ஞாயிறு, 5 ஜூலை, 2009

புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன.


ஜுன் 26 ல் நுங்கம்பாக்கம் ஐ கப் ஹவுஸில் நடைபெற்ற பன்முக வாசிப்பில் ஈழக் கவிதைகள் நிகழ்வில் கவிஞர் மஜித்தின் ‘புலிபாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன’ கவிதை நூல் குறித்து நான் வாசித்த திறனாய்வு கட்டுரை.
புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன.
ஒவ்வொரு மனிதனின் மன ஆழங்களில் ஒளிந்திருக்கும் நினைவுகளைப் பொறுத்து மழை வாழ்வியல் துன்பங்களையும், தீராப் பெருங்காதல்களையும், துக்கத்தின் சிதைவுகளையும் ஞாபகப்படுத்தும். மஜீத்தின் புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தனதொகுப்பில் மழை, குளிர் இரண்டுமே துயர அழகியலோடு சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அழகியல் கோடையில் வீரியம் கொண்டு எழுகிறது.
அவருடைய உலகில் சூரியன் வெக்கை கொண்டு அலையும் நாட்களில் பெய்யும் மழையால் கோடையின் தனிமையை நிதானப்படுத்த முடியவில்லை. மாறாக கோடையின் ஒளிபட்டு உலர்ந்திருக்கும் ரத்தம் மழையில் கரைந்தோடி பிரபஞ்சத்தை நனைக்கிறது. துக்கத்தை நிரப்புகிறது என்கிறார்.
இரட்டை ஆயுதங்களால் ஒடுக்கப்பட்ட ஒரு சமூக வலியின் ரத்தப்பதிவு.. இதை நினைவில் கொண்டு வாசிப்பைத் துவங்குங்கள் என்று சித்திரமாக்கப்பட்ட அவருடைய கோடையின் இரவுகளுக்குள் நுழையும் திறவுகோலைத் தருகிறார். அந்த திறவுகோல் வெறும் கவிதைகளுக்கான திறவுகோல் அல்ல.. ஈழ தமிழ் இன, இஸ்லாமிய இன, சிங்கள இன அரசியல் வாழ்விற்கான திறவுகோல்.
இஸ்லாமிய நாடுகள் அல்லாத நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு இருக்கும் சிக்கல் தங்களை எப்படி அடையாளப்படுத்திக் கொள்வது என்பதுதான். க்ஷீமீறீவீரீவீஷீஸீ வீபீமீஸீtஹ் ஷீக்ஷீ க்ஷீமீரீவீஸீணீறீ வீபீமீஸீtஹ் என்பதில் அவர்களுக்கு குழப்பம் நேர்கிறது. சிறுபான்மையினருக்கே உரித்தான பயம். தோழமை சந்தேகங்கள் அவர்களுக்குள் இருக்கிறது. இந்த மனநிலைதான் எப்போதும் அவர்களை இருபுற கூர்மை ஆயுதங்களுக்கிடையே சிக்கச் செய்கிறது. இந்தியாவிலும் கூட இந்த சூழ்நிலைச் சிக்கல் காலகாலமாக இருந்து வருகிறது. எல்லா சாதிகளையும் உறவு சொல்லி அழைக்கும் ஒரு பெரும் போக்கு இஸ்லாமியர்களிடம் உண்டு. காலம் அவற்றைத் தின்று எல்லா மண்ணிலும் இஸ்லாம் இனத்தின் மீது ஒரு தவறான மாயையை ஏற்படுத்திவிட்டது. இன உணர்வு, மார்க்க உணர்வு எதை முன்னிலைப்படுத்துவதென்கிற சிக்கல் எல்லா நிலைகளிலும் அவர்களிடம் இருந்தே வருகிறது.
சித்திரக் காட்சியாக விரியும் மஜீத்தின் ஒவ்வொரு சொல்லும் ஒரு வலியை பிரதிபலிக்கிறது. அந்த வலிகளுக்குப்பின் பெருங்கனலாய் எழுந்து நிற்கிறது வலிகளுக்கான காரணிகள்.
புலிகளின் தமிழ் ஈழ விடுதலைக்கான போராட்டத்தை தமிழினப் பேரினவாதமாக்கி அதை சிங்களப் பேரினவாதத்துடன் ஒப்பீடு செய்து இரண்டையும் சம தராசில் நிறுத்துகிறார் மஜீத்..அவரது கவிதையில்
எனது சகோதரனை புலி கொன்றதுஎனது நண்பனைசிங்கம் குதறியதுபுலியும் சிங்கமும்எனது பெண்களை கைகோர்த்தபடி கொன்றன.என்கிறார்.
தமிழர்களாலும் சிங்களர்களாலும் கவர்ந்திழுக்கப்பட்டு ரசிக்கப்பட்ட முஸ்லீம்களுடைய ரத்தத்தைப்பற்றி பேசுகிற சித்திரம் இது, என்பதை வாசிக்கும் போது நினைவில் கொள்ளுங்கள் என்று மஜீத் திறவுகோல் ஒன்றை கொடுக்கிறார். பிறகு மேற்சொன்ன கவிதையில் சிங்கள இனவாதத்தை, புலிகளை நேரடியாக குற்றம் சுமத்திய பிறகு இஸ்லாமியர்களின் உண்மையான நிலைப்பாட்டை மஜீத் வெளிப்படையாக சொல்லி இருக்க வேண்டும்.
இரு இனங்களின் மோதலுக்கு இடையே நீங்கள் நடுநிலையில் பாதிக்கப்பட்டீர்களா? சார்பு நிலையில் பாதிக்கப்பட்டீர்களா? இரு ஆயுதங்களும் ஏன் உங்களை நோக்கி நீண்டன. நீங்கள் ஏன் அப்புறப்படுத்தப்பட்டீர்கள்? நடுநிலைதான் உங்கள் நிலைப்பாடு எனில் தாய்மொழி இன உணர்வுக்கு என்ன செய்தீர்கள். சார்புநிலை நிலைப்பாடெனில் உங்களை அவர்கள் ஏன் எதிரிகளாக பாவித்தார்கள்? இப்படி எண்ணற்ற கேள்விகளை எழுப்புகிறது துவக்கத்தில் மஜீத் நமக்களித்த திறவுகோல்.
உலகில் எந்த விடுதலை போராட்டமும் குற்றமற்று நிகழ்ந்ததில்லை. யுத்த தந்திரங்களில் குற்றப் பெருக்கு தவிர்க்க இயலாது எனினும் நிலம் அறுத்து, வேர்பிடுங்கி விரட்டப்படுதல் யார் நிகத்தியிருந்தாலும் தவறு. இன விடுதலைக்கான போராட்டத்தில் எல்லாத் துரோகங்களும் அழிக்கப்படும். இது யுத்த ஒழுங்கு. யுத்த துரோகத்தால் ஏற்பட்ட விடுதலைக்கான பின்னடைவு, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வழிந்த வரலாறு புலிகளுக்குள்ளும் ஒரு கோடை கால ரத்தச் சித்திரமாக இருக்கும். புலிபாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்த சித்திரத்தைப் போன்று, புலிகளும் துரோகத்தால் வஞ்சிக்கப்பட்டு ரத்தம் சிந்திய கோடைச் சித்திரத்தை எழுதக்கூடும்..
மஜீத் கவிதைகளுக்குள் இருக்கும் அரசியலை மீறி.. காட்சியை படிமமாக்கும் கவிதை யுத்தியிலிருந்து விலகி சித்திரமாக்கியிருக்கும் மொழி ஆளுமை புதிய வாசிப்பு தளத்தை அகன்ற வெளியில் திறந்து வைக்கிறது. துயரங்களையும், வலிகளையும், வேரறுந்த வாழ்க்கையையும் நான்கு கோடைகளாக பிரித்து வலிமிகுந்த சித்திர எழுத்துகளாக மாற்றுகிறார். கோடை என்கிற குறீயீடு துயரங்களுக்கான அழகியல் குறியீடாகிறது. ஒவ்வொரு கவிதைகளும் இரவில் ஒளிரும் சித்திரமாய் விரிகிறது. இந்த வெளிக் கட்டமைப்பு கவிதைக்கான புது அழகியலைத் தருகிறது.
