செவ்வாய், 26 ஜனவரி, 2010

நினைவில் நீ, நான் மற்றும் சாலை.


மழையில் உன் சாலை ஒரு பறவையைப்போல மிதந்து கொண்டிருக்கும் நேரத்தில் என் தூக்கத்தில் நீ சிரித்துக்கொண்டிருந்தாய். நிழல்படிந்த உன் சாலை மிக அழகானது நீயோ நானோ அல்லது ஒரு குழந்தையோ நடந்து செல்லும்போது. பூக்கள் உதிர்ந்து கிடக்கும் சாலையை அவமதிக்காதே பூக்களுக்கு நிகரான உன் சிரிப்பை உதிர்த்து சாலையை மேலும் அழகாக்கிச் செல். சாலையின் முடிவில் மழையில் நனைந்தபடி மறைந்து செல்லும் உருவத்தை நானாய் நீ கற்பனை செய்வதை நிறுத்தாதே என் நினைவில் உன் சாலை உயிர்பெறட்டும். நீ நடந்து செல்லும் சாலை பூக்கள் மலர்ந்த காடு...இன்னும் இன்னும் என் அன்பின் வார்த்தைகளில் உன் சாலை உயிருள்ள ஓவியம்.

வெள்ளி, 22 ஜனவரி, 2010

காதலை பிரியாதீர்கள்




மழையடிக்கும் பொழுதுகள்
காதலைச் சொல்லும் தூதகணங்கள்
அன்பர்களே
உங்கள் காதல் முறிவினை அப்பொழுதில் நிகழ்த்தாதீர்.
காதல் பொழிவில் தேகம் அழகுறும் வசந்தகாலத்தில்
எனவே சிறப்பானவர்களே
விடைசொல்லி நீண்ட மௌனத்தோடு பிரிவதற்கு
ஏதுவானது இல்லை அக்காலம்.
தனிமையின் துயர் நெக்குருக வாட்டும் பனிக்காலத்தில்
நண்பர்களே அதுவும் சிறப்பானதல்ல.
வெம்மை தகிக்கும் கோடை
உங்கள் அன்பானவர்களின்
தற்கொலையைத் தூண்டும்
நீங்காதீர் அவர்களை குறிப்பாக கோடையில்.
இலை உதிரும் நாட்களின் உலர்ந்த காற்றுகள்
திரெகத்தை வலிமை இழக்கச் செய்யும்
நோய்தாக்கும்.
பருவமற்ற சாதாரண தினங்கள்
பிரிந்த காதலை நினைத்து நினைத்து
பித்துக்கொள்ளச் செய்யும்.
எந்தப் பருவமும் உகந்தல்ல
காதலை விட்டுச் செல்வதற்கு
எனவே
எக்காலத்திலும் காதலியுங்கள் காதலைப் பிரியாமல்

வியாழன், 7 ஜனவரி, 2010

எனது இரண்டு நூல்கள் வெளியீடு





சிறுகதைகள் மற்றும் கவிதை நூல்களை உயிர் எழுத்து பதிப்பகம்
வெளியிட்டுள்ளது. கவிதைகள் தொகுப்பை கவிஞர் நா. முத்துக்குமார் வெளியிட
கவிஞர் சமயவேல் மற்றும் நடிகர் ஜெய் பெற்றுக்கொண்டனர். சிறுகதை தொகுப்பை
எழுத்தாளர் ஷோபா சக்தி வெளியிட இயக்குனர் சசிக்குமார் பெற்றுக்கொண்டார்.

சிறுகதைகள் தொகுப்பு- 'காட்டின் பெருங்கனவு'

'மனித உறவுகளை விரும்பி நாடும் ஜீவன்கள் எதிர்கொள்ளும் அவஸ்தைகளைப்
பேசுகின்றன சந்திராவின் கதைகள்.நேரான சொல்லல் முறையைக் கொண்டுள்ள இக்கதைகள் பால் சார்பற்றுக் கிளைத்தெழுகின்றன. பெண் மனம் தனித்து அவதானிக்கக்கூடிய நுட்பமான விஷயங்களைப் பதியும் சந்திராவின் கதையுலகில் இயற்கை பிரிக்க முடியாத கூறாக விளங்குகிறது. ஒரு மலைக்கிராமம் தொடங்கி சூது நிரம்பிய பெருநகரம்வரை புவியியல் அடையாளங்களாகக் கொண்ட சந்திராவின் கதையுலகப் பரப்பு வசீகரமானது'-எழுத்தாளர் நஞ்சுண்டன்.

கவிதைகள்-நீங்கிச் செல்லும் பேரன்பு

'தனித்த பறவையொன்றின் கீதமாய் காற்றில் கலந்து சன்னமாய் மனதிற்குள் ஒலிக்கச் செய்கின்றன சந்திராவின் கவிதைகள். மீளாத் துயரொன்றின் மீதேறிய கண்ணீரின் வார்த்தைகள் அவை. துரோகமும் மரணமும் அன்பு முறிதலுமாய் வாழ்க்கை துன்பங்களை பரிசளிக்கையில் அதற்கு பதிலாய் மொழியின் வாயிலாக வெறுமையின் வரைபடங்களை கவிதைகளாக வெளிப்படுத்துகிறார் சந்திரா'-கவிஞர் உமாஷக்தி.

http://www.andhimazhai.com/news/viewmore.php?id=10945