வெள்ளி, 20 நவம்பர், 2009

பால்ய வனம்


ஒளிஇருள் வெள்ளமாய்
நீந்தின
என் பால்யத்தின்
சூட்டில்.
பிறந்த மேனியாய்
பாதாளம் சுருங்கும்
இடிச்சிரிப்பில்
வனாந்தரத்தின் தனிமையை நிறைத்தேன்
கணங்கள் நொடிந்தன
பூக்கள் வெடித்து
மகரந்தம் பரப்பியது
அருவியின் மோனநிலை
குலைந்து
பலதிசைகளிலும்
பீறிட்டுச் சிதறியது
சாம்பல் மேகத்திலிருந்து
புற்கள்
காட்டில் இறங்கி
அற்ப ஒலியில்
கூச்சலிட்டு மயங்கின
ரீங்காரத்தை
மறந்த வண்டுகள்
பூக்களைப் புணர்ந்தன
ஓடையின் பொன் மணலில்
துயில் கொண்டிருந்த
கூழாங்கற்கள் மேலெழும்பிக் குதித்தது
காட்டின் நிறம் மறைந்தது
நான் பால்யத்தின் வெளியில்
யோனி மறந்தவளாயிருந்தேன்

புதன், 18 நவம்பர், 2009

குறுங்கத்திகளைப் பரிசளித்தவன்




நீ செலுத்திய
அன்பின் ஆயிரம் குறுங்கத்திகளை
உன் கண்முன்னே
பிடுங்கவே உன்னை அழைத்தேன்
வன்முறையின் துர்நாற்றங்கள்
உனக்கு புதிதல்ல
சிரிக்கவே செய்வாய்
நமக்கான கடைசி உரையாடல் இதுவென்று தெரிந்தும்
நீ அமைதியாகவே இருப்பாய்
குருதியை துடைத்தபடி குறுங்கத்திகளை
மௌனமாகவே வாங்கிச் செல்வாய்
உன் குருட்டுப் புன்னகைக்குள்
ஒளிந்திருக்கும் தடம் தெரியாத வார்த்தைகளை
நான் அறிவேன்
அன்பே
உதிராத உன் அன்பினை
ஒருநாளும் முத்தங்களால் நிரப்ப முடியாது
நீ என்றும் சலிக்காதவன்
அன்பின் ஆகுருதியில் செலுத்த
விஷம் தோய்ந்த அம்புகளை தயாராகவே வைத்திருப்பாய்
அன்பின் ஓட்டைகளை அடைப்பது
எப்படி என்பதை
உன்னிடமிருந்தே பழகிகொண்டேணடா
சிதறிய ரத்தத் துளிகளை சேமித்துச் செல்
அவையற்று பின்தொடராது
உன் நிழலின் நாய்க்குட்டி

ஞாயிறு, 15 நவம்பர், 2009

வாழ்வின் ருசி


வெகுநேரமாய்
தனிமையின் சோகை பிடித்த
ரயில் நிலையத்தில்
விசிலுடன் காத்திருந்தான்
கெண்டைக்காலுக்குமேல்
சேலை உயர்ந்து
கறுத்த கொலுசின்
ஒலியில்
நடந்து வருவது
தாமரைதான்
வயிறு புரண்டு வலித்தது
தோளில் படுத்திருந்த
குழந்தை
அவள் சாயலிலே இருந்தது
பால்ய சாயல்
காணாமல் போயிருந்த அவனைக்
கடந்து போனாள் காற்றைப்போல.
கையில் இரண்டு பைகளைச் சுமந்திருந்தாலும்
ஓடிப்போய்
அவள் கையிலிருந்த பையைவாங்கி
தன் கைக்குள் திணித்துக்கொண்டவன்
அவள் பின்னாலிருந்து
புன்னகை வழிய
குழந்தையைக் கொஞ்சியபடி போனான்
நல்லவிதமாய்த்தான் இருக்கிறது
வாழ்க்கை

ஞாயிறு, 8 நவம்பர், 2009

என் ஆன்மாவின் செல்லக் குழந்தைகள்



என் உள்ளங்கையில் பரந்து விரிந்து
நாடி நரம்பெங்கும் கிளைபிரிந்து
குருதி வெள்ளமாக
பாய்கிறது
உன் அன்பின் நெடிய வாசனை
கொதி அமிலமாய்
அன்பை என் முகத்தில் பீய்ச்சியடிக்கிறாய்
நாறி சீழ்வடியும் நீரை
என் வலியோடு சேர்த்துக் குடிக்கிறாய்
உலகின் உன்மத்தம் இதுவென்று
நாட்டியமாடுகிறாய்
ஆனால்
ஈரம் கசியும் என் புண்களில்
உன்னால் ஒருநாளும்
கனிந்த முத்தத்தைக் கொடுக்க முடியாது
லட்சம் சிறகுகள் கொண்ட உடலை குறுக்கி
என் ஆன்மாவின் செல்லக் குழந்தைகளை
பொதிந்து வைத்திருக்கிறேன்
அதிகாரத்தின் அன்பை
அவை
ஏளனத்தோடு பார்த்துச் சிரிக்கும்
அவ்வளவே
அதன்முன் மண்டியிட்டு உன்னால்
தோற்றுப்போகவே முடியும்.

