வியாழன், 17 மார்ச், 2011

ஓவியத்தில் மறைந்துகிடக்கும் தற்கொலை

நீங்கள் அந்த தற்கொலையை ரசிக்காமல் இருக்க முடியாது.
இதயத்தை பிடுங்கி எறிவதைப் போன்ற அல்லது
உங்கள் அழகியலை தூண்டக்கூடிய சாவகாசமான ,
உங்களை எந்த குற்ற உண்ர்விலும் ஆழ்த்தாத
அழகான தற்கொலை அது
ஆம்
இளம் சிவப்பும் ஆரஞ்சு கலந்த மஞ்சளும் சூழ்ந்த அழகான அந்திச் சாயலில்
வண்ணங்களை உள்ளிழுத்து பயிர்பருத்த கோதுமை வயலில்
எல்லையற்ற நீண்ட சமவெளியில் நடுவில் ஓடும்
மனிதர்களற்ற நீண்ட ரயில்பாதை.
வான்கோ தன் ஓவியத்தில் வரைந்திருக்கலாம்
அல்லது அதன் தோல்வியை கண்டிருந்திருக்கலாம்
ஏகாந்தத்தில் மிதந்த பெண் ஒருத்தி
திறந்த ரயில் கதவின் கம்பிகளை பிடித்தவாறு
இயற்கையின் அத்தனை அழகியலும் கண்டு திருப்பியுற்றபின்
காற்றின் மிதக்கும் அவள் ஆன்மா நிறைவடைந்த கணத்தில்
அத்தனை அழகியலை பூரணமடையச் செய்ய
அவளிடம் இருப்பது ஒரே வழிதான்
வெள்ளை வண்ண உடையில்
இதுவரை யாருமே அடைய முடியாத அழகான கோணத்தில்
ஒரு பறவையைப்போல் பறந்து
கோதுமை வயலில் உடல்பரப்பி வீழ்ந்து கிடப்பது
அது உங்களால் ரசிக்காமல் இருக்க முடியாத வரைபடம்
என்பதில் வியப்பில்லை
ஆனால் எவராலும் வரையப்பட முடியாதது
அப்படியே முனைந்தாலும்
அந்த இளம் வெள்ளை உடைக்காரியின் பறவையின் உடல்
தூரிகையில் மிதந்துகொண்டிருக்குமே தவிர
உங்கள் ஓவியங்களில் அரூபமாக மட்டுமே
ஒளிந்துகிடக்கும்
என் கவலையெல்லாம்
அந்த அழகான தற்கொலையை உங்களால்
ஞாபகத்தில் வைத்துகொள்ள முடியாதது என்பதுதான்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சூப்பரா இருக்கு சந்திரா! கவிதையா இருக்கு! அழகிய சினிமா காட்சியா இருக்கு! இந்த கவிதையை ரசிக்காமல் இருக்க முடியாது!

சாய் ராம் சொன்னது…

சூப்பரா இருக்கு சந்திரா! கவிதையா இருக்கு! அழகிய சினிமா காட்சியா இருக்கு! இந்த கவிதையை ரசிக்காமல் இருக்க முடியாது!

chandra சொன்னது…

நன்றி நண்பா.