னகையை வரவழைக்கும் பாவனையில் நின்றுகொண்டிருந்தான். முந்நூறு ரூபாய் மதிப்புள்ள சுடிதார் எண்பது ரூபாய் என்று போடப்பட்டிருந்த சுடிதார் செக்ஷனுக்கு வந்த பெண்கள் எல்லாம் துணியில் தரத்தை பார்த்துவிட்டு அந்த இடத்தைக் கடந்துகொண்டிருந்தார்கள்.
இவனிடம் எதுவும் பேசாமல் எண்பது ரூபாய் சுடிதார்களை ஆசையோடு வெகுநேரம் தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்த ராஜலட்சுமியும் கவிதாவும் ஆளுக்கொரு சுடிதாரை தேர்வு செய்து பில்போடுமாறு அவனிடம் கொடுத்தனர். அவர்கள் இருவருக்கும் அந்த சுடிதார் பொருத்தமாக இருக்கும் என்று அவன் சொல்ல நினைத்தான். பின்பு எதுவும் சொல்லாமல் கவுண்டரை நோக்கி அவன்போக பின்னாடியே போன இருபெண்களும் தங்களிடம் இருந்த பணத்தை தேடித் தடவிக் கொடுத்தார்கள். பஸ்ஸுக்கு செல்ல பணம் மீதமிருக்கிறதா என்பதை பலதடவை உறுதிசெய்த பின்னரே பணத்தைக்கொடுத்தார்கள். அவர்கள் சிரித்த முகத்தோடு பையை வாங்கிச் செலவதையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
முன்பு போல் இல்லாமல் கொஞ்சம் சுமாராக துணிகளை விற்பனை செய்திருப்பதால் சங்கர் இனி தன்னை விற்பனை செக்ஷனிலே போடுவார்கள் என்று நம்பினான். ஆனால் அடுத்த நாளும் அவனை துணியை மடித்துவைக்குமாறு சூப்பர்வைஸைர் சொல்லிவிட்டார். கொஞ்ச நேரம் பதில் சொல்லாமல் அவர் கண்களையே பார்த்துக்கொண்டிருந்த சங்கர் ,தன்னால் நிற்க முடியவில்லை மயக்கமாக வருகிறது இன்று விடுமுறை வேண்டுமென்று கேட்டான். கீழேபோய் மேனேஜரிடம் கேட்டுவிட்டு போகுமாறு சொன்னார்.
அவன் கீழே இறங்கி செல்ல, அங்கே நேற்று சுடிதார் வாங்கிச் சென்ற பெண்கள் அந்த சுடிதாரை அணிந்துகொண்டு மேனேஜரிடம் தங்களுக்கு இந்தக் கடையில் வேலை கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவன் நினைத்தது போலவே அந்த பெண்களுக்கு சுடிதார் பொருத்தமாக இருந்தது. உடனடியாக அதை அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தான். இவன் நிற்பதை பார்த்த மேனேஜர் மிகக் கேவலமாக முகத்தை வைத்துக்கொண்டு என்ன என்று கேட்டார். இவன் விவரம் சொல்ல, செய்யுற வேலைக்கு லீவு வேற... போ என்று அவமரியாதையாக அனுப்பி வைத்தார். இதற்குமேல் இங்கே வேலையைத் தொடரமுடியாது என்று அவனுக்குத் தோன்றியது. வாங்கும் சம்பளம் தங்கும் இடத்திற்கு சாப்பாட்டுக்குமே போதவில்லை. சேமிப்பு என்று எதுவுமில்லை. பணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்தபடி அங்கிருந்து நடந்தான். 'இங்கே வேலை எதுவும் இல்லமா' என்று கறாரான குரலில் மேனேஜர் கத்த அந்த பெண்கள் இவனை பின்தொடர்ந்து கடையை விட்டு வெளியேறினார்கள்.
எங்கே போவது என்று தெரியாமல் பஸ் ஸ்டாண்ட்டில் சிமெண்ட் திட்டில் அமர்ந்து ஒவ்வொரு பஸ்ஸாக கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்த சங்கர் ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறிக்கிளம்பினான். புகையோடு வெக்கையைக் கிளப்பிக்கொண்டு சென்ற பஸ்ஸின் ஜன்னல் ஓரத்திலிருந்து பார்த்தான் அந்த பெண்கள் இருவரும் பஸ்ஸ்டாண்டில் சிமெண்ட் திட்டில் அமர்திருந்த இரண்டு இளைஞர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படியே பஸ்ஸிலிருந்து இறங்கி அவர்களிடம் பேசலாமா என்று யோசித்தான். ஏனோ அந்தப் பெண்கள் அவனுக்கு மிக நெருக்கமான தோழிகளைப்போல் தோன்றினார்கள். அவன் யோசிக்கும்போதே பஸ் அங்கிருந்து நகர்ந்து தன் பங்குக்கு நகரத்தின் வெப்பத்தை கூட்டியபடி பாலத்தின் மேலே போய்க்கொண்டிருந்து. அவன் பெயர் தெரியாத நிறுத்தங்களில் பஸ்ஸிலிருந்து இறங்கி ஏறிக்கொண்டிருந்தான். மீண்டும் பஸ், ரயில் என மாறி மாறி வெறிகொண்டு அலைந்தான் .
