
இன்னும் மீட்டப்படாமல்
புல்லாங்குழலில் பதுங்கிய இசையாய்
என்னுள் நிரம்பியிருக்கும் அன்பே
கடைசியாக
கடல் கொண்ட தனிமையை பரிசளித்தாய்
கன்னங்களில் வழிந்தோடும் நீரைத் துடைக்கும் பொருட்டு
நீ என்னை ஆட்சிசெய்தாய்
வாசனைகளால் நிரம்பி வழிந்த சொற்கள்
மயக்கமூட்டுகின்றன
இரவும் பகலும் தீய்ந்து பொசுங்குகின்றன
காலம் வெளி மறந்து மங்குகின்றன நினைவுகள்
தடித்த முத்தங்களால்
புண்ணாகிப்போன உதடுகள்
கேலி செய்கின்றன
மறைக்கப்பட்ட காதல் கடிதங்கள்
வாழ்வின் தீராத் துயரங்கள்
அன்பின் நிழலுருவம்
கண்ணிமைகளில் தொக்கி நிற்கிறது
தூரங்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றன
நடக்க மறுக்கும் கால்கள்
அமைதியை விரும்புகிறது இதயம்
எல்லாவற்றிர்க்கும் மேலே
நானே எழுதிய
துயர்கொண்ட நீண்ட பாடல் வரிகள் அயர்ச்சியூட்டுகின்றன.