தனித்த இரவுகளில் ஒரு ஒற்றைப்புலம்பல், சின்ன விசும்பல், துளிக்கண்ணீர் விஸ்பரூபமாக வெளிப்படுகிறது. இரவு என்கிற படிமத்தை கையாண்டு அவர் தம் இனத்தின் வலிகளை மனதின் ஆழத்தில் நேரடியாகப் பாய்ச்சுகிறார். அழகியலாகச் சொல்லப்படும் மழையும் குளிரும் இரவின் சித்திரத்திற்குள் அடைக்கப்பட்டு, கோடையின் வெம்மைக்குள் நிறமிழக்கிறது. மழை அறுவறுப்பைத் தூண்டுகிறது. துன்பங்களையும் காயங்களையும் பரந்துபட்ட வெளியாக வார்க்கும் சித்திரத்தை நம் மன வெளியெங்கும் உருவாக்குகிறார்.
முதலாம் கோடையில் பிரபஞ்சம் முழுதும் ரத்தம். அதனால் கோடை சிவப்பாகிறது. காற்று வெளியெங்கும் கறுத்த ரத்தத் துளிகள். நீருக்கு பதிலாக ரத்தம் பசிக்கு உணவாகிறது. மரங்கள், பனி இரவுகள், நதிகள் இப்படி அழகிய தன்மை அனைத்திலும், இலக்கியங்களிலும் ரத்தம் கவர்ச்சியையும் கொடூரத்தையும் விரித்துப்போடுவதாகச் சொல்கிறார். வரலாறு முதல் பெண்களின் கன்னித் தன்மையை சோதிக்கும் கட்டில் வரை ரத்தம் அதன் வாசனையை பரப்பியபடி அதிர்ச்சியளித்தபடியே இருக்கிறது.
இனவாதத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் வலியை முதல் கோடையின் சித்திரத்தில் ரத்தத்தால் வரைகிறார். இரவு 01 ல் கனவுகளை சிதைத்தபடி தெருக்களில் நடமாடும் புலிகளைப் பற்றிய அச்சத்தை சொல்கிறார்.
இரவு 02 "ல் மஜீத் குறிப்பிட்டிருக்கும் கவிதையில்
எனது வெளியை பங்கு போட்டுசிங்கங்களும் புலிகளும் பகிர்ந்து கொண்டனஇரண்டின் வால்களையும் முடிந்துவிட்ட எவனோஎனது இடத்தின் மீது நிரந்தரமானகாயத்தை ஆரம்பித்து வைத்தான் என்கிறார்.
சிங்கத்தின் வாலும் புலியின் வாலும் முடிந்துவிடப்படவில்லை. தனது வெளியில் அமைதியாக வாழ்ந்த சிறுபான்மை புலிகளை சிங்கங்கள் தன் பெரும் கூட்டத்தால் ரத்தம் சிதறச் செய்தது. புலிகள் பதுங்கின தங்கள் வாழ்விடங்களைக் காப்பாற்றிக் கொள்ள. அதில் மான்களையும் தன் இனமாக கருதி அருகில் இருத்திக் கொண்டன. புலிகள் பாயும் தருணங்களில் மான்கள் சிங்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு புலிகளின் தொடர் அழிப்பிற்கு சாட்சியாய் நின்றன.
இரண்டாம் கோடையில் இரவு 05 ல் துயரத்தின் நீண்ட வரலாறு மழைக்காலத்திற்குள் கண்டெடுக்கப்பட்டு அவற்றை கோடையின் மூலம் எதிர்ப்பு அடையாளமாக காட்டுகிறார். தனது சித்திரத்தை வெயிலால் நிறைக்கிறார். அதே கோடையின் இரவு 06 ல் மஜீத்தின் கவிதைச் சித்திரம் இவ்வாறாக விரிகிறது.
குழந்தைகள் பிசாசுகளை அழைக்கும்படி கேட்கிறார்கள்எங்களிடமுள்ள பழங்கதையன்றில் பிசாசுகள் ரத்தம் குடிக்கும் என்ற செய்தி அவர்களை நம்பிக்கையூட்டிருக்கக் கூடும்பிசாசுகள் வருவதாக நான் அறிவித்தேன் குழந்தைகள் மீட்பர் வருவதாககுதூகலப்பட்டனர்.நான் பிசாசு என்றுதான் அறிவித்தேன்அந்தச் சொல்லுக்கானஇன்றைய நாளின் பொருளைஅவர்கள் அறியாதிருக்கக்கூடும்எனினும் அவர்களின் சந்தோசத்தை கலைக்க விரும்பவில்லை என்கிறார்.
இவர் பிசாசு என்று புலிகளைச் சொன்னால் அவரது சந்ததியினர் மீட்பர் என்றே புலிகளை நினைக்கிறார்கள். காரணம் சிங்கள பேரினவாதத்தின் முழு தமிழ் இன அழிப்பை கண்ணெதிரே பார்க்கும் இஸ்லாமியர்களும் இருப்பதை மஜீத் ஒப்புக்கொள்கிறார். அவர் கண்களுக்கு மட்டும் தமிழ் இன அழிப்பு புலப்படவில்லை. சிங்களவர்களின் இன அழித்தலின் தொடர்ச்சி தங்களை நோக்கி நீளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை இஸ்லாமிய இளம் தலமுறையினர் உணர்ந்தே இருக்கிறார்கள். இதனால் மஜீத் பிசாசுகளாக குறிப்பிடும் மீட்பரை குழந்தைகள் விரும்பி அழைக்கிறார்கள். இந்த கவிதையிலிருந்து மஜீத்தும் முன்பு புலிகளை மீட்பராக நினைத்த வரலாறும் உண்டு என்றே தெரிகிறது. அதன்பின் அவரது கருத்தில் மாறுபாடு நிகழ்ந்ததை அவர் அறிந்ததாகவே இருக்கட்டும்.
மஜீத்தின் கோடை இரவின் சித்திரங்கள் உண்மை வரலாறு தாண்டி மிகைப்படுத்தப்பட்ட வர்ணங்களை உபயோகித்து இருப்பதாகவேதோன்றுகிறது. கவிதை என்று பார்க்கும் மஜீத் இந்த தொகுப்பில் மிகப்பெரும் ஆளுமையை, புது வாசிப்பு தளத்தை உருவாக்கி இருக்கிறார்.கருத்தியல் ரீதியாக எண்ணளவில் மிகைப்படுத்தப்பட்ட சித்திரமாகவே இது தோன்றுகிறது.
ஒரு வரலாற்று பதிவை ஒரு இனத்திற்கான கண்ணீரை, துரோகத்தை பதிவு செய்யும் போது கவிதைக்கான செலுமை அழகியலைத் தாண்டி எல்லாத் தர்க்க நியாயங்களுக்குமான தெளிவுகளோடு பதிவு செய்தல் படைப்பின் நேர்மை. மஜீத் ஒரு இஸ்லாமியராக இந்தப் பதிவை செய்திருக்கிறார் தமிழ் மொழியில். அதனால் அவரை ஒரு தமிழ் கவிஞராகவே பார்க்க இயலுகிறது. இவர் ஒரு தமிழனாக கவிதை எழுதும் போது இன்னும் நியாயமான படைப்புகளை உண்மையின் முழுச் செறிவோடு இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
இன்றைய நிலையில் வன்னி முகாம்களில் சிங்களர்கள் நடத்தும் வன் கொடூரம், பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களை உயிரோடு புதைத்த மனித பேரவலம் மஜீத்திற்குள் என்ன தாக்கங்களையும், என்ன விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கும்? ஒரு தமிழ் கவிஞராக மஜீத் தமிழ் இன அவலங்களுக்கான இன்னொரு கோடைகாலச் சித்திரத்தை வரைவாரா?