நகரம் விரித்த வலையில் வசமாக மாட்டிக்கொண்டதாக நினைத்த அவன் பயணம் இலக்கில்லாமல் சென்றுகொண்டிருந்தது . ஓயாமல் எங்கேயோ நடந்து போய்க்கொண்டிருக்கும் மக்கள். நிரம்பி வழியும் ரயில், பஸ் நிலையங்கள். இரவெல்லாம் ஒளிரும் விளக்குகள் இப்படி எல்லாம் அவன் வாழ்வை மாற்றிவிடும் என்றிருந்தான். நாள்கள் செல்ல செல்லத்தான் நகரத்தின் சூழ்ச்சி புரிந்தது. தன்னைப்போல் தனிமை கொண்டு அலையும் மனிதர்களையும் நகரம் விடாமல் பிடித்திருக்கிறது என்பதையும் அதே ரயில், பஸ் நிலையங்களின் மதிய வேளைகளில் கண்டுகொண்டான். தனித்துவிடப்பட்ட பிச்சைக்காரன், பிச்சை எடுப்பவனையே பார்த்துக்கொண்டிருக்கும் மனிதன், ஒவ்வொரு ரயிலையும் தவறவிட்டு தண்டவாளங்களை வெறித்தபடி பார்த்துக்கொண்டிருக்கும் பெண் என்று கைவிடப்பட்டவர்களை நகரம் தன்னுள் வைத்து சிரித்துக் கொண்டிருக்கிறது.
வெயில் நீங்கிய மாலையிலும் வெம்மை தாக்கிக்கொண்டிருந்தது. வியர்வையில் நனைந்து உப்பு பரிந்த சட்டை கசகசப்பையும் அரிப்பையும் தந்தது. நிராகரிப்பின் வலி அவனை உள்ளுக்குள் கிளர்தெழச் செய்தது. முழுதாக வெளிச்சம் மறையக் காத்திருந்தான்.
பஸ் ஸ்டாண்டில் பார்த்த இளைஞர்கள் வேலை வாங்கித் தருகிறோம் என்று சொல்ல ராஜலட்சுமியும் கவிதாவும் அவர்களுடன் சென்றார்கள். எக்ஸ்போர்ட் கம்பெனியிலே நாளைக்கே வேலை கிடைச்சுடுமா என்று நம்பமுடியாதவளாய் திரும்பத் திரும்ப அந்த இளைஞர்களைக் கேட்டுக்கொண்டே வந்தாள் கவிதா. ரோஸ் கலர் சட்டை போட்ட இளைஞன் தனக்கு காதலனாக கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த ராஜலட்சுமி அவன் பெயரைக் கேட்டாள். அவன் அவள் கைகளை பிடித்து சுரேஷ் என்றான். அவள் கைகளை பின்னால் இழுத்து வெட்கத்துடன் சிரித்துக்கொண்டாள். நீல கலர் பனியன் அணிந்த இளைஞன் கவிதா கேட்காமலே என் பேர் ரமேஷ் என்றான். இரண்டு பெண்களும் ஏதோ ஜோக்கை கேட்டது போல் சுரேஷ், ரமேஷ் என்று அவர்களின் பெயர்களைச் சொல்லி சிரித்தார்கள். பின்பு நகரத்து காதலர்களைப்போல சினிமாவுக்கு போனார்கள். இளைஞர்களை தங்கள் காதலர்களாக நினைத்துக்கொண்ட பெண்கள் படம்பார்க்கும்போது கைகளை பிடித்துக்கொள்ளச் சம்மதித்தார்கள். இடைவேளையில் ஐஸ்க்ரீம் வாங்கிச்சாப்பிட்டார்கள்.
கடற்கரை, ஸ்பென்சர் என்று நேரம் போவது தெரியாமல் இளைஞர்களின் பின்னால் போய்க்கொண்டிருந்தார்கள். அந்த பெண்களுக்கு நகரம் மிகச் சுதந்திரமானதாகத் தெரிந்தது. இருட்டில் நகரம் இன்னும் அழகாக இருப்பதாக நினைத்தார்கள். நகரத்தின் நடுவில் ஓடிய கூவம் ஆறும், அதைச் சுற்றிய குடிசைகளும், பழைய அடுக்குமாடிக் கட்டடங்களும் அவர்களுக்கு வசீகரமாகவே தெரிந்தன. நகரத்தின் மாயவலைகள் கால்களைச் சுற்ற, புதிர்களை அவிழ்க்கும் விடையாக இரவை நினைத்தார்கள்.
இருட்டின் நிறமும் நகரத்தின் வெளிச்சமும் சங்கரின் தனிமையை அதிகப்படுத்தியது. இனி யாரிடமும் கைகட்டி நின்று பேசி சிரிச்சு வேலை பார்க்க கூடாது. ஆனால் பணத்தை எப்படியாவது சம்பாதித்து விடவேண்டும் என்று முடிவெடுத்தான் சங்கர். வெளிச்சம் குறைந்த நகரத்தின் புறநகர் பகுதியில் யாருக்கோ காத்திருப்பதைப்போல் இருட்டில் நின்று தன்னைக் கடந்து செல்லும் பெண்களின் கழுத்தை பார்த்துக்கொண்டிருந்தான். ஒடிசலான தேகம் கொண்ட ஒரு பெண் ரோட்டில் நடந்து செல்கிறோம் என்ற பிரஞ்ஞையே இல்லாமல் போய்க்கொண்டிருந்தாள். பஸ் நெரிசலில் பின்னால் நின்று இடித்தவனின் கோர முகமோ, புழுக்கம் குடிகொண்டிருக்கும் சமையல் அறையின் வாசனைபற்றியோ, அல்லது ராத்திரி படுக்கையில் கேட்கப்போகும் கணவனின் வசைச்சொல்லோ ஞாபகத்தில் வந்து அவளை கலக்கமுறச் செய்திருக்கலாம். தன் கழுத்தில் விழுந்த கைச் செயினை அறுத்துக்கொண்டு ஓரடி முன் வைக்கும்வரை அவள் எதையும் உணரவில்லை. அந்தப் பெண்ணைத் திரும்பி பார்த்தபடி ஓடத்துவங்கினான்.
