வியாழன், 19 மே, 2011

தணிக்கை மீறும் உணர்வுகளின் புனைவு வெளி _ அசதா


’காட்டின் பெருங்கனவு’ தொகுப்பு,அதன் கதைகளில் சந்திரா படைத்துதரும் பெண்களின் பருண்மையுலகும் மரபான சமரசங்கள் கொண்டு கட்டப்படாத அவர்களின் அகவுலகும் சமகால தமிழ்ச்சிறுகதை வெளியில் இதுவரை காணாத சில திறப்புகளைக் கொண்டு விளங்குவதனை முன்னிட்டு ஒரு முக்கியத் தொகுப்பாக அமைகிறது. புனைவின் பொதுவளியில் பெண் கதை மொழிதல் என்பதன் வழமைகளும் மறுப்புகளும் மீறப்படுதலில் தொடங்கி,பெண்ணிய கருத்தாக்கங்களை மீட்டுருவாக்கம் செய்வது வரையிலான எழுத்துக்களை நாம் தொடர்ந்து கண்டு வரும்போதும் பெண் புனைகதையாளர்களது எண்ணிக்கை சொற்பத்திலும் சொற்பமாக நிற்கையில் மிக சுருங்கியது எனச் சொல்லத்தக்கதான என் வாசிப்பு வெளி அம்பை, லதா ராமகிருஷ்ணன்(அனாமிகா),உமா மகேஸ்வரி,சு.தமிழ்ச்செல்வி,சந்திரா,உமா ஷக்தி என்பதான வெகு சில பெயர்களையே உள்ளடக்கியதாய் இருக்கிறது.பரந்த வாசிப்பனுபவம் உடைய வொருவரும் இப்பட்டியலோடு ஒன்றோ அல்லது இரண்டோ பெயர்களை இணைக்குமளவிலேயே நம் சூழலின் யதார்த்தம் அமைந்திருக்கிறது என்பது என் துணிபு. இப்பின்னணியைக் கருத்தில் கொள்கையில் சந்திராவின் ‘காட்டின் பெருங்கனவு’ தொகுப்பினை ஒரு முக்கிய வரவாக நாம் காணவேண்டியுள்ளதன் அவசியத்துக்கு இன்னும் வலு கூடுகிறது.
தலைப்புக் கதையான ’காட்டின் பெருங்கனவு’ குறிஞ்சி நிலக்காட்சிகளை பின்புலமாகக் கொண்டமைந்து,பதின்ம வயது பெண் மனதின் அசலான உணர்வுகளை மரபார்ந்த தணிக்கைகளுக்கு தொலைவே வைத்து புனைவாக்கிய வகையில் தொகுப்பில் சிறந்த கதையாக நிற்கிறது. கேரளத்தை ஒட்டிய மேற்கு மலைத்தொடரின் காட்சிகளும், நாம் அதிகம் அறிந்திறாத மிளகு பிடுங்குதல் போன்ற வாழ்வாதாரச் செயல்களும் ஊடுபாவிய ஒரு நிலவெளியில் தூரிகையால் தீட்டுவது போல கதை வளர்க்கப்படுகிறது. கதைப் பெண்ணின் தன்னிலை வழியாக விவரிக்கப்படும் காதலின் முகிழ்ப்பும்,தீவிரமும்,தவிப்பும்,பிரிவும் என கனவுத்தன்மை விலகாத காட்சிகள் வழி பெண்மையின் காதல் அபோதமானது, தத்துவம் மற்றும் தர்க்கங்களின் நிழல் கவியாத தூரத்தில் அப்படியே படைத்து தரப்படும் பாங்கில் தீர்க்கமும் வலுவானதொரு பிரதியாக இக்கதை இருக்கிறது. பிரிவின் தருணத்தில் அவளின் காதலை உணர்ந்துவிடும் பெரியம்மா கூட அதை வெளிக்காட்டிக்கொள்ளாமிலிருப்பது கதையின் போக்கில் உறுத்தலின்றி பதிவாகையில் காதல் குறித்த அசலானதொரு பெண்ணிய கருத்தாடல் இயங்கும் பிரதியாக இக்கதை முழுமை பெறுகிறது.
’காட்டின் பெருங்கனவு’ கதையின் பெண்ணைப் போன்றவளே ‘மருதாணி’. ஆனால் மருதாணியின் உள வேட்கையும் காதல் அபோதமும் சமூகத்தின் பின்னணியில் ’மருதாணி’ கூடுதலானதொரு அர்த்த பரிமாணத்தை பெறுகிறது. இவ்வேட்கையைப் பின்பற்றிச் செல்வதன் எல்லா எதிர்மறை விளைவுகளையும் அறிந்தவளான மருதாணி அவை பற்றி கவலை எதுவும் கொண்டவளாகத் தெரிவதில்லை. ‘காட்டின் பெருங்கனவு’ கதையின் பெரியம்மாவைப் போல மருதாணியின் அண்டையில் வசிக்கும் பெண்களும் அவளது அந்தரங்க காதலை அறிந்தும் அதன் எதிர்மறை விளைவுகள் பற்றி அறிவுரை சொல்வதோ அல்லது அவளை கேடானவளாக கருதி விலக்குவோ இல்லை என்பது இங்கு முக்கியமாகக் காணத்தக்கது. எந்த வகையானாலும் பெண்ணின் காதலென்பது ஒழுக்கக் கேடாகவும் மீறலாகவும் சமூக கட்டுமானம் இக்கதையை வேறொரு தளத்துக்கு நகர்த்துகிறது. திருமண உறவை தாண்டிய தன் காதலை-இக்காதல் உண்டாக்கி வளர்ந்த சம்பவப் பின்னணி மருதாணியின் தரப்பை நியாயம் செய்பவையாக அமைந்திருக்கின்றன-அடைய முனைவதான மருதாணியின் செயல்களில் துளியும் அச்சமோ குற்றவுணர்வோ இல்லையென்பதோடு தன் காதல் உணர்வின் உந்துதலைப் பின்பற்றி செல்லும் மருதாணி அதற்கான வசைகலையும் அடிகளையும் தாய்வீட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் அவமானத்தையும்கூட தன் அந்தரங்க காதலோடு சேர்ந்து செயல்களாக கருதி இயல்புகாக்கிறாள் என்பது இங்கு குறிப்பிடத் தகுந்தது.சங்கப் பாடல்கள் தொடங்கி ஆண்டாள் வழியாக மேலை நவீன இலக்கியங்கள் வரை நாம் கண்டு வந்திருக்கும் காதல் மேலிட்ட பெண்களை ஒரு கணம் பழம் வார்ப்புகளாக தோன்றச் செய்வதான வலுவுடனும் புத்தாக்கத்துடனும் இப்பெண்கள் படைக்கப்பட்டிருப்பதாக ஒருவர் கூறவியலும்.
பெண்ணின் அகமன வாதைகளைப் பேசும் கதைகளாக ‘பன்னீர் மரத்தெரு’, ‘ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை’ ஆகிய கதைகள் அமைந்திருக்கின்றன. ஒரு கதை சொல்லியாக தனது இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் தொலைக்காட்சி பெட்டியினால் மன சமநிலை குலையும் அகிலாவைப் பற்றி ‘பன்னீர் மரத்தெரு’ மனதோடு ஒன்றிய இயல்பான விசயங்களை துறந்து நவீன வாழ்வின் அர்த்தமற்ற ஜோடனைகளுக்கு தம்மை ஒப்புக் கொடுக்க முடியாதவர்களது- அதுவும் பன்னீர் பூக்களையும்,குழந்தைக் கதைகளையும் நேசிக்கும் தனிமை பீடித்த ஒரு பெண்ணின்- அகத்துயரம் பற்றியது. பெண்ணின் வாதைகள் கட்டமைக்கப்படும்விதம் ‘ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை’ கதையில் சொல்லப்படுகிறது. கணவனது சுயநலத்துக்காக கவிதா திட்டமிட்டே பைத்தியமாக சித்தரிக்கப்படுகையில் உறவும்,சமூகமும்,நமது மருத்துவ முறைகளும் உதவி செய்ய அவள் நிஜமான பைத்திய நிலையைத் தொடர்கிறாள். சிறுநகரத்து மனநல மருத்துமனையில் தன்னைவிடவும் மோசமான நிலையில் காணப்படும் பெண்களை கண்டு பரிதாபப்படுபவளாக இருக்கும் கவிதா அவள் கணவனுக்கு வெறும் போக வஸ்து. தனது கள்ள உறவை கண்டு பிடித்துவிடும் அவளை பைத்திய பட்டமும் கட்டி பழி தீர்க்கிறான் கணவன். மாமியாரோ அவள் குழந்தையை அவளிடமிருந்தும் பறிக்கத் தீர்மானம் கொண்டவளாகயிருக்கிறாள். கவிதாவின் சித்தி கூட இரக்கப்படுவதைத்தாண்டி அவளை புரிந்து கொள்ள முயல்வதில்லை. இவ்வாறு எல்லாராலும் கைவிடப்பட்ட தனிமையின் பெருதுயர் சூழ அவள் நிஜமாகவே பைத்தியமாகிறாள். பெண்ணானவள் தனிமை, துயர் ஆகிய எந்தரக்கற்கள் கழுத்தில் கட்டப்பட்டு மாயும் யதார்த்த உலகின் ஒரு சிறு கீற்றாக இக்கதை பதிவு பெறுகிறது.
