பழுத்த மஞ்சள் சருகுகளின் மூர்க்கமும் நீர் விலகாத பச்சை இலைகளின் குளுமையும் சாயம் இழக்காத காட்டுப் பூக்களின் வாசனையும் நிறைந்து புதிதாய் உன் நிலத்தில் தறிகெட்டு ஓடும் காட்டாறு அன்பே நான் என் பயணத்தின் வேர்கள் உன்னுள் கிளர்ந்து பரவி என் தனிமையை முற்றடையச் செய்யும் பெருங்காதலாய்.
நகரம் முழுதும் தீப்பிடித்து எரிவதைப்போன்று வெக்கை வழிந்துகொண்டிருந்தது. அன்று நாள்முழுதும் சங்கர் நகர்ந்து கொண்டே இருந்தான். ஒரு இடத்திலும் அவனால் நிலையாக நிற்க முடியவில்லை. நடந்தோ பஸ்ஸில் ஏறியோ தன் நகர்வை நிறுத்தாமல் தொடர்ந்துகொண்டிருந்தான். தனக்கான ஒரு மனிதனைத் தேடிக் கண்டுபிடிப்பது இல்லை யாரையேனும் தன்மீது கவனம் செலுத்த வைப்பது இதுதான் அவனது இன்றைய நோக்கமாக இருந்தது. வாழ்வின் மிகப்பெரும் சூது தன் மேல் செலுத்தப்பட்டதாக உணர்ந்தவன் அதன் ஆட்டத்துக்குள் மிக மெதுவாக நுழைந்தான்...
வேலை பார்த்து வந்த எந்த இடத்திலும் அவனை இதுவரை யாரும் மரியாதையாக நடத்தியதில்லை. பிச்சை போடுவதைப்போலதான் வேலை கொடுத்திருக்கிறார்கள். படித்த பி.ஏ வரலாறுக்கு நாற்காலியில் உட்கார்ந்து வேலை செய்யும் பணிகிடைக்கும் என்று நினைத்தவனுக்கு பல மாதங்கள் அலைந்து திரிந்ததில் கிடைத்த முதல் கௌரமான வேலை துணிக்கடையில் சேல்ஸ்மேன் வேலை .
துணிக்கடையின் பிரமாண்டம் முதலில் அவனை மயக்கியது. அந்தக் கடையில் கம்பியூட்டர் முன்னால் உட்கார்ந்து கணக்கு பார்க்க வேண்டும் என்ற கற்பனையிலேயே உள்ளே நுழைந்தான். சேல்ஸ்மேன் வேலை மட்டும்தான் இருக்கிறது பார்க்கிறாயா என்று கேட்டார்கள். பசி அவனை விழுங்கிக்கொண்டிருந்தது. மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டான். முதல்நாள் விற்பனை பிரிவில் சீருடையோடு போய் தயக்கதோடு நின்றான். அங்கிருந்தவர்கள் இவன் பெயரைக்கூட கேட்காமல் புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கியா என்று கேள்வியோடு தங்கள் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
அவன் யாரோடும் பேசி பழக்கம் இல்லாதவனாக இருந்தான். எவரிடமும் பேசாமல் வரும் போகும் கஸ்டமர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். முதல் நாள்தானே வேலை பழகியதும் அவனும் தங்களைப்போல் ஆகிவிடுவான் என்று நினைத்தார்கள். அதற்கடுத்து தொடர்ந்த நாட்களிலும் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்ப்பவனாக மட்டுமே இருந்தான். கஸ்டமர்களிடம் நயமாகப்பேசி துணிகளை வாங்க வைக்க முடியவில்லை. ஒரு ஊமையைப்போல துணிகளை எடுத்துப் போடுவதும் மடித்து வைப்பதுமாக இருந்தான். இப்படி யாரோடும் பேசாமல் இருந்தால் வேலையைவிட்டு எடுத்துவிடுவோம் என்று சூப்பர்வைஸர் பலமுறை எச்சரித்துவிட்டார். சரி சரி என்று தலையாட்டிவிட்டு அமைதியாகப் போவான்.
எப்படியும் தன்னை மாற்றிக் கொள்ளவேண்டுமென்ற முனைப்பில் மேன்ஷனில் உடன் தங்கும் அறைவாசிகள் யாரும் இல்லாத நேரத்தில் மற்ற விற்பனையாளர்கள் பேசுவதைப்போல் தானாகப் பேசிப்பார்த்தான். இளம்பெண்களிடம் 'இந்த கலர் உங்க ஸ்கின் கலருக்கு கரெக்ட்டா இருக்கும்' என்று இவன் சொல்ல அவர்களும் சிரித்துக்கொண்டே அந்த துணியை வாங்கிச் செல்வது போல் கற்பனை செய்தான். மறுநாள் எப்படியும் இன்று கஸ்டமர்களிடம் பேசி துணிகளை வாங்க வைப்பது என்ற முடிவுடன் சென்றால், அவன் திட்டம் எல்லாம் விற்பனை பிரிவுக்கு உள்ளே நுழையும் வரைதான். அதன்பின் அவன் வாய் விலங்கிட்டது போலாகிவிடும். சாதாரண நாள்களில் இருப்பதைவிட அப்படித் திட்டமிட்ட நாள்களில் முகம் இன்னும் காய்ந்து இறுகிக்கொள்ளும்.
தான் இருக்கும் இடத்தில் அடுக்கப்பட்டிருக்கும் துணிகளை பார்க்காமல் எல்லோரும் கடந்து செல்வதாகவே நினைத்தான். எல்லோர் மீதும் எரிச்சலாக வந்தது. விற்பவன் எதையாவது பேசவேண்டும் என்று ஏன் கஸ்டமர்கள் நினைக்கிறார்கள்? பிடித்திருத்தால் துணியை வாங்கிச் செல்ல வேண்டியதுதானே. எதற்காக பேசிச் சிரிக்க வேண்டும். எல்லாமே அவனுக்கு விகாரமாகப்பட்டது.
அவனால் ஒருபோதும் கஸ்டமர்களை கவரமுடியாது என்று நினைத்த நிர்வாகம் எல்லா விற்பனை பிரிவுகளிலும் மலைமாதிரி குவிந்து கிடக்கும் துணிகளை மடித்து வைக்கும் வேலையை மட்டும் செய்தால் போதும் என்று விற்பனை பிரிவிலிருந்து மாற்றிவிட்டார்கள். நாளெல்லாம் துணிகளை மடித்து மடித்து அவன் மணிக்கட்டிலும் முழங்கையிலும் எப்போதும் நீங்காத வலி இருந்துகொண்டே இருந்தது....
உடன் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் சிநேகமாக பேச மறுப்பதும், யாரும் தன்னை விரும்பாதவர்களாக இருப்பதும் ஏன் என்றும் அவனுக்கு தெரியவில்லை. யாரும் தன்னிடம் நட்போடும் கைகுலுக்கி கொள்ளவில்லை என்பது அவனுக்கு பெரும் பாரமாக இருந்தது. இதுவரை முத்தத்தின் ஸ்பரிசத்தையும் அடையவில்லை என்று நினைக்கும்போது துக்கம் கழிவிரக்கமாகி உள்ளுக்குள் உடைந்து போனான். அந்த முதல் முத்தம் ஒரு பிச்சைக்காரியிடமிருந்தோ இல்லை ஒரு பைத்தியகாரியிடமிருந்தோ கிடைத்தால் கூட பரவாயில்லை ஆனால் அது வெகுவிரைவில் கிடைக்க வேண்டும் என்று நினைத்தான்.
எல்லோரும் எதன் நிமித்தமாகவோ விடாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள் பேசவிடாமல் தன்னைக் கட்டிப் போட்டிருப்பது எது என்றும் புரியவில்லை. எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு பெயிலானவர்கள் எல்லாம் அங்கே வாய்கொள்ளாச் சிரிப்பும் பேச்சுமாய் நிறைய ஆடைகளை விற்றுத் தீர்க்கிறார்கள். தான் படித்த டிகிரி இங்கே பேச்சற்று கேவலமாக மதிப்பிடப்பட்டு கிடக்கிறது. பேச்சுதான் எல்லாம் என்றால் படிக்காமல் சிறுவயது முதல் பேசுவதை மட்டுமே தகுதியாக வளர்த்திருக்கலாம். அதுவும் கொஞ்சம் பொய்யாக பேச பழகிவிட்டால் வாழ்க்கை சிரமம் இல்லாமல் கழியும் என்று தனக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டான்.
சங்கருக்கு விவரம் தெரிந்த நாளில் உடம்பெல்லாம் புண்களோடு ஒரு சிறு நகரத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தான். எங்கிருந்து எப்படி அங்கே வந்தான் என்று யாரும் அவனுக்குச் சொல்லவில்லை அவனும் யாரிடமும் அதைக் கேட்க விரும்பவில்லை. முன்பு இருந்த பசி என்ற ஒரு விசயம் இல்லை என்பது மட்டுமே அவனுக்கு விடுதலையாக இருந்தது. சீழ் ஒழுகிய புண் ஏற்படுத்திய வேதனையால் அவன் இரவெல்லாம் கத்திக்கொண்டிருந்தான். அவன் கதறல் எல்லோருடைய தூக்கத்தைக் கெடுப்பதாகவும் அப்படிச் செய்தால் மீண்டும் தெருவில் கொண்டு விட்டுவிடுவோம் என்று அவர்கள் சொல்ல அவன் பற்களை கடித்தபடி வலியைப் பொறுத்துக்கொண்டான்.
சீழ் வடிந்து புண் தழும்பாகிப்போனது. வலியடக்கி பழக்கப்பட்ட நாளில் தானாக யாரிடமும் போய் பேசுவதை நிறுத்திக்கொண்டான். யாராவது பேசினால் மட்டும் பதில் சொல்பவனாக இருந்தான். அங்கே இருந்தவர்கள் என்ன செய்யச் சொன்னார்களோ அதை மட்டும் செய்துகொண்டிருந்தான். நான்கு மூலைக்குள் படிப்பு நான்கு மூலைக்குள் தூக்கம் இதுமட்டுமே வாழ்க்கை என்றாகிப்போனது. வரிசையாக சாப்பாட்டுக்குச் செல்வது. வரிசையில் நின்று குளிப்பது இது மட்டுமே உலகத்தின் ஒழுக்கம் என்று அங்கே கற்பிக்கப்பட்டது. சொல்லிக்கொடுக்கும் பாடங்களை அவனால் கற்பனைக்குள் கொண்டு விரிவுபடுத்த தெரிந்திருக்கவில்லை. கண்களில் பார்க்காத எதையும் காட்சிக்குள் கொண்டுவரமுடியாமல் தவித்தான். படித்ததில் மூளைக்குள் தங்கிய கொஞ்ச வார்த்தைகளை பேப்பரில் எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டான். அரசு கல்லூரி, அரசு விடுதி என்று அவனுடைய கல்லூரி காலத்திலும் வாழ்க்கை குறுகிய இருந்தது. கல்லூரி படிப்பை முடித்ததும் மிகப்பெரும் ஜன நெரிசலில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பது கனவாக இருந்தது. ஆதவற்றோர் இல்லத்திலிருந்து ஒருநாள் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறி இந்த பெரு நகர வாழ்க்கைக்குள் கரைந்தான்...
2
அக்கா வீட்டில் இல்லாத சமயங்களில் எல்லாம் படுக்கைக்கு அழைக்கும் மாமாவை சமாளிக்க முடியாமல் ராஜலட்சுமியும், கொடுமைப்படுத்தும் சித்தியை தட்டிக்கேட்காமல் மௌனசாட்சியாக அமர்ந்திருக்கும் அப்பாவை சகிக்க முடியாத கவிதாவும் ஊரைவிட்டு வெளியேற முடிவு செய்தனர். ராஜலட்சுமிக்கும் பதினெட்டு வயதும் கவிதாவிற்கு பதினேழு வயதும் ஆகியிருந்தது.
இருவரும் ஒன்றாக கயிறுமில்லுக்கு பஸ்ஸில் ஏறி வேலைக்குச் செல்லும் நாளிலிருந்தது சிநேகிதிகளாக இருந்தனர். எப்போதும் சோகம் அப்பியிருக்கும் முகத்துடன் காணப்படும் அவர்களின் கற்பனை ஒன்றாக இருப்பதை கண்டுகொண்டனர். இந்த ஊருக்கு வெளியே எங்கோ தூர நகரத்தில் தங்களுடைய வாழ்க்கை சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்த அவர்கள் கிராமத்தைவிட்டு வெளியேறி சென்னை பஸ்ஸில் ஏறிய அன்று பெருமழை பெய்தது. பயண வழியெங்கும் கற்பனையைப் பெருக்கி ஆடையில் படிந்த ஈரவாசனையோடு கனவுகளை சுமந்து கோயம்பேடு பஸ்நிலையத்தில் வந்து இறங்கினார்கள்.
ஆதவற்றோர் இல்லத்திற்கு வாசகர்கள் நிதி அனுப்புமாறு நாளிதழில் வந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியை தேடிச் சென்றனர். அந்த ஆதவற்றோர் இல்லம் நகரத்திலிருந்து விலகி ஒதுக்குப்புறமாக இருந்தது. இருவரும் எட்டாம் வகுப்புவரை படித்திருந்ததால் நாளிதழில் குறிப்பிட்டிருந்த முகவரியை தேடிக் கண்டுபிடித்துச் சென்றுவிட்டனர்.
யாருமே இல்லாத அநாதைகளுக்கு மட்டும்தான் இங்கே இடம் என்று இல்லத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்களை வெளியே போகச்சொன்னார்கள். அதுமட்டும் இல்லாமல் அவர்களுக்கும் கிடைக்கும் நிதியில் ஏற்கனவே அங்கே தங்கியிருக்கும் ஆதவற்றோர்களை கவனிக்கவே போதவில்லை என்று கூறினார்கள். தங்களால் ஊருக்கு திரும்பிப் போகமுடியாது, தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்று இரண்டு பெண்களும் அழுது புலம்பி அங்கேயே உட்கார்ந்தனர். மனமிறங்கிய இல்லத்தினர் தங்க இடம்கொடுத்து அவர்களுக்கு தையல் பயிற்சி அளித்தனர்.
அதற்குபின் இரண்டு பெண்களும் தூங்கும் நேரத்தில் பெருங்கனவுகளை பேசிக்கொண்டிருந்தனர். அந்த இல்லத்தைவிட்டு வெளியேறி எப்போதும் வாகனங்கள் இரைந்தோடிக்கொண்டிருக்கும் நகரத்தின் மையத்தில் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆறுமாத காலத்தில் தையல் பயிற்சி முடித்த அவர்கள் பெரிய துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டி பகலெல்லாம் நகரத்தில் அலைந்துகொண்டிருந்தார்கள். அந்த மாதிரியான நேரங்களில் பைக்கில் ஆண்களை கட்டிப்பிடித்து பறக்கும் பெண்களை பார்த்து ஏங்கினார்கள். சினிமா தியேட்டருக்குள் உள்ளே போகாமல் வெளியே இருந்தபடி சந்தோசமாக பேசி சிரித்துக்கொண்டிருக்கும் மனிதர்களை உற்றுநோக்கினார்கள். அவர்களைப்போல் தங்களுடைய சந்தோஷம் எதில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியும் நோக்கில் அவர்கள் தேடுதல் நகர வீதிகளில், பிரமாண்டமான கட்டடங்களில், வாகன நெரிசல்களில் தொடர்ந்துகொண்டிருந்தது.
ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாத நிறத்தில் பாவாடை தாவணி அணிந்திருந்த பெண்கள் இருவரும் சங்கர் வேலைபார்த்த அந்த பிரமாண்டமான கடைக்குள் நுழைந்தார்கள். அந்தக் கடையில் வேலை கேட்பதே அவர்கள் நோக்கமாக இருந்தது. தாங்கள் அணிந்திருக்கும் கவனமில்லாத ஆடைகளை பார்த்து யாரும் வேலை தரமாட்டார்கள் என்று முடிவுசெய்து ஒரு புதுச் சுடிதாரை வாங்கும் பொருட்டு அந்த கடைக்குள் நுழைந்தார்கள்.
அன்று சுடிதார் செக்ஷனில் தள்ளுபடி போட்டதால் பெருங்கூட்டமாக இருந்தது. துணியை மடித்துக் கொண்டிருந்த சங்கரை கஸ்டமர்களை கவனிக்குபடி அங்கே அனுப்பினார் சூப்பர்வைஸர். அதை நிரந்தரமாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் வரிசையாக தொங்கவிடப்பட்டிருக்கும் துணிகளுக்கு மத்தியில் புன்னகையை வரவழைக்கும் பாவனையில் நின்றுகொண்டிருந்தான். முந்நூறு ரூபாய் மதிப்புள்ள சுடிதார் எண்பது ரூபாய் என்று போடப்பட்டிருந்த சுடிதார் செக்ஷனுக்கு வந்த பெண்கள் எல்லாம் துணியில் தரத்தை பார்த்துவிட்டு அந்த இடத்தைக் கடந்துகொண்டிருந்தார்கள்.
இவனிடம் எதுவும் பேசாமல் எண்பது ரூபாய் சுடிதார்களை ஆசையோடு வெகுநேரம் தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்த ராஜலட்சுமியும் கவிதாவும் ஆளுக்கொரு சுடிதாரை தேர்வு செய்து பில்போடுமாறு அவனிடம் கொடுத்தனர். அவர்கள் இருவருக்கும் அந்த சுடிதார் பொருத்தமாக இருக்கும் என்று அவன் சொல்ல நினைத்தான். பின்பு எதுவும் சொல்லாமல் கவுண்டரை நோக்கி அவன்போக பின்னாடியே போன இருபெண்களும் தங்களிடம் இருந்த பணத்தை தேடித் தடவிக் கொடுத்தார்கள். பஸ்ஸுக்கு செல்ல பணம் மீதமிருக்கிறதா என்பதை பலதடவை உறுதிசெய்த பின்னரே பணத்தைக்கொடுத்தார்கள். அவர்கள் சிரித்த முகத்தோடு பையை வாங்கிச் செலவதையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
முன்பு போல் இல்லாமல் கொஞ்சம் சுமாராக துணிகளை விற்பனை செய்திருப்பதால் சங்கர் இனி தன்னை விற்பனை செக்ஷனிலே போடுவார்கள் என்று நம்பினான். ஆனால் அடுத்த நாளும் அவனை துணியை மடித்துவைக்குமாறு சூப்பர்வைஸைர் சொல்லிவிட்டார். கொஞ்ச நேரம் பதில் சொல்லாமல் அவர் கண்களையே பார்த்துக்கொண்டிருந்த சங்கர் ,தன்னால் நிற்க முடியவில்லை மயக்கமாக வருகிறது இன்று விடுமுறை வேண்டுமென்று கேட்டான். கீழேபோய் மேனேஜரிடம் கேட்டுவிட்டு போகுமாறு சொன்னார்.
அவன் கீழே இறங்கி செல்ல, அங்கே நேற்று சுடிதார் வாங்கிச் சென்ற பெண்கள் அந்த சுடிதாரை அணிந்துகொண்டு மேனேஜரிடம் தங்களுக்கு இந்தக் கடையில் வேலை கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவன் நினைத்தது போலவே அந்த பெண்களுக்கு சுடிதார் பொருத்தமாக இருந்தது. உடனடியாக அதை அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தான். இவன் நிற்பதை பார்த்த மேனேஜர் மிகக் கேவலமாக முகத்தை வைத்துக்கொண்டு என்ன என்று கேட்டார். இவன் விவரம் சொல்ல, செய்யுற வேலைக்கு லீவு வேற... போ என்று அவமரியாதையாக அனுப்பி வைத்தார். இதற்குமேல் இங்கே வேலையைத் தொடரமுடியாது என்று அவனுக்குத் தோன்றியது. வாங்கும் சம்பளம் தங்கும் இடத்திற்கு சாப்பாட்டுக்குமே போதவில்லை. சேமிப்பு என்று எதுவுமில்லை. பணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்தபடி அங்கிருந்து நடந்தான். 'இங்கே வேலை எதுவும் இல்லமா' என்று கறாரான குரலில் மேனேஜர் கத்த அந்த பெண்கள் இவனை பின்தொடர்ந்து கடையை விட்டு வெளியேறினார்கள்.
எங்கே போவது என்று தெரியாமல் பஸ் ஸ்டாண்ட்டில் சிமெண்ட் திட்டில் அமர்ந்து ஒவ்வொரு பஸ்ஸாக கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்த சங்கர் ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறிக்கிளம்பினான். புகையோடு வெக்கையைக் கிளப்பிக்கொண்டு சென்ற பஸ்ஸின் ஜன்னல் ஓரத்திலிருந்து பார்த்தான் அந்த பெண்கள் இருவரும் பஸ்ஸ்டாண்டில் சிமெண்ட் திட்டில் அமர்திருந்த இரண்டு இளைஞர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படியே பஸ்ஸிலிருந்து இறங்கி அவர்களிடம் பேசலாமா என்று யோசித்தான். ஏனோ அந்தப் பெண்கள் அவனுக்கு மிக நெருக்கமான தோழிகளைப்போல் தோன்றினார்கள். அவன் யோசிக்கும்போதே பஸ் அங்கிருந்து நகர்ந்து தன் பங்குக்கு நகரத்தின் வெப்பத்தை கூட்டியபடி பாலத்தின் மேலே போய்க்கொண்டிருந்து. அவன் பெயர் தெரியாத நிறுத்தங்களில் பஸ்ஸிலிருந்து இறங்கி ஏறிக்கொண்டிருந்தான். மீண்டும் பஸ், ரயில் என மாறி மாறி வெறிகொண்டு அலைந்தான் .
நகரம் விரித்த வலையில் வசமாக மாட்டிக்கொண்டதாக நினைத்த அவன் பயணம் இலக்கில்லாமல் சென்றுகொண்டிருந்தது . ஓயாமல் எங்கேயோ நடந்து போய்க்கொண்டிருக்கும் மக்கள். நிரம்பி வழியும் ரயில், பஸ் நிலையங்கள். இரவெல்லாம் ஒளிரும் விளக்குகள் இப்படி எல்லாம் அவன் வாழ்வை மாற்றிவிடும் என்றிருந்தான். நாள்கள் செல்ல செல்லத்தான் நகரத்தின் சூழ்ச்சி புரிந்தது. தன்னைப்போல் தனிமை கொண்டு அலையும் மனிதர்களையும் நகரம் விடாமல் பிடித்திருக்கிறது என்பதையும் அதே ரயில், பஸ் நிலையங்களின் மதிய வேளைகளில் கண்டுகொண்டான். தனித்துவிடப்பட்ட பிச்சைக்காரன், பிச்சை எடுப்பவனையே பார்த்துக்கொண்டிருக்கும் மனிதன், ஒவ்வொரு ரயிலையும் தவறவிட்டு தண்டவாளங்களை வெறித்தபடி பார்த்துக்கொண்டிருக்கும் பெண் என்று கைவிடப்பட்டவர்களை நகரம் தன்னுள் வைத்து சிரித்துக் கொண்டிருக்கிறது.
