வெள்ளி, 18 மார்ச், 2011

இசைபடவும் ஒளிபடவும் வாழ்தல்

பின்னிரவு மழைக்கால வாசனையையும் கோடை மழையின் கொண்டாட்டமும் மறையாத ஊரை ஞாபகபடுத்திக்கொண்டே இருக்கிறது வெப்பத்தை வன்மமாக்கி கரைத்தூற்றும் இப்பெருநகர். மூர்க்கமாக அடித்துத் துரத்தும் பால்ய சிநேகிதர்களையும், என்றோ சாணம் தெளித்த தெருவுகள் இன்று சிமெண்ட்டுகளாகி உருவழிந்த தெருக்களில் ஏதேச்சையாக சந்திக்கையில் முகத்தை மறைத்துக்கொண்டோ அல்லது தன் செயலுக்காக வெட்கப்பட்டுக்கொண்டோ லேசான சிரிப்புடன் கடந்து செல்கையில் அவர்கள் அடித்த ரணம் சிவக்க குறுகுறுக்கிறேன் சந்தோசமாக. என் புழுதி படிந்த சாலையில் மாடுகளை கண்டு பயந்து விலகி நடந்து போன காலம் கண்ணிமைகளில் உயிர் பிடித்து வைத்திருக்கிறது பழந்தெருஞ் சாலையின் சாயலை கொஞ்சமாவது கொண்டிருக்கும் தெரு. தட்டான்கள் பறந்துகொண்டிருக்கும் பொன்வண்டும் மின்மினிப் பூச்சியும் தன்னியல்பில் மின்னிக்கொண்டிருக்கும். என் வருகையை ஒரு நாளும் அவை வெறுப்பதும் இல்லை எனக்காக காத்திருப்பதும் இல்லை. அன்பு இழையோட என்னை கிறுக்கு பிடிக்கச் செய்வதும் இல்லை. தனக்கான ஒளியோடும் பாடலோடும் இசைந்து எவற்றின் கட்டளைக்கும் காத்திராது இசைபடவும் ஒளிபடவும் வழ்ந்து கொண்டிருக்கிறது. உயிர் ஜனத்திரள் காட்டில் எப்போது மௌனம் வன்மம் துரோகம் விளைவிக்கும் கண்களை கண்டு கண்டு என்னுள் சேர்ந்திருக்கிறது ஓராயிரம் கரு வலி. தேரோடும் வீதியில் கைகோர்த்து நடப்பதே வாழ்வின் தீராத ருசியைப் போக்கும் நிலையும் காலாவதியாகிவிட்ட நிலையில் தட்டான்களின் ரீங்காரத்தின் மெல்லிய இசையை ஆன்மாவில் கரைத்து ஆற்றங்கரையில் பறக்கும் பட்டாம்பூச்சியின் வர்ணங்களை ஒளியாக்கி கண்களில் நிரப்பி இசைபடவும் ஒளிபடவும் வாழலாம் இனி.

வியாழன், 17 மார்ச், 2011

ஓவியத்தில் மறைந்துகிடக்கும் தற்கொலை

நீங்கள் அந்த தற்கொலையை ரசிக்காமல் இருக்க முடியாது.
இதயத்தை பிடுங்கி எறிவதைப் போன்ற அல்லது
உங்கள் அழகியலை தூண்டக்கூடிய சாவகாசமான ,
உங்களை எந்த குற்ற உண்ர்விலும் ஆழ்த்தாத
அழகான தற்கொலை அது
ஆம்
இளம் சிவப்பும் ஆரஞ்சு கலந்த மஞ்சளும் சூழ்ந்த அழகான அந்திச் சாயலில்
வண்ணங்களை உள்ளிழுத்து பயிர்பருத்த கோதுமை வயலில்
எல்லையற்ற நீண்ட சமவெளியில் நடுவில் ஓடும்
மனிதர்களற்ற நீண்ட ரயில்பாதை.
வான்கோ தன் ஓவியத்தில் வரைந்திருக்கலாம்
அல்லது அதன் தோல்வியை கண்டிருந்திருக்கலாம்
ஏகாந்தத்தில் மிதந்த பெண் ஒருத்தி
திறந்த ரயில் கதவின் கம்பிகளை பிடித்தவாறு
இயற்கையின் அத்தனை அழகியலும் கண்டு திருப்பியுற்றபின்
காற்றின் மிதக்கும் அவள் ஆன்மா நிறைவடைந்த கணத்தில்
அத்தனை அழகியலை பூரணமடையச் செய்ய
அவளிடம் இருப்பது ஒரே வழிதான்
வெள்ளை வண்ண உடையில்
இதுவரை யாருமே அடைய முடியாத அழகான கோணத்தில்
ஒரு பறவையைப்போல் பறந்து
கோதுமை வயலில் உடல்பரப்பி வீழ்ந்து கிடப்பது
அது உங்களால் ரசிக்காமல் இருக்க முடியாத வரைபடம்
என்பதில் வியப்பில்லை
ஆனால் எவராலும் வரையப்பட முடியாதது
அப்படியே முனைந்தாலும்
அந்த இளம் வெள்ளை உடைக்காரியின் பறவையின் உடல்
தூரிகையில் மிதந்துகொண்டிருக்குமே தவிர
உங்கள் ஓவியங்களில் அரூபமாக மட்டுமே
ஒளிந்துகிடக்கும்
என் கவலையெல்லாம்
அந்த அழகான தற்கொலையை உங்களால்
ஞாபகத்தில் வைத்துகொள்ள முடியாதது என்பதுதான்.