அவள் கண்களில் தெரிந்த மிரட்சியையும் சோகத்தையும் பார்த்த அவனால் வெறிகொண்டு ஓட முடியவில்லை. நடை தளர்ந்தது. அவன் பின்னால் கூக்குரலுடன் ஆட்கள் ஓடிவந்துகொண்டிருந்தார்கள். எப்படி கீழே விழுந்தோம் என்றே தெரியாமல் அவன் முதல் திருட்டில் பிடிபட்டான். அன்று முழுதும் அவன் சாப்பிட்டிருக்கவில்லை.
புறநகர் காவல் நிலையத்தில் பிளந்த உதடுடன் மூலையில் உட்கார்ந்திருந்தான். அவன் கடையில் சுடிதார் வாங்கிய ராஜலட்சுமியும் கவிதாவும் கிழிந்த நாராய் அவன் பக்கத்திலிருந்த மரபெஞ்சில் கிடத்தப்பட்டனர். நேற்று முழுவதும் அந்தப் பெண்களுடன் சுற்றிய முன்பின் தெரியாத அந்த இளைஞர்கள், நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் ரயில்வே தண்டவாளத்தின் பின்புறமிருந்த புதருக்கு அடியில், இரு பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதோடு அடங்காத வெறிபிடித்த நாய்கள் அவர்களின் மற்ற நண்பர்களையும் வரவழைத்து பெண்களை நாசம் செய்திருக்கிறார்கள். அந்தப் பெண்கள் தங்கள் சக்தியெல்லாம் ஒன்று சேர்த்து கத்த பக்கத்தில் செங்கல் சூளையில் வேலை பார்த்தவர்கள் வந்து காப்பாற்றி இருக்கிறார்கள்.
'எவன் கூப்பிட்டாலும் பின்னாடியே போயிருவீங்களா? அப்படி உடம்பு தெனவு எடுத்து போய் திரிஞ்சிருக்கீங்க...இன்னும் வாய் கூசும் கெட்ட வார்த்தைகளால் பெண் காவலர்கள் இருபெண்களையும் ஏசினார்கள். கூனி குறுகி அவமானத்தில் நெளிந்த பெண்களின் கண்களிலிருந்த கனவு முற்றிலுமாக தொலைந்திருந்தது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சங்கரை போலீஸ் வேனில் ஏற்றினார்கள். அவனுக்கு எதிர் இருக்கையில் ராஜலட்சுமியையும் கவிதாவையும் அமரவைத்திருந்தார்கள்.. தன்னை துணிக்கடையில் பார்த்தது அந்த பெண்களுக்கு ஞாபகத்தில் இருக்க வாய்ப்பில்லை என்றே அவனுக்குத் தோன்றியது. அவர்கள் உணர்விழந்து நொறுங்கிக்கிடந்தார்கள். அந்தப் பெண்களை பெண் காவலர்கள் அரசு மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றார்கள். இப்போது நகரம் அவர்களுக்கு சாப இடமாக காட்சியளித்தது. நகரத்தின் எந்த மூலையிலிருந்தும் கொடும் வாள்கள் தங்கள் மீது பாய்ச்சப்படலாம் என்று பயப்பட்டார்கள்.
நேற்று பஸ்ஸிலிருந்து இறங்கி அந்தப் பெண்களிடம் பேசியிருந்தால் இன்றைய நிகழ்வு எதுவுமே நடந்திருக்காது என்று சங்கர் நினைத்தான். நகரத்தின் தார்ச்சாலையெங்கும் அவன் தனிமையையும் பயத்தையும் பரப்பியபடி வாகன நெரிசலில் போய்க்கொண்டிருந்தது போலீஸ் வேன். இன்னும் இன்னும் மனிதர்களை உள்ளிழுக்கும் வசீகரத்துடன், பரபரப்பாகவும் பகட்டாகவுமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது நகரம்.
கருமேகங்களுக்குள் நுழைந்து நுழைந்து தேடியும்,என்னைத் தன் போக்கில் இழுத்துச்சென்ற, ரெக்கைகள் மிக நீளமாக இருக்கும் அந்தக் கருஞ்சிகப்பு வண்ணப் பறவையைக் காணவில்லை. தன் ரெக்கை விரித்தலின் நிழலிலேயே என்னைப் பின் தொடர்ந்து பறக்கச் சொல்லும் அப்பறவையோடு நான் எப்போதிலிருந்து உடனிருக்கிறேன் என்பது ஞாபகத்தில் இல்லை. ஆனால் அதனோடு இருக்கும் காலத்திலிருந்தே என் ரெக்கைகள் குட்டையாகவே இருக்கின்றன. என் வெண் ரெக்கைகள் வளர வளர கருஞ்சிவப்பு பறவை வெட்டி காற்றில் உதிர்த்துக் கொண்டிருக்கிறது. மிகக் குறுகிய எல்லைக்குள் பறக்க ஏதுவாக மட்டுமே என் ரெக்கைகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறன. வான் அண்டத்தில் ஒரு எல்லையை வகுத்து நீ இதற்குள் தான் பறக்கவேண்டும். இந்த எல்லைகளைத் தாண்டிப் போகக்கூடாது என எச்சரிக்கை விடுத்து எங்கயோ பறந்து சென்று திரும்பி வரும் அந்தக் கருஞ்சிகப்புப் பறவை. அப்படி அது சென்று திரும்பி வரும்போதெல்லாம் அதன் அலகுகளில் எனக்கான இரை இருக்கும். ஏதேனும் ஒரு மேகத்தில் வைத்து அந்த இரையை உண்பேன். கூடு கட்டுதல் பறவையின் சோம்பேறித்தனம் என கருஞ்சிகப்பு பறவை எனக்கு கற்பித்திருந்தது. எனக்கென்று ஒரு கூடு இல்லை. நான் அதனோடு இணைந்து பறத்தலைத் தவிர வேறு ஏதும் அறியாததாக இருந்தேன். பறந்து பறந்து என் சிறகுகள் சோர்ந்து போகும் போது கருஞ்சிகப்பு பறவை என்னை தன் சிறகுகளுக்குள் பொதிந்து மூடி..எங்கோ அழைத்துச் செல்லும்.அந்தப் பயணம் முழுவதும் என் கண்களுக்கு இருளின் நிறம் மட்டுமே பரிட்சயமாகி இருக்கும்.பிறகு கருஞ்சிகப்பு பறவை தன் பறத்தலை ஓரிடத்தில் நிறுத்தி தூங்கும். அதன் பிறகும் தன் சிறகு கூட்டிலிருந்து என்னை விடுவிப்பதில்லை. அதன் ரெக்கைக்குள் இறுக்க மூடி என்னையும் தூங்கச் சொல்லும். அப்போதெல்லாம் என் மூச்சு அழுந்திக்கொண்டிருக்கும். மூச்சடைந்து குறுகி ஓய்வெடுப்பதைவிட சிறகுகள் ஓய இடைவிடாது பறந்ததலே மேல் என்று தோன்றும். மீண்டும் இருள் விலகி வெளிச்சம் வரும் போது நாங்கள் மேகக் கூட்டத்திற்குள் மிதந்து கொண்டிருப்போம். அப்போது என் மூச்சு சீராக இயங்கும். .
என் பறத்தல் எப்போதும் நிர்பந்தங்களின் எல்லைகளுக்கு உட்பட்டே நிகழ்ந்து கொண்டிருந்தது. நான் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டும், அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்துமே பறந்து கொண்டிருந்தேன். என் சிறகுகள் ஓய்ந்து போயின. வான் எல்லையை கடந்து எதையும் நான் அறியாது இருந்தேன். என்னை தன் வெளிகளை விட்டு விலகிச் செல்லாமல் கண்காணிப்பதிலேயே கருஞ்சிவப்பு பறவை தன் தூக்கம் இழந்தது. எப்போதாவது நான் அதன் வெளியே துறந்து பறக்க எத்தனித்தால் என் சிறகுகள் இன்னும் குட்டையாக்கப்படும். சில சமயங்களில் அதன் கோபம் அதிகரித்தால் என் சிறகுகள் வன்மத்தோடு பிடுங்கப்படும். அப்போதும் என் சிறகிலிருந்து தெறிக்கும் ரத்தம் வெண் மேகங்களில் சிதறிப் பறக்கும். அந்த வலி அறிந்து என் பறத்தலை குறுக்கியே வைத்திருந்தேன். கருஞ்சிகப்பு பறவை மீண்டும் மீண்டும் என்னைத் தனியே விட்டுவிட்டு இரை தேடப்போகும். காலநேரம் இல்லாமல் என் பொழுதுகள் வெறும் பறத்தலிலும், அது கொண்டு வரும் இரைக்கான காத்திருத்தலிலும் கழிந்தன. எனக்கான உணவை நானே தேடிக்கொள்ள ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதில்லை.
ஆயினும் அதன் மீதான நேசத்துடன் பறந்து பறந்து சிறகுவிரித்தேன். இந்த பறத்தலில் தரை இறங்காமல் போனாலும் பரவாயில்லை. அதனோடு சேர்ந்து பறக்கும் பொழுதுகளில், அந்தரம் மிக அழகாக தெரிந்தது. வலி பழகிப் போனது. என் தரை தொடா பறத்தல் எல்லையற்றது என்ற கர்வத்தில் இருந்தேன். ஒரு நாள்...அதனை பின்தொடர முடியாததொரு பொழுதில் திசையறியாத என்னை தனியே விட்டுவிட்டுப் போய் விட்டது. நான் இளைப்பார இடம் தேடித் தேடி அலைந்தேன். என் ரெக்கைகளுக்கு தரையின் தூரம் தெரியவில்லை. பூமியின் எல்லைக்கெட்டாத தொலைவில் அது என்னைத் தொலைத்துவிட்டு சென்றுவிட்டது. பூமி மிக மிக தொலைவில் இருக்குமெனத் தோன்றியது. என் கால்கள் வலியில் சுழன்றது. பறக்க இயலாமல் போனால் அது பறவை இல்லை என அது எனக்கு கற்றுக் கொடுத்திருந்தது. அதன் பொருட்டே தரை இறங்கப் பயப்பட்டேன். என் வானில் அதுவன்றி வேறெந்த பறவையையும் நான் அதற்கு முன் அறிந்திருக்கவில்லை..தனித்த ஒற்றைப் பறத்தல் எனக்கு அயர்ச்சியூட்டியது. இரையின்றி வெறும் காற்றாய் பறந்தது என் உயிர். என் வெள்ளைச் சிறகுகள் பொசுங்கிப் போகும் அளவிற்கு நான் தாகத்தோடு செத்து விழுவது என்ற முடிவோடு தீராத தவிப்போடு காற்றின் வேகத்தைவிட சுழன்றடித்துப் பறந்தேன்.
என் தேடல் வீண் போகவில்லை. தூரகருமேகங்களுக்கு மத்தியில் அது நுழைவதை பார்த்துவிட்டேன். மிச்சமிருந்த என் உயிரை ஒன்று திரட்டி நான் என் கருஞ்சிகப்பு பறவையை நோக்கிப் பறந்தேன். கரு மேகங்களிலிருந்து சில மஞ்சள் இறகுகள் விழுந்தன.கருஞ்சிகப்பு பறவை என் பார்வை தவிர்த்து பறக்க முயன்றது. நான் அதன் பறத்தலின் பாதையில் வழி மறித்து நின்றேன்.’’இளைப்பாறுதலை என் சிறகுகள் யாசிக்கின்றன. என் இரைப்பை வெறும் காற்றால் நிரம்பி இருக்கிறது.என்னை அழைத்துச் செல்.உன் வழி காட்டுதல்களின்றி எனக்குப் பாதைகள் இல்லை. வானம் மட்டுமே அறிந்த என்னால் தரை தொட முடியவில்லை .என் சிறகுகளை,என் வாழ்வை,மிச்சமிருக்கும் என் கனவுகளை உன்னிடமே ஒப்படைக்கிறேன்.என்னை தூக்கிச்செல்' என்றேன்.