வெயில் நீங்கிய மாலையிலும் வெம்மை தாக்கிக்கொண்டிருந்தது. வியர்வையில் நனைந்து உப்பு பரிந்த சட்டை கசகசப்பையும் அரிப்பையும் தந்தது. நிராகரிப்பின் வலி அவனை உள்ளுக்குள் கிளர்தெழச் செய்தது. முழுதாக வெளிச்சம் மறையக் காத்திருந்தான்.
பஸ் ஸ்டாண்டில் பார்த்த இளைஞர்கள் வேலை வாங்கித் தருகிறோம் என்று சொல்ல ராஜலட்சுமியும் கவிதாவும் அவர்களுடன் சென்றார்கள். எக்ஸ்போர்ட் கம்பெனியிலே நாளைக்கே வேலை கிடைச்சுடுமா என்று நம்பமுடியாதவளாய் திரும்பத் திரும்ப அந்த இளைஞர்களைக் கேட்டுக்கொண்டே வந்தாள் கவிதா. ரோஸ் கலர் சட்டை போட்ட இளைஞன் தனக்கு காதலனாக கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த ராஜலட்சுமி அவன் பெயரைக் கேட்டாள். அவன் அவள் கைகளை பிடித்து சுரேஷ் என்றான். அவள் கைகளை பின்னால் இழுத்து வெட்கத்துடன் சிரித்துக்கொண்டாள். நீல கலர் பனியன் அணிந்த இளைஞன் கவிதா கேட்காமலே என் பேர் ரமேஷ் என்றான். இரண்டு பெண்களும் ஏதோ ஜோக்கை கேட்டது போல் சுரேஷ், ரமேஷ் என்று அவர்களின் பெயர்களைச் சொல்லி சிரித்தார்கள். பின்பு நகரத்து காதலர்களைப்போல சினிமாவுக்கு போனார்கள். இளைஞர்களை தங்கள் காதலர்களாக நினைத்துக்கொண்ட பெண்கள் படம்பார்க்கும்போது கைகளை பிடித்துக்கொள்ளச் சம்மதித்தார்கள். இடைவேளையில் ஐஸ்க்ரீம் வாங்கிச்சாப்பிட்டார்கள்.
கடற்கரை, ஸ்பென்சர் என்று நேரம் போவது தெரியாமல் இளைஞர்களின் பின்னால் போய்க்கொண்டிருந்தார்கள். அந்த பெண்களுக்கு நகரம் மிகச் சுதந்திரமானதாகத் தெரிந்தது. இருட்டில் நகரம் இன்னும் அழகாக இருப்பதாக நினைத்தார்கள். நகரத்தின் நடுவில் ஓடிய கூவம் ஆறும், அதைச் சுற்றிய குடிசைகளும், பழைய அடுக்குமாடிக் கட்டடங்களும் அவர்களுக்கு வசீகரமாகவே தெரிந்தன. நகரத்தின் மாயவலைகள் கால்களைச் சுற்ற, புதிர்களை அவிழ்க்கும் விடையாக இரவை நினைத்தார்கள்.
இருட்டின் நிறமும் நகரத்தின் வெளிச்சமும் சங்கரின் தனிமையை அதிகப்படுத்தியது. இனி யாரிடமும் கைகட்டி நின்று பேசி சிரிச்சு வேலை பார்க்க கூடாது. ஆனால் பணத்தை எப்படியாவது சம்பாதித்து விடவேண்டும் என்று முடிவெடுத்தான் சங்கர். வெளிச்சம் குறைந்த நகரத்தின் புறநகர் பகுதியில் யாருக்கோ காத்திருப்பதைப்போல் இருட்டில் நின்று தன்னைக் கடந்து செல்லும் பெண்களின் கழுத்தை பார்த்துக்கொண்டிருந்தான். ஒடிசலான தேகம் கொண்ட ஒரு பெண் ரோட்டில் நடந்து செல்கிறோம் என்ற பிரஞ்ஞையே இல்லாமல் போய்க்கொண்டிருந்தாள். பஸ் நெரிசலில் பின்னால் நின்று இடித்தவனின் கோர முகமோ, புழுக்கம் குடிகொண்டிருக்கும் சமையல் அறையின் வாசனைபற்றியோ, அல்லது ராத்திரி படுக்கையில் கேட்கப்போகும் கணவனின் வசைச்சொல்லோ ஞாபகத்தில் வந்து அவளை கலக்கமுறச் செய்திருக்கலாம். தன் கழுத்தில் விழுந்த கைச் செயினை அறுத்துக்கொண்டு ஓரடி முன் வைக்கும்வரை அவள் எதையும் உணரவில்லை. அந்தப் பெண்ணைத் திரும்பி பார்த்தபடி ஓடத்துவங்கினான்.
அவள் கண்களில் தெரிந்த மிரட்சியையும் சோகத்தையும் பார்த்த அவனால் வெறிகொண்டு ஓட முடியவில்லை. நடை தளர்ந்தது. அவன் பின்னால் கூக்குரலுடன் ஆட்கள் ஓடிவந்துகொண்டிருந்தார்கள். எப்படி கீழே விழுந்தோம் என்றே தெரியாமல் அவன் முதல் திருட்டில் பிடிபட்டான். அன்று முழுதும் அவன் சாப்பிட்டிருக்கவில்லை.
புறநகர் காவல் நிலையத்தில் பிளந்த உதடுடன் மூலையில் உட்கார்ந்திருந்தான். அவன் கடையில் சுடிதார் வாங்கிய ராஜலட்சுமியும் கவிதாவும் கிழிந்த நாராய் அவன் பக்கத்திலிருந்த மரபெஞ்சில் கிடத்தப்பட்டனர். நேற்று முழுவதும் அந்தப் பெண்களுடன் சுற்றிய முன்பின் தெரியாத அந்த இளைஞர்கள், நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் ரயில்வே தண்டவாளத்தின் பின்புறமிருந்த புதருக்கு அடியில், இரு பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதோடு அடங்காத வெறிபிடித்த நாய்கள் அவர்களின் மற்ற நண்பர்களையும் வரவழைத்து பெண்களை நாசம் செய்திருக்கிறார்கள். அந்தப் பெண்கள் தங்கள் சக்தியெல்லாம் ஒன்று சேர்த்து கத்த பக்கத்தில் செங்கல் சூளையில் வேலை பார்த்தவர்கள் வந்து காப்பாற்றி இருக்கிறார்கள்.
'எவன் கூப்பிட்டாலும் பின்னாடியே போயிருவீங்களா? அப்படி உடம்பு தெனவு எடுத்து போய் திரிஞ்சிருக்கீங்க...இன்னும் வாய் கூசும் கெட்ட வார்த்தைகளால் பெண் காவலர்கள் இருபெண்களையும் ஏசினார்கள். கூனி குறுகி அவமானத்தில் நெளிந்த பெண்களின் கண்களிலிருந்த கனவு முற்றிலுமாக தொலைந்திருந்தது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சங்கரை போலீஸ் வேனில் ஏற்றினார்கள். அவனுக்கு எதிர் இருக்கையில் ராஜலட்சுமியையும் கவிதாவையும் அமரவைத்திருந்தார்கள்.. தன்னை துணிக்கடையில் பார்த்தது அந்த பெண்களுக்கு ஞாபகத்தில் இருக்க வாய்ப்பில்லை என்றே அவனுக்குத் தோன்றியது. அவர்கள் உணர்விழந்து நொறுங்கிக்கிடந்தார்கள். அந்தப் பெண்களை பெண் காவலர்கள் அரசு மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றார்கள். இப்போது நகரம் அவர்களுக்கு சாப இடமாக காட்சியளித்தது. நகரத்தின் எந்த மூலையிலிருந்தும் கொடும் வாள்கள் தங்கள் மீது பாய்ச்சப்படலாம் என்று பயப்பட்டார்கள்.