ஞாயிறு, 13 மார்ச், 2011

தற்கொலைக்கு முன்னான அழகிய நிகழ்வு

வெயில் சாலையின் ஒரத்தில் படர்திருக்கும் நந்தியா வெட்டை செடியிலிருந்து கல்யாண்ஜியின் ஞாபகத்தோடு ஒரு பூவை மட்டும் பறித்து கவிதை முகமற்ற தோரணையில் பேருந்து நிலையத்தில் வெயில் முகத்தோடு காத்திருக்கையில் உங்களில் கையிலிருக்கும் பூவிற்காக ஒருவன் சிரிக்கும் போது அவனிடம் ரகசிய அன்பினை கொள்வீர்கள். பேரூந்து ஏறும் அவசரத்தில் நந்தியா வெட்டை எங்கேயோ விழுந்துவிட்டதுகூட தெரியாமல் அந்த சிரித்தவனின் ஞாபகத்தோடவே பேரூந்தில் ஏறிக்கொள்வீர்கள். அங்கு உங்களுக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்தால் நந்தியாவட்டையின் அதிர்ஷ்டம்தான். தழும்பி கிடக்கும் மஞ்சள் வெயிலில் உங்கள் படர்ந்து மினுமினுக்கும் கூந்தலை முன்றடி தள்ளியிருந்து ரசிக்கும் ஒருவனை ரகசியமா காதல் கொள்வீர்கள். இறங்கும் தருணத்தில் இளையராஜா பாடலைப் பாடிச் செல்பவனை பிந்தொடர்ந்து செல்ல விரும்புவீர்கள்.யாருமே உங்களை கவனிக்காத பேரூந்து பொழுதில் பெரும் துயரம் கொள்வீர்கள். பேரூந்திலிருந்து இறங்கி உங்கள் தெருவில் நடந்துவரும் தருவாயில் காற்றில் பொன்னிறத்தில் மிதக்கும் உங்கள் கூந்தல் குறித்து நீங்களே பெருமை கொள்வீர்கள். அதை ரசிக்க ஒருவரும் இல்லாமல் போகும்போது சரியாக உங்கள் வீட்டின் கதவை திறக்கும் குழந்தையை உதட்டில் நீங்கள் இதுவரை எவருக்குமே அளித்திடாத ஆழ்ந்த முத்தத்தை கொடுப்பீர்கள். பின் உங்கள் அறையில் நுழைந்து அன்றைய சந்தோச ஞாபகங்களில் ஒவ்வொரு தூக்க மாத்திரையையும் எடுத்து விழுங்குவீர்கள். பின் போர்வையால் இறுக்க மூடி படுத்துக்கொள்வீர்கள்.

புதன், 9 மார்ச், 2011

வெற்று வெளி



இளம் மஞ்சள் மாலையில்
பறவையைப்போல் திக்கற்று பறக்கலாம்
மாலை கருகும் நேரத்தில்
அடையாளமற்ற கூட்டில்
முழுஇருளின் கறுமையில் கரையலாம்
...இருண்மையின் தனிமை அன்றைய
பித்துநிலையை சமன்செய்யும்
விடியும்
மீண்டும் பித்துக்கொள்ளலாம்
மீண்டும் சமனடையலாம்
பித்து சமன்
வாழ்வின் இருபோக்கு
இதுதவிர்த்து சுவாரஸ்யமற்றே இருக்கிறது
வெற்று வெளி.

(ஸ்ரீநேசனின் ’ஒரு மலையின் மாலை’ பாதிப்பிலிருந்து உருவான கவிதை.)