என் உயிர் காக்கும் பொருட்டு கருஞ்சிவப்பு பறவையின் நீள ரெக்கைகளை பிடித்துக்கொள்ள முயற்சித்தேன். என்னை உதறித் தள்ளிய அது 'இனி உன் பாதைகளை நீயே வகுத்துக் கொள்.என் எல்லைகளை கடந்து போ..நான் உன்னை வெறுக்கிறேன்.உன் மீதான பற்றுதல் என்பது கடந்த காலம்.போய் வா' என்றது. ஏன் இத்தனை வெறுப்பு..என்னை கடந்து போவதற்கான காரணம் என்ன. உன் சொல்படிதானே ரெக்கைகளை குட்டையாக்கி வலியோடு பறந்துகொண்டிருக்கிறேன். என் மீதான் குறை என்ன' என்று கேட்டேன். '.வெண்மையை நான் வெறுக்கிறேன் இப்போதெல்லாம் எனக்கு மஞ்சள் நிறம்தான் பிடித்ததாக இருக்கிறது. இன்னும் சொல்வதானால் வெண்மை என்பது ஒரு நிறமே அல்ல..'என்றது. உலகத்திலே தனக்கு பிடித்த நிறம் வெள்ளை நிறம் என்றும். தனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே வெள்ளை மிகப்பெரும் மயக்கத்தைக் கொடுக்கும். உன் நிறத்திற்காகவே உன்னைச் சில முரட்டு பறவைகள் கபளிகரம் செய்துவிடும்.உன்னைப் பாதுகாக்கவே எப்போதும் உன்னை என் சிறகுக்குள்ளே வைத்திருக்கிறேன் என்று கூறியிருந்தது. இப்போதோ என் வண்ணத்த்தை பொருளற்றதாக்கி, தன் சிறகுக்குள் மஞ்சள் வண்ணப் பறவையைத் தூக்கிக் கொண்டு என் பார்வையை கடந்து வெகு தூரம் சென்று மறைந்தது. ஒன்று மட்டும் எனக்கு அப்போது புரிந்தது. கருஞ்சிவப்பு பறவைக்கு, ஒரு நாள் மஞ்சள் பறவையும் நிறமற்றதாகிவிடும். மஞ்சள் பறவையும் என்னைப் போல மொன்னையாக்கப்பட்ட சிறகுடன் தனித்து திரியும்.
இனி என் வாழ்வில் கருஞ்சிகப்பு பறவை இல்லை என்று நான் உணர்ந்தபோது வானம் நீல நிறம் கொண்டிருந்தது. என் தனித்த இலக்கற்ற பறத்தல் அப்போது துவங்கியது. எல்லைகளைக் கடந்து நான் கண்களை மூடியபடி பறக்கத் துவங்கினேன். திசைகள் அறியா என் சிறகுகள் தரையைத் தேடித் தேடிக் களைத்தன. நீண்ட பறத்தலுக்குப் பிறகு.. என் பார்வை தூரத்தில் நீளமான நீலச்சிறகுள்ள பெயர் தெரியாத பறவை ஓன்று பறந்து கொண்டிருந்தது. என் கடந்தகால பறத்தலில் ஒரு போதும் சக பறவைகளைப் பார்க்க நான் அனுமதிக்கப்பட்டதே இல்லை. அந்த நீலப் பறவை என் அருகே வந்தது.’ ரொம்ப நேரமாகப் பார்க்கிறேன்.ஏன் அலைந்து கொண்டிருக்கிறாய்’ என்றது’. 'நான் தரை தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன். என் ரெக்கைகள் முழுவதுமாக உதிர்ந்து என் உடல் கூடாகும் வரை பறப்பேன்' என்றேன். 'என்ன பைத்தியக்காரத்தனம் இலக்கற்று,திசையற்று பறந்து கொண்டிருந்தால் ஒரு நாளும் தரை தொட முடியாது' என்று உனக்குத் தெரியாதா என்றது அந்த நீலப் பறவை. நான் மௌனமானேன். 'நீ தரை பார்த்ததே இல்லையா'. 'இல்லை' என்றேன். ’உனக்கு தாகமே எடுக்காதா?தண்ணீர் வேண்டாமா? 'இரையை எப்படிக் கண்டடைவாய்' என்றது. 'எல்லாம் கருஞ்சிவப்பு பறவை தரும்' என்றேன். 'இப்போ அது எங்கே'. 'என்னை அநாதரவாக விட்டுச் சென்று விட்டது'. 'உன்னை பார்த்தால் பாவமாக இருக்கிறது' என்று கூறிய நீலப்பறவை. 'பறவையின் சுதந்திரமே அது தனித்து உணவு தேடுவதும், தன் வீட்டை தானே கட்டிக்கொள்வதும்தான். வானம் என்பது பறவையின் பயண வெளி. பறத்தலில் சுதந்திரம். அது வாழ்விடம் அல்ல.நீ தரை தொட வேண்டும். காற்றை உந்தித் தள்ளி தரையிலிருந்து வானம் தொடும் பறத்தல் சாகசமானது. அதேபோல் வானியிலிருந்து தரை தொடுவது காற்றில் மிதக்கும் பேரானந்தம். சமதளத்தில் பறப்பது பறத்தலே அல்ல' என்றது நீலச்சிறகு பறவை.
’வானம் அளவிற்கு பூமியும் அழகு. பூமியின் அழகைப் பார்க்கவேண்டுமென்றால், நீ தரை தொட வேண்டும்.தரை தொடாத பறத்தல் முற்றுப் புள்ளியற்றது. தரை தொடாத வான் பறத்தலில் நீ பார்த்தது என்ன.நீ அடைந்தது என்ன.’.நீலப் பறவை இந்த கேள்விகளை என் முன் வைத்தது.‘வெண் மேகம் பார்த்திருக்கிறேன், மழை பார்த்திருக்கிறேன். சிலபொழுது வானவில்,நீல ஆகாயம்,எப்போதாவது செவ்வானம்,கரும் இருள்.அதிகாலை மஞ்சள் வானம்.’.நான் சொல்லச் சொல்ல நீலப் பறவை சிரித்தது. ‘சுருக்கமாகச் சொல் வானும், வான் சார்ந்தவையும் பார்த்திருக்கிறாய்.மழை அறிந்த நீ, மழை தரும் மண் வாசம் அறிந்திருக்கிறாயா?மழை தரும் பசுமை அறிந்திருக்கிறாயா?மழை தரும் பூக்கள் அதன் வாசம்.காட்டருவி,அதன் சங்கீத இசை' நீலப் பறவை நான் அறியா பல அழகியலை எனக்கு சொல்லிக்கொண்டிருந்தது. அதன் ஒவ்வொரு வர்த்தைகளுக்குள்ளும் ஒரு புன்னகை இருந்தது.நீ தரை இறங்கியாகவேண்டும் என அது கட்டளை இடவில்லை. தரை இறங்கவில்லைஎன்றால் உனக்கு வாழ்க்கை இல்லை என அச்சுறுத்தவில்லை.தரை இறங்கும் பயத்தை போக்கியது. பூமி பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது.
சிறகுகள் இருப்பது மேலே மேலே பரப்பதற்குதானே தவிர தரை இறங்குவதற்கு இல்லை என்றே நான் கற்பிக்கப் பட்டிருந்தேன். என் தவறான கற்பிதங்களை நீலப் பறவை எனக்கு புரிய வைத்தது.நான் நீலப் பறவையோடு தரை இறங்க எத்தனித்தேன். தரை நோக்கி நான் பறக்கும் முதல் பறத்தல். உயரப் பறத்தலும், சரிசமமாகப் பறத்தலுமே அறிந்த என் சிறகுகள் முதல் முறையாக கீழ் நோக்கி பறக்கத்துவங்கியது.
தாளப் பறத்தல் என்னுள் ஏதோ செய்தது. அடி வயிற்றில் ஒரு பயப்பந்து சுழன்றது. ஆனால் அது சுகமாக இருந்தது. என் தடுமாற்றத்தை அறிந்த நீலப் பறவை தன் வேகத்தை குறைத்து என் வேகத்திற்கு வந்து எனக்கு வழிகாட்டியது.
மிகப் பெரிய அடர்ந்த காட்டில் ஓடுகிற காட்டாற்றின் கரையில் தரை இறங்கினோம். நீலங்களும்,நீலம் சார்ந்த நிறங்களும் பழகிய.. என் விழிகளுக்கு காட்டின் பசுமை புதியதாக இருந்தது.காட்டு மரப்பூக்களின் நறுமணங்கள், மண் வாசம், நான் அறிந்திராத வித விதமான வண்ணங்கள்.தரை இறங்கிய என் கால்கள் தரை தொடவில்லை.எனக்கே எனக்கான வெளிகளில்..எனக்கே எனக்கான இசை உலகில்..என் சுதந்திரத்தின் முதல் புள்ளியில் நான் காலடி எடுத்து வைத்தது போல இருந்தது.குயிலின் பாடல், மயில்களின் நாட்டியம்,சில்வண்டுகளின் ரீங்காரம், அருவிச்சத்தம், இத்தனைக்கும் மத்தியில் என்னை தரை இறக்கிவிட்டு..'விரும்பியபடி வாழ்..உன் சுதந்திரம் உன் சிறகுக்குள் இருக்கிறது. நடக்க நினைத்தால் நட, பறக்க நினைத்தால் பற' என்றது.
நான் அதன் முன்னே என் சிறகுகளை விரித்து நின்றேன். நீலப்பறவை என்னை வினோதமாகப் பார்த்தது.'என்ன' என்றது. 'என் சிறகுகளை வெட்டிக்கொள்' என்றேன்.புரியாமல் பார்த்தது அந்த நீலப்பறவை. 'என் வாழ்வியலை இதற்கு முன் தீர்மானித்த பறவை,வளர வளர என் சிறகுகளை வெட்டிக் கொண்டே இருந்தது. இப்போது நீ எனக்கான வாழ்விடத்தை அடையாளம் காட்டி இருக்கிறாய் நீயும் என் சிறகுகளை வெட்டிக் கொள்' என்றேன். அது மௌனமாக புன்னகைத்தது. ரெக்கைகள் வெட்டப்படுவதன் வலி நானும் அறிந்திருக்கிறேன். தீராத துயரமாய் வலி தொடர்ந்த போது நான் என் சிறகுகளை காப்பாற்றிக் கொண்டேன். கூடு கட்டுவதும், உணவு தேடுவதும், விரும்பும் இடத்தில் பறப்பதும் வாய்க்கப்பெற்றிருப்பது இயற்கை பறவைகளுக்கு தந்த சுதந்திரம். இனி ஒருபோதும் யாரும் உன் சிறகுகளை வெட்ட அனுமதிக்காதே.