நேற்று பஸ்ஸிலிருந்து இறங்கி அந்தப் பெண்களிடம் பேசியிருந்தால் இன்றைய நிகழ்வு எதுவுமே நடந்திருக்காது என்று சங்கர் நினைத்தான். நகரத்தின் தார்ச்சாலையெங்கும் அவன் தனிமையையும் பயத்தையும் பரப்பியபடி வாகன நெரிசலில் போய்க்கொண்டிருந்தது போலீஸ் வேன். இன்னும் இன்னும் மனிதர்களை உள்ளிழுக்கும் வசீகரத்துடன், பரபரப்பாகவும் பகட்டாகவுமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது நகரம்.
கருமேகங்களுக்குள் நுழைந்து நுழைந்து தேடியும்,என்னைத் தன் போக்கில் இழுத்துச்சென்ற, ரெக்கைகள் மிக நீளமாக இருக்கும் அந்தக் கருஞ்சிகப்பு வண்ணப் பறவையைக் காணவில்லை. தன் ரெக்கை விரித்தலின் நிழலிலேயே என்னைப் பின் தொடர்ந்து பறக்கச் சொல்லும் அப்பறவையோடு நான் எப்போதிலிருந்து உடனிருக்கிறேன் என்பது ஞாபகத்தில் இல்லை. ஆனால் அதனோடு இருக்கும் காலத்திலிருந்தே என் ரெக்கைகள் குட்டையாகவே இருக்கின்றன. என் வெண் ரெக்கைகள் வளர வளர கருஞ்சிவப்பு பறவை வெட்டி காற்றில் உதிர்த்துக் கொண்டிருக்கிறது. மிகக் குறுகிய எல்லைக்குள் பறக்க ஏதுவாக மட்டுமே என் ரெக்கைகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறன. வான் அண்டத்தில் ஒரு எல்லையை வகுத்து நீ இதற்குள் தான் பறக்கவேண்டும். இந்த எல்லைகளைத் தாண்டிப் போகக்கூடாது என எச்சரிக்கை விடுத்து எங்கயோ பறந்து சென்று திரும்பி வரும் அந்தக் கருஞ்சிகப்புப் பறவை. அப்படி அது சென்று திரும்பி வரும்போதெல்லாம் அதன் அலகுகளில் எனக்கான இரை இருக்கும். ஏதேனும் ஒரு மேகத்தில் வைத்து அந்த இரையை உண்பேன். கூடு கட்டுதல் பறவையின் சோம்பேறித்தனம் என கருஞ்சிகப்பு பறவை எனக்கு கற்பித்திருந்தது. எனக்கென்று ஒரு கூடு இல்லை. நான் அதனோடு இணைந்து பறத்தலைத் தவிர வேறு ஏதும் அறியாததாக இருந்தேன். பறந்து பறந்து என் சிறகுகள் சோர்ந்து போகும் போது கருஞ்சிகப்பு பறவை என்னை தன் சிறகுகளுக்குள் பொதிந்து மூடி..எங்கோ அழைத்துச் செல்லும்.அந்தப் பயணம் முழுவதும் என் கண்களுக்கு இருளின் நிறம் மட்டுமே பரிட்சயமாகி இருக்கும்.பிறகு கருஞ்சிகப்பு பறவை தன் பறத்தலை ஓரிடத்தில் நிறுத்தி தூங்கும். அதன் பிறகும் தன் சிறகு கூட்டிலிருந்து என்னை விடுவிப்பதில்லை. அதன் ரெக்கைக்குள் இறுக்க மூடி என்னையும் தூங்கச் சொல்லும். அப்போதெல்லாம் என் மூச்சு அழுந்திக்கொண்டிருக்கும். மூச்சடைந்து குறுகி ஓய்வெடுப்பதைவிட சிறகுகள் ஓய இடைவிடாது பறந்ததலே மேல் என்று தோன்றும். மீண்டும் இருள் விலகி வெளிச்சம் வரும் போது நாங்கள் மேகக் கூட்டத்திற்குள் மிதந்து கொண்டிருப்போம். அப்போது என் மூச்சு சீராக இயங்கும். .
என் பறத்தல் எப்போதும் நிர்பந்தங்களின் எல்லைகளுக்கு உட்பட்டே நிகழ்ந்து கொண்டிருந்தது. நான் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டும், அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்துமே பறந்து கொண்டிருந்தேன். என் சிறகுகள் ஓய்ந்து போயின. வான் எல்லையை கடந்து எதையும் நான் அறியாது இருந்தேன். என்னை தன் வெளிகளை விட்டு விலகிச் செல்லாமல் கண்காணிப்பதிலேயே கருஞ்சிவப்பு பறவை தன் தூக்கம் இழந்தது. எப்போதாவது நான் அதன் வெளியே துறந்து பறக்க எத்தனித்தால் என் சிறகுகள் இன்னும் குட்டையாக்கப்படும். சில சமயங்களில் அதன் கோபம் அதிகரித்தால் என் சிறகுகள் வன்மத்தோடு பிடுங்கப்படும். அப்போதும் என் சிறகிலிருந்து தெறிக்கும் ரத்தம் வெண் மேகங்களில் சிதறிப் பறக்கும். அந்த வலி அறிந்து என் பறத்தலை குறுக்கியே வைத்திருந்தேன். கருஞ்சிகப்பு பறவை மீண்டும் மீண்டும் என்னைத் தனியே விட்டுவிட்டு இரை தேடப்போகும். காலநேரம் இல்லாமல் என் பொழுதுகள் வெறும் பறத்தலிலும், அது கொண்டு வரும் இரைக்கான காத்திருத்தலிலும் கழிந்தன. எனக்கான உணவை நானே தேடிக்கொள்ள ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதில்லை.
ஆயினும் அதன் மீதான நேசத்துடன் பறந்து பறந்து சிறகுவிரித்தேன். இந்த பறத்தலில் தரை இறங்காமல் போனாலும் பரவாயில்லை. அதனோடு சேர்ந்து பறக்கும் பொழுதுகளில், அந்தரம் மிக அழகாக தெரிந்தது. வலி பழகிப் போனது. என் தரை தொடா பறத்தல் எல்லையற்றது என்ற கர்வத்தில் இருந்தேன். ஒரு நாள்...அதனை பின்தொடர முடியாததொரு பொழுதில் திசையறியாத என்னை தனியே விட்டுவிட்டுப் போய் விட்டது. நான் இளைப்பார இடம் தேடித் தேடி அலைந்தேன். என் ரெக்கைகளுக்கு தரையின் தூரம் தெரியவில்லை. பூமியின் எல்லைக்கெட்டாத தொலைவில் அது என்னைத் தொலைத்துவிட்டு சென்றுவிட்டது. பூமி மிக மிக தொலைவில் இருக்குமெனத் தோன்றியது. என் கால்கள் வலியில் சுழன்றது. பறக்க இயலாமல் போனால் அது பறவை இல்லை என அது எனக்கு கற்றுக் கொடுத்திருந்தது. அதன் பொருட்டே தரை இறங்கப் பயப்பட்டேன். என் வானில் அதுவன்றி வேறெந்த பறவையையும் நான் அதற்கு முன் அறிந்திருக்கவில்லை..தனித்த ஒற்றைப் பறத்தல் எனக்கு அயர்ச்சியூட்டியது. இரையின்றி வெறும் காற்றாய் பறந்தது என் உயிர். என் வெள்ளைச் சிறகுகள் பொசுங்கிப் போகும் அளவிற்கு நான் தாகத்தோடு செத்து விழுவது என்ற முடிவோடு தீராத தவிப்போடு காற்றின் வேகத்தைவிட சுழன்றடித்துப் பறந்தேன்.
என் தேடல் வீண் போகவில்லை. தூரகருமேகங்களுக்கு மத்தியில் அது நுழைவதை பார்த்துவிட்டேன். மிச்சமிருந்த என் உயிரை ஒன்று திரட்டி நான் என் கருஞ்சிகப்பு பறவையை நோக்கிப் பறந்தேன். கரு மேகங்களிலிருந்து சில மஞ்சள் இறகுகள் விழுந்தன.கருஞ்சிகப்பு பறவை என் பார்வை தவிர்த்து பறக்க முயன்றது. நான் அதன் பறத்தலின் பாதையில் வழி மறித்து நின்றேன்.’’இளைப்பாறுதலை என் சிறகுகள் யாசிக்கின்றன. என் இரைப்பை வெறும் காற்றால் நிரம்பி இருக்கிறது.என்னை அழைத்துச் செல்.உன் வழி காட்டுதல்களின்றி எனக்குப் பாதைகள் இல்லை. வானம் மட்டுமே அறிந்த என்னால் தரை தொட முடியவில்லை .என் சிறகுகளை,என் வாழ்வை,மிச்சமிருக்கும் என் கனவுகளை உன்னிடமே ஒப்படைக்கிறேன்.என்னை தூக்கிச்செல்' என்றேன்.
என் உயிர் காக்கும் பொருட்டு கருஞ்சிவப்பு பறவையின் நீள ரெக்கைகளை பிடித்துக்கொள்ள முயற்சித்தேன். என்னை உதறித் தள்ளிய அது 'இனி உன் பாதைகளை நீயே வகுத்துக் கொள்.என் எல்லைகளை கடந்து போ..நான் உன்னை வெறுக்கிறேன்.உன் மீதான பற்றுதல் என்பது கடந்த காலம்.போய் வா' என்றது. ஏன் இத்தனை வெறுப்பு..என்னை கடந்து போவதற்கான காரணம் என்ன. உன் சொல்படிதானே ரெக்கைகளை குட்டையாக்கி வலியோடு பறந்துகொண்டிருக்கிறேன். என் மீதான் குறை என்ன' என்று கேட்டேன். '.வெண்மையை நான் வெறுக்கிறேன் இப்போதெல்லாம் எனக்கு மஞ்சள் நிறம்தான் பிடித்ததாக இருக்கிறது. இன்னும் சொல்வதானால் வெண்மை என்பது ஒரு நிறமே அல்ல..'என்றது. உலகத்திலே தனக்கு பிடித்த நிறம் வெள்ளை நிறம் என்றும். தனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே வெள்ளை மிகப்பெரும் மயக்கத்தைக் கொடுக்கும். உன் நிறத்திற்காகவே உன்னைச் சில முரட்டு பறவைகள் கபளிகரம் செய்துவிடும்.உன்னைப் பாதுகாக்கவே எப்போதும் உன்னை என் சிறகுக்குள்ளே வைத்திருக்கிறேன் என்று கூறியிருந்தது. இப்போதோ என் வண்ணத்த்தை பொருளற்றதாக்கி, தன் சிறகுக்குள் மஞ்சள் வண்ணப் பறவையைத் தூக்கிக் கொண்டு என் பார்வையை கடந்து வெகு தூரம் சென்று மறைந்தது. ஒன்று மட்டும் எனக்கு அப்போது புரிந்தது. கருஞ்சிவப்பு பறவைக்கு, ஒரு நாள் மஞ்சள் பறவையும் நிறமற்றதாகிவிடும். மஞ்சள் பறவையும் என்னைப் போல மொன்னையாக்கப்பட்ட சிறகுடன் தனித்து திரியும்.
இனி என் வாழ்வில் கருஞ்சிகப்பு பறவை இல்லை என்று நான் உணர்ந்தபோது வானம் நீல நிறம் கொண்டிருந்தது. என் தனித்த இலக்கற்ற பறத்தல் அப்போது துவங்கியது. எல்லைகளைக் கடந்து நான் கண்களை மூடியபடி பறக்கத் துவங்கினேன். திசைகள் அறியா என் சிறகுகள் தரையைத் தேடித் தேடிக் களைத்தன. நீண்ட பறத்தலுக்குப் பிறகு.. என் பார்வை தூரத்தில் நீளமான நீலச்சிறகுள்ள பெயர் தெரியாத பறவை ஓன்று பறந்து கொண்டிருந்தது. என் கடந்தகால பறத்தலில் ஒரு போதும் சக பறவைகளைப் பார்க்க நான் அனுமதிக்கப்பட்டதே இல்லை. அந்த நீலப் பறவை என் அருகே வந்தது.’ ரொம்ப நேரமாகப் பார்க்கிறேன்.ஏன் அலைந்து கொண்டிருக்கிறாய்’ என்றது’. 'நான் தரை தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன். என் ரெக்கைகள் முழுவதுமாக உதிர்ந்து என் உடல் கூடாகும் வரை பறப்பேன்' என்றேன். 'என்ன பைத்தியக்காரத்தனம் இலக்கற்று,திசையற்று பறந்து கொண்டிருந்தால் ஒரு நாளும் தரை தொட முடியாது' என்று உனக்குத் தெரியாதா என்றது அந்த நீலப் பறவை. நான் மௌனமானேன். 'நீ தரை பார்த்ததே இல்லையா'. 'இல்லை' என்றேன். ’உனக்கு தாகமே எடுக்காதா?தண்ணீர் வேண்டாமா? 'இரையை எப்படிக் கண்டடைவாய்' என்றது. 'எல்லாம் கருஞ்சிவப்பு பறவை தரும்' என்றேன். 'இப்போ அது எங்கே'. 'என்னை அநாதரவாக விட்டுச் சென்று விட்டது'. 'உன்னை பார்த்தால் பாவமாக இருக்கிறது' என்று கூறிய நீலப்பறவை. 'பறவையின் சுதந்திரமே அது தனித்து உணவு தேடுவதும், தன் வீட்டை தானே கட்டிக்கொள்வதும்தான். வானம் என்பது பறவையின் பயண வெளி. பறத்தலில் சுதந்திரம். அது வாழ்விடம் அல்ல.நீ தரை தொட வேண்டும். காற்றை உந்தித் தள்ளி தரையிலிருந்து வானம் தொடும் பறத்தல் சாகசமானது. அதேபோல் வானியிலிருந்து தரை தொடுவது காற்றில் மிதக்கும் பேரானந்தம். சமதளத்தில் பறப்பது பறத்தலே அல்ல' என்றது நீலச்சிறகு பறவை.
’வானம் அளவிற்கு பூமியும் அழகு. பூமியின் அழகைப் பார்க்கவேண்டுமென்றால், நீ தரை தொட வேண்டும்.தரை தொடாத பறத்தல் முற்றுப் புள்ளியற்றது. தரை தொடாத வான் பறத்தலில் நீ பார்த்தது என்ன.நீ அடைந்தது என்ன.’.நீலப் பறவை இந்த கேள்விகளை என் முன் வைத்தது.‘வெண் மேகம் பார்த்திருக்கிறேன், மழை பார்த்திருக்கிறேன். சிலபொழுது வானவில்,நீல ஆகாயம்,எப்போதாவது செவ்வானம்,கரும் இருள்.அதிகாலை மஞ்சள் வானம்.’.நான் சொல்லச் சொல்ல நீலப் பறவை சிரித்தது. ‘சுருக்கமாகச் சொல் வானும், வான் சார்ந்தவையும் பார்த்திருக்கிறாய்.மழை அறிந்த நீ, மழை தரும் மண் வாசம் அறிந்திருக்கிறாயா?மழை தரும் பசுமை அறிந்திருக்கிறாயா?மழை தரும் பூக்கள் அதன் வாசம்.காட்டருவி,அதன் சங்கீத இசை' நீலப் பறவை நான் அறியா பல அழகியலை எனக்கு சொல்லிக்கொண்டிருந்தது. அதன் ஒவ்வொரு வர்த்தைகளுக்குள்ளும் ஒரு புன்னகை இருந்தது.நீ தரை இறங்கியாகவேண்டும் என அது கட்டளை இடவில்லை. தரை இறங்கவில்லைஎன்றால் உனக்கு வாழ்க்கை இல்லை என அச்சுறுத்தவில்லை.தரை இறங்கும் பயத்தை போக்கியது. பூமி பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது.
சிறகுகள் இருப்பது மேலே மேலே பரப்பதற்குதானே தவிர தரை இறங்குவதற்கு இல்லை என்றே நான் கற்பிக்கப் பட்டிருந்தேன். என் தவறான கற்பிதங்களை நீலப் பறவை எனக்கு புரிய வைத்தது.நான் நீலப் பறவையோடு தரை இறங்க எத்தனித்தேன். தரை நோக்கி நான் பறக்கும் முதல் பறத்தல். உயரப் பறத்தலும், சரிசமமாகப் பறத்தலுமே அறிந்த என் சிறகுகள் முதல் முறையாக கீழ் நோக்கி பறக்கத்துவங்கியது.
தாளப் பறத்தல் என்னுள் ஏதோ செய்தது. அடி வயிற்றில் ஒரு பயப்பந்து சுழன்றது. ஆனால் அது சுகமாக இருந்தது. என் தடுமாற்றத்தை அறிந்த நீலப் பறவை தன் வேகத்தை குறைத்து என் வேகத்திற்கு வந்து எனக்கு வழிகாட்டியது.
மிகப் பெரிய அடர்ந்த காட்டில் ஓடுகிற காட்டாற்றின் கரையில் தரை இறங்கினோம். நீலங்களும்,நீலம் சார்ந்த நிறங்களும் பழகிய.. என் விழிகளுக்கு காட்டின் பசுமை புதியதாக இருந்தது.காட்டு மரப்பூக்களின் நறுமணங்கள், மண் வாசம், நான் அறிந்திராத வித விதமான வண்ணங்கள்.தரை இறங்கிய என் கால்கள் தரை தொடவில்லை.எனக்கே எனக்கான வெளிகளில்..எனக்கே எனக்கான இசை உலகில்..என் சுதந்திரத்தின் முதல் புள்ளியில் நான் காலடி எடுத்து வைத்தது போல இருந்தது.குயிலின் பாடல், மயில்களின் நாட்டியம்,சில்வண்டுகளின் ரீங்காரம், அருவிச்சத்தம், இத்தனைக்கும் மத்தியில் என்னை தரை இறக்கிவிட்டு..'விரும்பியபடி வாழ்..உன் சுதந்திரம் உன் சிறகுக்குள் இருக்கிறது. நடக்க நினைத்தால் நட, பறக்க நினைத்தால் பற' என்றது.
நான் அதன் முன்னே என் சிறகுகளை விரித்து நின்றேன். நீலப்பறவை என்னை வினோதமாகப் பார்த்தது.'என்ன' என்றது. 'என் சிறகுகளை வெட்டிக்கொள்' என்றேன்.புரியாமல் பார்த்தது அந்த நீலப்பறவை. 'என் வாழ்வியலை இதற்கு முன் தீர்மானித்த பறவை,வளர வளர என் சிறகுகளை வெட்டிக் கொண்டே இருந்தது. இப்போது நீ எனக்கான வாழ்விடத்தை அடையாளம் காட்டி இருக்கிறாய் நீயும் என் சிறகுகளை வெட்டிக் கொள்' என்றேன். அது மௌனமாக புன்னகைத்தது. ரெக்கைகள் வெட்டப்படுவதன் வலி நானும் அறிந்திருக்கிறேன். தீராத துயரமாய் வலி தொடர்ந்த போது நான் என் சிறகுகளை காப்பாற்றிக் கொண்டேன். கூடு கட்டுவதும், உணவு தேடுவதும், விரும்பும் இடத்தில் பறப்பதும் வாய்க்கப்பெற்றிருப்பது இயற்கை பறவைகளுக்கு தந்த சுதந்திரம். இனி ஒருபோதும் யாரும் உன் சிறகுகளை வெட்ட அனுமதிக்காதே.
நாங்கள் நடந்த பாதையெங்கும் சிறகுகள் உதிர்ந்து கிடந்தன. என் சிறகுகளைப் போல் யாரோ ஒரு பறவையின் சிறகுகளை வெட்டி எரிந்திருக்கிறார்கள் என்ற அச்சம் என்னுள் எழுந்தது. 'தரையிலும் சிறகுகள் வெட்டப்படுமா' என்று அச்சத்தோடு கேட்டேன். உன் உரிமையையும், சுதந்திரத்தையும் நீ அறியாமல் இருந்தால் வான், பூமி என்று இல்லை பேரண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் உன் சிறகுகள் வெட்டப்படலாம். ஆனால் இவை வெட்டப்பட்ட சிறகுகள் அல்ல. உதிர்ந்த சிறகுகள். சிறகுகள் உதிர்ப்பது பறவைகளின் சுதந்திரம்'எனச் சொன்னது நீலப் பறவை . கருஞ்சிகப்புப் பறவை அன்பை ஒரு அச்சுறுத்தலாகவே என்னிடம் காட்டியிருக்கிறது.என் சிரம் வருடி,என்னை மடியில் கிடத்தி ஒரு ஆறுதல் மொழிகளை என் செவிகளுக்குள் மாயச் சொற்களாய் ஒலிக்கச் செய்து என் மயக்கத்தினூடகவே என் சிறகுகளை வெட்டி எறிந்திருக்கிறது.சொற்களின் சூட்சுமம் அறியாத என் பேதைமை அதன் வார்த்தைகளை நம்பியிருக்கிறது. 'சிறகுதிர்த்தல் பறவையின் சுதந்திரம்'. நீலப் பறவையின் சொற்கள் என் செவிகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.விலாப்புறம் இருந்த என் வெட்டப்பட்ட சிறகுகளைப் பார்த்தேன். இந்த சிறகுகள் வளரும் வரை பூமியில் இருக்க வேண்டும். வளர்ந்த சிறகுகளை சுதந்திரமாக உதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உன் சுதந்திர வாழ்வினை தீர்மானித்துக்கொள் என்று என்னிடமிருந்து விடைபெற்ற நீலப் பறவையிடம் வெண்மை என்பது நிறமில்லையா? எனக் கேட்டேன்.
'எல்லா நிறங்களின் மூலமும் வெண்மைதான். வெண்மை கலப்பில்லாமல் எந்த நிறமும் உலகில் இல்லை. வெண்மை வெறும் நிறமல்ல..அது அழகின் பொருள். சுதந்திரத்தின் முழுவடிவம். அருவி,நிலா,வெண்மேகம்,பூக்கள், தேவதை சிறகுகள்,எல்லாமே வெண்மைதான்' என்றது. என் சிறகுகள் வெண்மைதான் என்றேன். 'ஆம் அது தேவதையின் சிறகுகள்' என்றது நீலப் பறவை. மெல்லிய காற்று வீசியது.நீலப் பறவை தன் நீள் சிறகுகளை விரித்தது. அதன் சிறகுகளுக்குள் ஒளிந்து கொள்ளவேண்டும் போல இருந்தது.நான் அதை நீலப் பறவையிடம் சொன்னேன். நீலப் பறவை சிரித்தது.’வாழ்கை எதற்குள்ளும் ஒளிந்து கொள்வதல்ல.அது ஏகாந்தமாய் பறப்பது. சுயமாய் இருப்பது. இரை தேடப் பழகு.. கூடு கட்டப் பழகு..பறவையாய் வாழப்பழகு’ என்று சொல்லி தன் நீல நிறச் சிறகொன்றை உதிர்த்து பறந்தது.