2 கருத்துகள்:

நெற்றிக்கண் திறப்பினும் சொன்னது…

'புலி பதுங்கிய போது துரோகங்கள் நகரினுள் புகுந்தன' என்றதொரு கவிதைத் தொகுப்பை இனிவரும் நாட்களின் யாரேனும் எழுதக் கூடலாம். இதைத் தெளிவாகச் சொன்ன உங்களுக்கு நன்றி.

முதலில் ஒரு தெளிவுக்கு நீங்கள் வந்திருக்க வேண்டும். இலங்கையில் இருப்பது இரண்டே இனம். ஒன்று சிங்களம். மற்றொன்று தமிழ்.

இஸ்லாமியர்கள் என்பது இனத்தைக் குறிக்கும் சொல்லல்ல. அது மதத்தைக் குறிப்பது. மதத்திற்கும், இனத்திற்குமான தெளிவு உங்களுக்கு இருந்திருந்தால், மஜித்துக்கு மறுப்புச் சொல்லும் போது, முஸ்லிம் இனம் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டிருக்க மாட்டீர்கள்.

இஸ்லாம் என்பது ஒரு மார்க்கம். பிறக்கும்போது நான் இஸ்லாமியனாக இருக்கலாம் அல்லது வேறு மதத்திலிருந்து விலகி இஸ்லாமை நான் தழுவலாம். ஆனால், இனம் என்பது பிறப்பால், மொழியால் வருவது. இறந்த பின்னரும் கூட அதை மாற்ற முடியாது.

இலங்கையில் நடந்தது, தமிழ் பேசும் ஒரே காரணத்துக்காக அநியாயங்களை, அக்கிரமங்களை தமிழர்கள் மீது திணித்தது தான். அதற்கு பதில் கொடுக்க எழுந்தவர்கள் புலிகள்.

தமிழகத்தில் ஈழ ஆதரவுப் போராட்டத்தில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, புத்த மதங்களைத் தழுவுபவர்கள் ஒன்றினைந்து செயல்படுகின்றனர். ஆனால், ஈழத்தில், தமிழர்களுடன் அல்லது புலிகளுடன் கைகோர்க்காமல் இஸ்லாமியர்கள் இருந்தார்கள் என்றால் அதன் பின்னணி என்ன? உலகின் எங்கெங்குமுள்ள மக்கள் இனத்திற்கும் - மதத்திற்கும் இடையேயான வேறுபாட்டைப் புரிந்து வைத்திருக்கும் போது ஈழத்தில் மட்டும் வாய்க்கவில்லை என்றால் அது மிகப்பெரும் துயரம். எதிரிகளின் கொடுமையை விட, சகோதரர்களின் வஞ்சம் துன்பகரமானது.

இனியாவது, புத்த, சவுராஸ்டிரிய, ஜென்னிச, பார்ஸிய, ஜைன, இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து மதங்களையும் இன்னபிற மதங்களையும் மதங்களை கடுமையாக எதிர்ப்பவர்களும், கடவுளே கிடையாது என்று அறுதியிடுவோரும், எல்லாம் கடவுள் செயல் என்று இறைவனை நம்புவோரும் தமிழ் பேசுபவராக, தமிழராக இருக்கும் பட்சத்தில் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.


உங்கள் கட்டுரையில் வார்த்தை ஜாலங்களுக்கு கொடுத்திருக்கிற முக்கியத்துவத்தை, கொஞ்சம் கருத்தை வலியுறுத்துவதற்கும் கொடுத்திருக்கலாம்.

""உலகில் எந்த விடுதலை போராட்டமும் குற்றமற்று நிகழ்ந்ததில்லை. யுத்த தந்திரங்களில் குற்றப் பெருக்கு தவிர்க்க இயலாது எனினும் நிலம் அறுத்து, வேர்பிடுங்கி விரட்டப்படுதல் யார் நிகத்தியிருந்தாலும் தவறு. இன விடுதலைக்கான போராட்டத்தில் எல்லாத் துரோகங்களும் அழிக்கப்படும். இது யுத்த ஒழுங்கு" என்ற உங்களுடைய வார்த்தைகள், போரில் அப்பாவிகள் கொல்லப்படுவதைத் தவிர்க்க முடியாது என்று முன்பொரு முறை ஜெயலலிதா கூறியதை ஞாபகப்படுத்துகிறது.

நீங்கள் தமிழர்களுக்காகப் பேசுவதாகக் கூறிக்கொண்டு, பிளவை அதிகப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறீர்கள். அது ஆபத்தானது.

மதம் - இன வேறுபாட்டை நீங்களும் புரிந்துகொண்டும், உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கும் புரிய வையுங்கள்.

புலி பாயும் சொன்னது…

இனவிடுதலைப் போராட்டத்தை அழித்து, நசுக்கி, ஒடுக்கிய அராஜகத்திற்கு உலகின் வல்லாதிக்க நாடுகள் துவங்கி, போர்முனையில் பூத்த நாடுகளும் ஒத்து ஊதிக் கொண்டிருக்கின்றன.

வார்த்தைகளில் வடிக்க இயலாத துயரங்களைத் தாங்கிக்கொண்டு, தங்களின் உண்மையான ஒரே தலைவனை இழந்த தமிழினத்தின் நீண்ட கண்ணீரை, உங்களைப் போன்ற படைப்பாளுமையும், செழுமையும், உணர்வுமிக்க மண்ணின் மைந்தர்களின் வார்த்தைகள் வடிகாலாகவும், பெரிதான நம்பிக்கையை அளிப்பதாகவும் இருக்கிறது.

மஜித்தின் கிணற்றுத்தவளைக் கவிதைத் தொகுப்புக்கு, உங்களுடைய தேர்ந்த பதில் மூலம் சிறப்பானதொரு சேவையைச் செய்திருக்கிறீர்கள்.

விடுதலைப் போராட்டத்தின் வரலாறு தெரியாதவர்களால், விடுதலை உணர்வின் உள்ளார்த்தத்தை அறியாதவர்களால் உங்களுக்கு எதிரான அல்லது உங்களைப் போன்ற மிகச்சிறந்த படைப்பாளிகளுக்கு எதிராக கருத்து என்ற பெயரில் குப்பைகளை மட்டுமே எறிய முடியும்.

போர்க்களத்தில் எதிரியின் எந்த ஆயுதத்துக்கும் அஞ்சாத வீரம் நிறைந்தது தமிழர்களின் வாழ்வு. உங்களுக்கும் எதிராக சில கருங்காலிகள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் எதிரிகளல்ல. துரோகிகள்.

எனவே, விடுதலையை வென்றெடுக்கும் தமிழினத்தின் மீட்சியைப் பறைசாற்றும் வகையில் தீரமிக்க படைப்புகளை தொடர்ந்து யாத்து, கண்ணீரிலும், குருதியிலும் குளித்துக் கொண்டிருக்கும் ஈழச் சகோதர, சகோதரிகளுக்கு அன்பையும், ஆதரவையும் அளியுங்கள்.

ஈழத்தில் என்றென்றும் உங்களுக்கோர் இடமுண்டு.