நாங்கள் நடந்த பாதையெங்கும் சிறகுகள் உதிர்ந்து கிடந்தன. என் சிறகுகளைப் போல் யாரோ ஒரு பறவையின் சிறகுகளை வெட்டி எரிந்திருக்கிறார்கள் என்ற அச்சம் என்னுள் எழுந்தது. 'தரையிலும் சிறகுகள் வெட்டப்படுமா' என்று அச்சத்தோடு கேட்டேன். உன் உரிமையையும், சுதந்திரத்தையும் நீ அறியாமல் இருந்தால் வான், பூமி என்று இல்லை பேரண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் உன் சிறகுகள் வெட்டப்படலாம். ஆனால் இவை வெட்டப்பட்ட சிறகுகள் அல்ல. உதிர்ந்த சிறகுகள். சிறகுகள் உதிர்ப்பது பறவைகளின் சுதந்திரம்'எனச் சொன்னது நீலப் பறவை . கருஞ்சிகப்புப் பறவை அன்பை ஒரு அச்சுறுத்தலாகவே என்னிடம் காட்டியிருக்கிறது.என் சிரம் வருடி,என்னை மடியில் கிடத்தி ஒரு ஆறுதல் மொழிகளை என் செவிகளுக்குள் மாயச் சொற்களாய் ஒலிக்கச் செய்து என் மயக்கத்தினூடகவே என் சிறகுகளை வெட்டி எறிந்திருக்கிறது.சொற்களின் சூட்சுமம் அறியாத என் பேதைமை அதன் வார்த்தைகளை நம்பியிருக்கிறது. 'சிறகுதிர்த்தல் பறவையின் சுதந்திரம்'. நீலப் பறவையின் சொற்கள் என் செவிகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.விலாப்புறம் இருந்த என் வெட்டப்பட்ட சிறகுகளைப் பார்த்தேன். இந்த சிறகுகள் வளரும் வரை பூமியில் இருக்க வேண்டும். வளர்ந்த சிறகுகளை சுதந்திரமாக உதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உன் சுதந்திர வாழ்வினை தீர்மானித்துக்கொள் என்று என்னிடமிருந்து விடைபெற்ற நீலப் பறவையிடம் வெண்மை என்பது நிறமில்லையா? எனக் கேட்டேன்.
'எல்லா நிறங்களின் மூலமும் வெண்மைதான். வெண்மை கலப்பில்லாமல் எந்த நிறமும் உலகில் இல்லை. வெண்மை வெறும் நிறமல்ல..அது அழகின் பொருள். சுதந்திரத்தின் முழுவடிவம். அருவி,நிலா,வெண்மேகம்,பூக்கள், தேவதை சிறகுகள்,எல்லாமே வெண்மைதான்' என்றது. என் சிறகுகள் வெண்மைதான் என்றேன். 'ஆம் அது தேவதையின் சிறகுகள்' என்றது நீலப் பறவை. மெல்லிய காற்று வீசியது.நீலப் பறவை தன் நீள் சிறகுகளை விரித்தது. அதன் சிறகுகளுக்குள் ஒளிந்து கொள்ளவேண்டும் போல இருந்தது.நான் அதை நீலப் பறவையிடம் சொன்னேன். நீலப் பறவை சிரித்தது.’வாழ்கை எதற்குள்ளும் ஒளிந்து கொள்வதல்ல.அது ஏகாந்தமாய் பறப்பது. சுயமாய் இருப்பது. இரை தேடப் பழகு.. கூடு கட்டப் பழகு..பறவையாய் வாழப்பழகு’ என்று சொல்லி தன் நீல நிறச் சிறகொன்றை உதிர்த்து பறந்தது.
நான் பூமியில் என் கால்களை அழுந்தப்பதித்து நடக்கத் துவங்கினேன். கட்டளைகளுக்குக் கட்டுப்படாத என் காலடிச்சுவடுகளை எனக்கு மிகவும் பிடித்தது .நான் நீண்ட தூரம் நடந்தேன். இயற்கையின் வனப்புகள் என்னை மயக்கமூட்டின. கானகத்தின் நடுவில் இருந்த ஒரு மரத்தில் கனி பறித்தேன்.அது இதுவரை நான் ருசித்தறியாத சுவையோடிருந்தது. இதற்கு முன் இரை என்பது கருஞ்சிகப்பு பறவை அலகில் கொண்டு வரும் சுவையறியா, ரசனையற்ற இரையாவே இருந்தது. முதல் முறையாக நானே என் இறையை தேடிக் கொண்ட சந்தோசத்தில் சிறகுகளை பட படவென அடித்துக் கொண்டேன். வெட்டப்பட்ட சிறகுகள் இல்லையா? அது கொஞ்சம்தான் விரிந்தது. என் சிறகுகள் வளரும். என் ரெக்கைகளை அகல விரித்து பூமியில் என் நிழல் பட நான் ஏகாந்தமாய் பறப்பேன். இயல்பாய் சிறகு உதிர்ப்பேன். உதிர்ந்த என் வெண் சிறகுகள் புன்னகை மாறாத ஒரு குழந்தையின் விளையாட்டுப் பெட்டகத்தில் பொக்கிஷமாய் பாதுகாக்கப்படும். அந்தக் குழந்தையின் புன்னகை வ்ழியாக என் சுதந்திரம் வெளியெங்கும் நிரம்பி வழியும்.