நான் பூமியில் என் கால்களை அழுந்தப்பதித்து நடக்கத் துவங்கினேன். கட்டளைகளுக்குக் கட்டுப்படாத என் காலடிச்சுவடுகளை எனக்கு மிகவும் பிடித்தது .நான் நீண்ட தூரம் நடந்தேன். இயற்கையின் வனப்புகள் என்னை மயக்கமூட்டின. கானகத்தின் நடுவில் இருந்த ஒரு மரத்தில் கனி பறித்தேன்.அது இதுவரை நான் ருசித்தறியாத சுவையோடிருந்தது. இதற்கு முன் இரை என்பது கருஞ்சிகப்பு பறவை அலகில் கொண்டு வரும் சுவையறியா, ரசனையற்ற இரையாவே இருந்தது. முதல் முறையாக நானே என் இறையை தேடிக் கொண்ட சந்தோசத்தில் சிறகுகளை பட படவென அடித்துக் கொண்டேன். வெட்டப்பட்ட சிறகுகள் இல்லையா? அது கொஞ்சம்தான் விரிந்தது. என் சிறகுகள் வளரும். என் ரெக்கைகளை அகல விரித்து பூமியில் என் நிழல் பட நான் ஏகாந்தமாய் பறப்பேன். இயல்பாய் சிறகு உதிர்ப்பேன். உதிர்ந்த என் வெண் சிறகுகள் புன்னகை மாறாத ஒரு குழந்தையின் விளையாட்டுப் பெட்டகத்தில் பொக்கிஷமாய் பாதுகாக்கப்படும். அந்தக் குழந்தையின் புன்னகை வ்ழியாக என் சுதந்திரம் வெளியெங்கும் நிரம்பி வழியும்.
(இம்மாதம் ‘தி சண்டே இந்தியன்’ இதழில் வெளிவந்த சிறுகதை)
ரயில்நிலையத்தில் நிகழாமல் இருந்திருக்கலாம் அந்தப் பிரிவு. முன்பு ஒருநாள்மழைக்காலத்தில் அவன் அருகில் அமர்ந்திருந்தபோது இனிய சங்கீதத்தைப்போலதாலாட்டிய ரயிலோசை இன்று மிகப்பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இனிமேல்அவனிடத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை. வாழ்நாள் முழுதும் கூடவருவேன் என்றுசொன்னவன் இப்படி ரயில்நிலையத்தில் ஒரு கைஅசைவில் நம்மிடையே உறவு
முறிந்துவிட்டது என்று சொல்வதற்காக வந்திருக்கிறான். ரயில் அவனைக் கடந்துபோகும்கணநேரத்தில் அத்தனை அன்பையும் காற்றில் விட்டுவிட்டுப் போய்விடுவேன் என்றுநினைக்கிறானா? அவ்வளவு எளிமையானதா காதல்.
எந்த வினாடியும் என் கைகளைப் பற்றிக்கொண்டு "ஒரு பிரச்சினையும் இல்லடா. எதுக்கு
நீ தேவை இல்லாம மனசைப்போட்டுக் குழப்பிக்கிற. எல்லாமே அப்படியேதான் இருக்கு"
என்று சொல்லிவிடமாட்டானா என இதயம் தவித்தது. அவனோ மிக நிதானமாக
"எத்தனை மணிக்கு டிரெயின் கிளம்பும்" என்றான். இன்னும் நம்பிக்கை மிச்சமிருந்தது.
எனக்கான அன்பு, அவன் கண்களில் எஞ்சியிருக்கிறதா என்று தீவிரமாகத் தேடத்
தொடங்கினேன். அவன் முகத்தில் இறுக்கம் கூடக்கூட அவன் முன்பு எனக்குள்
ஏற்படுத்திய அன்பெல்லாம் நலிந்து சிதைந்து உருகி ஓடியது. காதலின் வேகத்தைப்
போலவே பிரிவும் அதே அழுத்தத்தோடு அவனிடமிருந்து வெளிப்பட்டது.
"நமக்குள்ளே இப்படி ஒரு பிரிவு வேணுங்கிறதை நீ புரிஞ்சிக்கணும். இவ்வளவு
சண்டையோட நாம எப்படி வாழ்க்கையைத் தொடங்க முடியும்" என்று அவன்
பேசிக்கொண்டே போக தாங்க முடியாத அருவருப்பில் இரண்டு கைகளையும் முகத்தில்
வைத்து மூடி 'சீ' என்று சத்தமாக கத்தினேன். "இதான், இந்த மாதிரி ஆர்ப்பாட்டம்
பண்றதாலதான் இத்தனை நாளும் உன்னைப் பார்க்காம இருந்தேன். அவ்வளவுதான்,
உனக்கும் எனக்கும் எல்லாம் முடிஞ்சுபோச்சு. இனி என்னைத் தேடி வந்து
அசிங்கப்படாதே''. என் பேச்சை கேட்க விரும்பாமல் உடனடியாக அந்த இடத்தைவிட்டு
நகரத் தொடங்கினான்.
அமிலம் சொட்டும் வார்த்தைகளை வீசிவிட்டு ஜனத்திரளில் ஊர்ந்து மறைந்து போனான்.
ஆடாமல் அசையாமல் அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த நான் மிக
ஆக்ரோசமாக கத்தி அழத்தொடங்கினேன். என் அருகிலிருந்தவர்கள் எல்லாம்
கண்டிப்பாக என்னை நாகரீகமற்ற பெண்ணாக நினைத்திருக்கவேண்டும்.
அதைப்பற்றியெல்லாம் கவலைப்படும் நிலையில் நான் இல்லை. உணர்வுகள்
பெருக்கெடுத்து ஓடின. கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வயிற்றைப் புரட்டிக்கொண்டு
வந்தது. வாந்தி எடுக்க இடம் தேடினேன். ரயில்பாதையைத் தவிர வேறெதுவும்
தட்டுப்படவில்லை. பிளாட்ஃபார்மில் தலையைப் பிடித்து உட்கார்ந்தேன்.
பத்துவினாடிகள்கூட சென்றிருக்காது. என்னைச்சுற்றி பெருங்குரல்கள். 'ஏய் வாவா' என்று
ஒரே கூச்சல். எனக்கு தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. கண்களிலிருந்து காட்சிகள்
மறையத் தொடங்கின. யாரோ என்னை வேகத்தில் பிளாட்ஃபார்முக்குள்
இழுத்துப்போட்டார்கள். நான் செல்ல வேண்டிய மதுரை எக்ஸ்பிரஸ் சத்தத்தோடு
ஊர்ந்து நின்றது. என் பக்கத்திலிருந்து "என்னாச்சுமா" என்று
கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ரயிலில் இருக்கையைத் தேடக் கிளம்பிவிட்டார்கள். தன்
நினைவு மெதுவாக திரும்பிக்கொண்டிருந்தது. தலை கனத்து வெடித்துச் சிதறுவது
போன்ற வலி ஏற்பட்டது. ரயில்நிலையத்தின் எந்த மூலையிலிருந்தாவது மீண்டும் தோன்றி
என் கைகளை பிடித்துக்கொள்ளமாட்டானா என்று மனது ஏங்கியது.
அவன் எப்படி என்னை வெறுத்து மறந்துபோக முடியும். ஆனால் அவன்
என்னைவிட்டுப் போனது நிஜம். அந்த இடத்தைவிட்டு உடனடியாக நீங்கிச்செல்ல
விரும்பினேன். கனவைப்போன்று எல்லாம் நடந்துகொண்டிருந்தது. கண்ணீரைத்
துடைத்துக்கொண்டேன். முற்றிலுமாக அவனை என் ஞாபகத்தில் இருந்து அகற்ற
வேண்டும். இல்லை ஓடும் ரயிலிலிருந்து குதித்துச் சாக வேண்டும். நொடிப்பொழுதில்