‘சூது நகரம்’, ’கழிவரை காதல் பிரதி’ கதைகள் நகர்சார்ந்த வாழ்வின் பின்னணியில் விளிம்பு மக்களை பேசும் வகையில் ஒன்றாக வைத்து பார்க்க வேண்டிய கதைகள். இரு கதைகளுமே ஒருவித இணைக்கோட்டு தன்மையான விவரிப்பனை உத்தியாக கொண்டிருப்பவை. நகரத்தின் இரக்கமற்ற முகமும் சூதுவாதற்று எவரையும் நம்பும் எளியவர்களை அது தன் சூழலுக்குள் சிக்க வைத்து கபளீகரம் செய்து விடுதலும் ’சூது நகரம்’ கதை. நகரத்தின் பெரு விரிவில் தமது முகங்களை மறைத்து ஆடும் கண்ணாமூச்சியின் முடிவில் நிஜம் தெரிய வரும்போது ஏற்படும் ஏமாற்றம் ‘கழிவரை காதல் பிரதி’ இரு கதைகளுமே ஒருவித நம்பிக்கை வறண்ட எதிர்மறையான தொனியில் புனையப்பட்டிருக்கின்றன என்ற போதும் நகர் சார்ந்த புறச்சித்தரிப்புகளும் கதை மாந்தர்களது சித்தரிப்பும் கதைகளை ரசிப்புக்கு உகந்ததாக்குகின்றன. ‘தரை தேடிப் பறத்தல்’ சுதந்திரம் என்னும் கருத்துருவாக்கத்தை வழமைக்கு மாறான பின்னோக்கிய உருவகமாக பறந்து கொண்டிருக்கும் பறவை தரையைக் கண்டுவிடுவதை ஏக்கமாக கொண்டிருப்பதாக புனைந்திருப்பது புதுமையானது. கருஞ்சிவப்பு,வெள்ளை,மஞ்சள்,நீல பறவைகள் வழியாக இக்கதை விரிவு பெறுகிறது.’வாழ்க்கை எதற்குள்ளும் ஒளிந்து கொள்வதல்ல. அது பறப்பது. சுயமாய் இருப்பது. இரை தேடப் பழகு. கூடு கட்டப் பழகு. பறவையாய் வாழப் பழகு’ நீலப் பறவை வெள்ளைப் பறவைக்கு அறிவுறுத்துகிறது. குறியீடானாலும் கதையின் பெண்ணிய பார்வை தீர்க்கமாக புலப்படும் வகையிலமைந்தகதை இது. ‘நதியில் மிதக்கும் கானல்’ கதை பெண்ணின் காதல் துயர் பற்றியதாக இருந்தபோதும் ‘காட்டின் பெருங்கனவு’ கதையினை போலின்றி கழிவிரக்கமும் புலம்பலுமான சோகமுமாக நிறைவடைகிறது. அங்கதம் தேர்ந்த புனைக் கதை எழுத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று.’பீத்தோவனும் கலைந்த காதலும்’ அங்கதத்தின் பாற்பட்ட எளிமையான, அடங்கிய அங்கதம் அமைந்த கதை.
பெண்ணிய நோக்கிலான புனைவெழுத்தினை சமரசமற்ற பாத்திர உருவாக்கங்களினால் புதிய தளங்களை நோக்கி நகர்த்தும் சந்திரா தீர்க்கமான பின்னல்களுடன் கதையை கட்டமைப்பதிலும் சரளமாக அதை சொல்லிப் போவதிலும் தனக்கிருக்கும் தேர்ச்சியை இத்தொகுப்பின் மூலமாக நிரூபித்திருக்கிறார். கதை மொழிக்கு கூர்மையளிப்பது தனது கதை புலன்களை வாழ்வு குறித்த பலவித பார்வைகளுக்குமாக விஸ்தரித்துக் கொள்வது போன்றவற்றால் இன்னும் சிறப்பான கதைகளை அவர் எழுத முடியும். அந்த நம்பிக்கையினை இந்த தொகுப்பு குறைவில்லாது வழங்குவதாகவே இருக்கிறது.

’காட்டின் பெருங்கனவு’- சிறுகதைகள்(2009).ஆசிரியர்:சந்திரா,வெளியீடு:உயிர் எழுத்து பதிப்பகம்.9,முதல் தளம்,தீபம் வணிக வளாகம்,கரு மண்டபம்,திருச்சி 620 001.

நன்றி:கல்குதிரை
வேனிற் காலங்களின் இதழ்.

2 கருத்துகள்:

Alb சொன்னது…

இந்த பன்னீர் மரத்தெரு விகடனில் வந்ததா ?! - நல்லா இருக்கும் !! வாழ்த்துகள்..

chandra சொன்னது…

@Alb,நன்றி. பன்னீர் மரத்தெரு விகடனில் வந்த கதைதான்.