(இம்மாதம் ‘தி சண்டே இந்தியன்’ இதழில் வெளிவந்த சிறுகதை)
ரயில்நிலையத்தில் நிகழாமல் இருந்திருக்கலாம் அந்தப் பிரிவு. முன்பு ஒருநாள்மழைக்காலத்தில் அவன் அருகில் அமர்ந்திருந்தபோது இனிய சங்கீதத்தைப்போலதாலாட்டிய ரயிலோசை இன்று மிகப்பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இனிமேல்அவனிடத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை. வாழ்நாள் முழுதும் கூடவருவேன் என்றுசொன்னவன் இப்படி ரயில்நிலையத்தில் ஒரு கைஅசைவில் நம்மிடையே உறவு
முறிந்துவிட்டது என்று சொல்வதற்காக வந்திருக்கிறான். ரயில் அவனைக் கடந்துபோகும்கணநேரத்தில் அத்தனை அன்பையும் காற்றில் விட்டுவிட்டுப் போய்விடுவேன் என்றுநினைக்கிறானா? அவ்வளவு எளிமையானதா காதல்.
எந்த வினாடியும் என் கைகளைப் பற்றிக்கொண்டு "ஒரு பிரச்சினையும் இல்லடா. எதுக்கு
நீ தேவை இல்லாம மனசைப்போட்டுக் குழப்பிக்கிற. எல்லாமே அப்படியேதான் இருக்கு"
என்று சொல்லிவிடமாட்டானா என இதயம் தவித்தது. அவனோ மிக நிதானமாக
"எத்தனை மணிக்கு டிரெயின் கிளம்பும்" என்றான். இன்னும் நம்பிக்கை மிச்சமிருந்தது.
எனக்கான அன்பு, அவன் கண்களில் எஞ்சியிருக்கிறதா என்று தீவிரமாகத் தேடத்
தொடங்கினேன். அவன் முகத்தில் இறுக்கம் கூடக்கூட அவன் முன்பு எனக்குள்
ஏற்படுத்திய அன்பெல்லாம் நலிந்து சிதைந்து உருகி ஓடியது. காதலின் வேகத்தைப்
போலவே பிரிவும் அதே அழுத்தத்தோடு அவனிடமிருந்து வெளிப்பட்டது.
"நமக்குள்ளே இப்படி ஒரு பிரிவு வேணுங்கிறதை நீ புரிஞ்சிக்கணும். இவ்வளவு
சண்டையோட நாம எப்படி வாழ்க்கையைத் தொடங்க முடியும்" என்று அவன்
பேசிக்கொண்டே போக தாங்க முடியாத அருவருப்பில் இரண்டு கைகளையும் முகத்தில்
வைத்து மூடி 'சீ' என்று சத்தமாக கத்தினேன். "இதான், இந்த மாதிரி ஆர்ப்பாட்டம்
பண்றதாலதான் இத்தனை நாளும் உன்னைப் பார்க்காம இருந்தேன். அவ்வளவுதான்,
உனக்கும் எனக்கும் எல்லாம் முடிஞ்சுபோச்சு. இனி என்னைத் தேடி வந்து
அசிங்கப்படாதே''. என் பேச்சை கேட்க விரும்பாமல் உடனடியாக அந்த இடத்தைவிட்டு
நகரத் தொடங்கினான்.
அமிலம் சொட்டும் வார்த்தைகளை வீசிவிட்டு ஜனத்திரளில் ஊர்ந்து மறைந்து போனான்.
ஆடாமல் அசையாமல் அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த நான் மிக
ஆக்ரோசமாக கத்தி அழத்தொடங்கினேன். என் அருகிலிருந்தவர்கள் எல்லாம்
கண்டிப்பாக என்னை நாகரீகமற்ற பெண்ணாக நினைத்திருக்கவேண்டும்.
அதைப்பற்றியெல்லாம் கவலைப்படும் நிலையில் நான் இல்லை. உணர்வுகள்
பெருக்கெடுத்து ஓடின. கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வயிற்றைப் புரட்டிக்கொண்டு
வந்தது. வாந்தி எடுக்க இடம் தேடினேன். ரயில்பாதையைத் தவிர வேறெதுவும்
தட்டுப்படவில்லை. பிளாட்ஃபார்மில் தலையைப் பிடித்து உட்கார்ந்தேன்.
பத்துவினாடிகள்கூட சென்றிருக்காது. என்னைச்சுற்றி பெருங்குரல்கள். 'ஏய் வாவா' என்று
ஒரே கூச்சல். எனக்கு தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. கண்களிலிருந்து காட்சிகள்
மறையத் தொடங்கின. யாரோ என்னை வேகத்தில் பிளாட்ஃபார்முக்குள்
இழுத்துப்போட்டார்கள். நான் செல்ல வேண்டிய மதுரை எக்ஸ்பிரஸ் சத்தத்தோடு
ஊர்ந்து நின்றது. என் பக்கத்திலிருந்து "என்னாச்சுமா" என்று
கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ரயிலில் இருக்கையைத் தேடக் கிளம்பிவிட்டார்கள். தன்
நினைவு மெதுவாக திரும்பிக்கொண்டிருந்தது. தலை கனத்து வெடித்துச் சிதறுவது
போன்ற வலி ஏற்பட்டது. ரயில்நிலையத்தின் எந்த மூலையிலிருந்தாவது மீண்டும் தோன்றி
என் கைகளை பிடித்துக்கொள்ளமாட்டானா என்று மனது ஏங்கியது.
அவன் எப்படி என்னை வெறுத்து மறந்துபோக முடியும். ஆனால் அவன்
என்னைவிட்டுப் போனது நிஜம். அந்த இடத்தைவிட்டு உடனடியாக நீங்கிச்செல்ல
விரும்பினேன். கனவைப்போன்று எல்லாம் நடந்துகொண்டிருந்தது. கண்ணீரைத்
துடைத்துக்கொண்டேன். முற்றிலுமாக அவனை என் ஞாபகத்தில் இருந்து அகற்ற
வேண்டும். இல்லை ஓடும் ரயிலிலிருந்து குதித்துச் சாக வேண்டும். நொடிப்பொழுதில்