வியாழன், 14 பிப்ரவரி, 2013

வழிதவறியது ஆட்டுக்குட்டி அல்ல கடவுள்.



காட்டுச் செடியின் நீலமலரைப்போன்று பிரகாசமான
ஆழ்ந்த அன்பினால் என் பாதங்கள் நடுங்கிய அன்று
உன் நிதானத்தின் முன் எந்த கோரிக்கையுமற்று
வெறுமனே மெழுகுவர்த்திகளை ஏற்றியபோது
பறந்தன மின்மினி பூச்சிகள்
கடவுளால் நிராகரிக்கப்பட்ட
அவற்றின் ஒளி ஆன்மாவின் பாடலாய்
எளிமையின் உருவாக பிரபஞ்சத்தை நிரப்பி
ஆட்டுக்குட்டியினை நடனமாடச் செய்து
பெருவாழ்வு கையளிக்கப்பட்டது
அச்சிறு உயிரின் முன்
உச்சாடனத்தில் தலைகிறுகிறுக்க குப்புறக் கவிழ்ந்தது என் உலகம்
கடவுளும் அப்பாடலை தனக்காக்கும்படி இறைஞ்சினார்
வழிதவறியது ஆட்டுக்குட்டி அல்ல கடவுள்.