சனி, 24 அக்டோபர், 2009

நினைவுப் புழுக்கள்




உன் மௌனத்தின் லட்சம் புழுக்கள்
என் மூளையில் பாறையாய் இறுக்கி
ஞாபகத்தை அழிக்கிறது
பிரிதொரு கணத்தில்
புழுக்கள் இடையறாது ஊறி
அதில் பல லட்சம் நினைவுகள்
தொடர்பின்றி தோன்றி
மூளையை சிதறடித்து
கண் காது மூக்கு வழியே
வேகத்துடன் வெளியேறும் போது
நினைவில் உயிர் பிரிவதை உணரமுடிகிறது
ஆன்மாக்கள் பற்றி எரியும் நம் உறவில்
பகிர்ந்துகொள்வதற்கு
அழுகிய முத்தங்களே உள்ளன
என்பதை அறிவேன்
இருந்தும் பிரிவின் வலியை
பாதத்தின் நடுநரம்பு
சுண்டியிழுத்து உணர்த்துவதை
விரும்பவே செய்கிறேன்.

வெள்ளி, 23 அக்டோபர், 2009

கருத்துக்களின் புதிய ஊடகம் வலைப்பூ




புத்தங்களை விட உட்கார்ந்த இடத்தில் பலவிதமான செய்திகளை படைப்புகளை வலைப்பூக்களில் படிப்பது மிக எளிமையாக போய்விட்டது. ஒரு சில பத்திரிக்கைகளே புதிய படைப்பாளிகளை ஏற்றுக்கொண்டு படைப்புகளை வெளியிடுகிறது. இதனால் நல்ல படைப்பாளிகள் வெளியே தெரிவதற்கு கொஞ்ச நாளாகலாம்.ஆனால் இப்போதெல்லாம் அதைப்பற்றி கவலைப்படுவதற்கு இல்லை. வலைப்பூக்கள் பிரபலமாகிவிட்டதன் மூலம் ஒவ்வொரு வாசகனும் எழுத்தாளராக ஆகலாம். புத்தகங்கள் படிப்பதற்கு நிகராக வலைப்பூக்களை படிக்க ஆரம்பித்துவிட்டேன். பல வலைப்பூக்களில் பிரமிக்கும் வகையில் படைப்புகளை காணமுடிகிறது. அரசியல் அதன் எதிர்வினைகள் என்று மிக தைரியமாக எல்லா விசயங்களையும் எவ்வித சமரசம் இன்றி அலசி ஆராயிறார்கள்(அவை சண்டைகளாக இருந்தாலும்). கருத்துச் சுதந்திரத்தின் பெட்டகமாக இருக்கிறது வலைப்பூ.பல்வேறுவிதமான எதிர்க்கருத்துக்களை தெரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக ஈழத்தமிழர்கள் உலக அளவில் தங்களுடைய அரசியல் மற்றும் அழிக்கப்பட்ட, அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் கொடுமையான நிலையை எடுத்துச் சொல்ல வலைப்பூ மிகச் சிறந்த ஊடமாக விளங்குகிறது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் கருவியாக அவர்கள் வலைப்பூக்களை பயன்படுத்துவது மிகச் சிறந்த சமூக விஞ்ஞான வளர்ச்சி. புதிதாக நேற்று தொடங்கிய வலைப்பூ ‘குப்பைத் தொட்டி’ http://aghambrahmashmi.blogspot.com/2009/10/blog-post.html
முதல் எனக்குப் பிடித்த வலைப்பூக்கள்.

http://tamilnathy.blogspot.com/2009/10/blog-post.html
http://kuzhali.blogspot.com/2009/03/blog-post_21.html
http://aghambrahmashmi.blogspot.com/2009/10/blog-post.html
http://umashakthi.blogspot.com/
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=482
http://www.makalneya.blogspot.com/
http://www.adhiran.blogspot.com/
http://poetry-tuesday.blogspot.com/
http://chaithiraboomi.blogspot.com/2009/10/blog-post_21.html

திங்கள், 19 அக்டோபர், 2009

கொலைகள் பெருகும் அன்பு




வெளிச்சத்தில் பெருகும் பூச்சிகளாய்
துரோகம் என்மீது
இடைவெளியற்று அப்புகிறது
விலக விலக
ஆழிநீரைப்போல் உயர்ந்தெழுந்து துரத்தி
முழுமையாக மூழ்கடிக்கிறது
நானே துரோகத்தின் குரலாய் மாறும்போது
கண்கூசும் ஒளியாய்
அன்பை அணுஅணுவாக உதிர்க்கிறது
மிதக்கும் ஒளியை கையில் பிடித்தால்
பின் நிதானமாக
குரல்வளை அறுத்து
நிகழ்த்தப்படுகிறது ஒரு கொலை.

2

எதற்கும் மாற்று இல்லை நான்
எதற்கும் மாற்று இல்லை நீ
இருந்தும் ஒன்றின்
வேறொன்றாய்த்தான் இருக்கிறோம்.