திங்கள், 7 டிசம்பர், 2009

அப்பாவோடு மடிந்த கடவுள்


ஏசு முள்கீரிடம் சூட்டி
சோகமாகக் காட்சியளித்த
நகரத்தின் பெருங்கட்டடத்திற்கு
அப்பாவை முதலில் அழைத்துச் சென்றேன்

அன்றிரவு தூக்கத்தில்
தாதியை அழைத்து
பிதாமகனின் முள்கிரிடத்தை அகற்றி
மருந்திடச் சொன்னார்

அவர் கடவுளப்பா
தானே உயிர்த்தெழுவார்
என்றேன்

தலையசைத்து சமாதானம் அடைந்தார்
மறுநாள்
கடவுள் தன்னருகே
படுத்துறங்கியதாகச் சொன்னார்
எலும்பை உருக்கும்
வலி மட்டும் நீள்வதாகச் சொன்னவர்
கடவுளும் கொடூர வலியின்
உச்சத்தை அடைந்திருப்பார் என்றார்

அப்பா தூங்குங்கள்
இசையை முடுக்கினேன்
தலையை வருடினேன்
தூங்கிப்போனார்

உறக்கச் சடவில்
பாவம் கடவுள்
அவர் இறக்கும் தறுவாயில்
இசையை கேட்டிருப்பாரா
யாராவது அவர்மீது
முத்தங்களை பதித்தனராவென முனங்கினார்

அப்பா
அவர் கடவுளப்பா
தானே உயிர்த்தெழுவார்
என்றேன்

அவருக்கும் வலித்திருக்கும் இல்லையா
என்ற அப்பா
தன் சிரசின் வழியே வெளியேறி
மூடிய கதவை திறவாமல்
இவ்வுலகை மறுதலித்துச் செல்லும்போது
கடவுள் அவர் தோளில் அமர்ந்திருந்தார்.

(உயிர் எழுத்து இதழில் டிசம்பர் 2009 ல் வெளியான எனது கவிதை)

கருத்துகள் இல்லை: