வியாழன், 9 ஜூலை, 2009

நெற்றிக்கண் திறப்பினனுக்கு என் பதில் கருத்து

உங்கள் கருத்துரையில் இஸ்லாம் ஒரு இனம் என நான் குறிப்பிட்டிருந்தது தவறு எனவும்
.அது இனம் சார்ந்த என் பார்வையின் தெளிவின்மையை காட்டுகிறது எனவும் குறிப்பிட்டு உள்ளிர்கள் .இஸ்லாம் ஒரு மதம் .மதத்திற்கும் .இனத்திற்க்குமான வேறுபாடு தெரியவில்லை என்கிறீர்கள் .இஸ்லாம் ஒரு மதமல்ல அது ஒரு மார்க்கம் என்கிற அளவிற்கான தெளிவோடுதான் இஸ்லாமை ஒரு இனமாக குறிப்பிட்டேன் .
மனரீதியாக அவர்கள் தங்களை ஒரு தனி இனமாக உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மை மனநிலையின் பயம் அவர்களை இஸ்லாம் அல்லாத நாடுகளில் ஒரு இனமாக குழுவாக செயல்பட வைத்திருக்கிறது .வாழ்விட அடையாளங்களைவிட ,மொழியைவிட ,மார்க்க அடையாளம் பெரிது .அதன் வழியில் பயணப்படுகிறார்கள் .அது அவர்கள் சூழல்,அதையும் குற்றப்படுத்த முடியாது என்கிற தெளிவும் என் கட்டுரையில் இருக்கிறது .

புத்தம் ,இந்து ,ஜைனம்,கிருத்துவம் ,இஸ்லாம் ,எதுவாக இருந்தாலும் பிறப்பால் தமிழன் என்பதுதான் இனம் என்று சொல்கிறீர்கள் .என் கருத்தும் அதுதான் .இஸ்லாமியர்கள் தமிழர்களோடு இணைந்து போராடி இருக்க வேண்டும் .இனி வரும் காலங்களிலாவது அவர்கள் தமிழ் இன உணர்வு கொள்ள வேண்டும் இது தான் என் கருத்தும். இதில் பிளவுபடுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. தெளிவுபடுத்தும் எண்ணமும் ,தமிழ் இனத்தில் நீங்களும் ஓர் அங்கம் என வலியுறுத்தும் நோக்கமும் மட்டுமே உள்ளது .இஸ்லாமியர்கள் மட்டுமே பிற மதத்தினரை உறவு சொல்லி அழைக்கும் பெரும் போக்கான மனநிலை கொண்டவர்கள் என்பதை அழுந்தச் சொன்ன
காரணமே ..அவர்கள் உணர்வு நிலையில் உயர்ந்தவர்கள் ,அன்பும் மனித மாண்பும் கொண்டவர்கள் என்பதை அவர்களுக்கே உணர்த்தும் எண்ணத்தில்தான்.

விடுதலைப் போரில் எதிரிகளை அழிப்பதைவிட , துரோகங்கள் ஒடுக்கப்பட வேண்டும் .துரோகிகள் அழிக்கப்பட வேண்டும் என்பது யுத்த ஒழுங்கு .எல்லா போருக்கும் உரிய போர் மரபு அது என்பதுதான் என் வலியவாதம். உலகமே மனித நேயத்தை தின்றுவிட்டு ஒரு விலங்கு வாழ்க்கை வாழத் துவங்கிவிட்ட பிறகு ,ஐ .நா .சபை கருணையின் கதவுகளை சாத்திய பிறகு ,வல்லரசுகள் வாய்மூடி மௌனமான பிறகும்..தங்கள் ஆளுமை ,வலிமை ,வாழ் நிலம் எல்லாவற்றையும் இழந்த பின்னும் புலிகள் தங்கள் மானுட நேயத்தை உறுதியாக கடைபிடித்தார்கள் .போர் மரபுகளை காத்தார்கள் .அப்பாவிகள் புலிகளால் கொல்லப்படவில்லை.ஒருவேளை தமிழர்களை அழித்தால் பதிலுக்கு சிங்களர்களை அழிப்போம் என புலிகள் முடிவு செய்திருந்தால் இலங்கை எப்போதோ தமிழ் ஈழ நாடாகி இருக்கும் .அவர்கள் தங்களின் சுய நேர்மையாலும் ,தன்னின துரோகத்தாலும்,தற்காலிகமாக தோற்றவர்கள் .இலங்கை பொருளாதாரத்தை வீழ்த்துவதும் ,சிங்கள இனத்தை அழிப்பதும் சாத்தியமான காலகட்டம் புலிகளுக்கு இருந்தது .புலிகள் ஒருபோதும் அதை செய்ய முன்வரவில்லை.சுய வெற்றிக்காக மரபுகளை உடைத்தல் தவறு என்ற தெளிவு அவர்களிடத்தில் இருந்தது .தனி மனித ஒழுக்கம் கட்டுப்பாடு ,போர் விதி முறை காத்தல் என வாழ்கின்ற தலைமை அவர்களுக்கு இருக்கிறது .நல்ல தலைமையின் வழி காட்டுதல் இல்லாமல் இருப்பவர்களுக்கு அது தவறாகப்படுகிறது,உங்களுக்கும். ஜெயலலிதா அப்பாவிகள் கொல்லப்படுதல் போரில் சாதாரண விஷயம் எனச் சொன்னதையும் ..நான் துரோகங்கள் அழிக்கப்படும் என் சொன்னதையும் ஒப்பிட்டு சொல்கிறீர்கள். தெளிவின்மை யாரிடம் இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை என் கட்டுரையை வாசித்துவிட்டு சொல்லுங்கள் .

உங்கள் கருத்துரையின் மூலம் இரண்டு தெளிவுகள் கிடைக்கிறது .ஓன்று நீங்கள் மேலோட்டமாக வாசித்து இருக்கிறீர்கள் .இரண்டு மொழிகளுக்குள் சிக்கி இருக்கிறீர்கள் .உங்கள் பார்வையில் என் கருத்து புலப்படவில்லை. மொழிச் செறிவை மொழி அழகை மட்டுமே பார்த்துவிட்டு கருத்து அடர்த்தியாக இல்லை என்கிறீர்கள் .
எனக்கு வசப்பட்ட வார்த்தைகளைக் கொண்டுதான் என் கருத்துகளை கட்டமைக்க முடியும். என் கண்ணீரை என் கண்கள் வழியாகத்தான் அழுது தீர்க்க முடியும். மொழி என் கண்கள் மீண்டும் என் கட்டுரையை அலங்கரிக்கப்படாத வார்த்தைகளாய் வாசித்து பாருங்கள். அதில் உணர்வுகளும் ,உண்மையும் காணக் கிடைக்கும் .கருத்துரைக்கு நன்றி .

கருத்துகள் இல்லை: