புத்தக மதிப்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தக மதிப்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 மார்ச், 2013

என் கதைகள் குறித்து கோணங்கி எழுதியது.....


தமிழ்ச் சிறுகதைகள் குறித்து பல்வேறு எழுத்தாளர்களின் கதைகளை ஆராய்ந்து, ”கல்குதிரை” பனிக்காலஇதழில் தலையங்கம் கட்டுரையில் கோணங்கி எழுதிய,
’நாளைக்கான இன்றைய தமிழ் புனைகதைகளில் ஆண்டன் செகாவின் நீல நுரையீரல் வரைபடம்’
என்ற நீண்டக் கட்டுரையில் அழகம்மா தொகுப்பிலிருக்கும் என்னுடைய கதைகள் குறித்து அவர் எழுதியதை மட்டும் இங்கே எடுத்து பதிவு செய்திருக்கிறேன்.

”சந்திராவின் இப்போது வந்திருக்கும் அழகம்மா தொகுதியின் தலைப்புக்கதை வேனிற்கால இதழில் வந்தபோது மூன்று முறைக்கு மேல் எழுதி அவர் செழுமைபடுத்தியதில் அது பரிமாண பூரணத்துவம் அடைவதற்கான உரையாடலாய் அமைந்தது. பச்சைக்குமாச்சி மலைகளில் அசையும் அழகம்மாவின் கால்கள் தேவதை அருவியாகப் பாய்ந்து இறங்கிக்கொண்டிருந்தது. துரட்டி மரம் கிணறு வழியாக நடந்து செல்லும் ஆண்களெல்லாம் பெண்களை துணைக்கு அழைத்துக்கொண்டுபோகிறார்கள். சமயத்தில் கிணற்றை விலகியே போகிறார்கள். ஊரை விட்டு விலகி இருக்கும் பலியான அழகம்மாளின் நினைவு தொடரும். ஒவ்வொருவரும் பாங்கிணற்றைக் கடந்தே போயினர். தொட்டால் ஒட்டிக்கொள்ளும் கெவியில் மறதியிலிருந்து பொருட்களின் முனகல்களை கேட்டார்கள். ஒவ்வொரு ஊருக்குமே பெண்களை ஈர்த்து கிணறுகளும் தூர்ந்திருக்கும். இடம்பெயர்ந்தவர்களும் கிணற்றைச் சுற்றி எல்லையற்ற ஒரே ராத்திரிக்குள் போகிறார்கள். 

ஒவ்வொரு ஊரிலுமே வேறு வேறு தூர் விழுந்த கிணறுகள் இருக்கும். இழுவங்கிணறு, ஆனைக்கிணறு, பாண்டியன் கிணறு, கூளப்பநாயகன் பெருங்கிணறு, பேய்கிணறு,தூங்கேணியில் உறங்கும் கூந்தல் விதைகள் நீரற மகளிராய் பாய்ந்து வெளியேறிச் செல்கிறார்கள். பனையடியில் பலியானவள் மடக்கு ஓலைக்கன்னியாகவும் பள்ளத்தில் தள்ளிவிடப்பட்ட பெண்ணே வனந்திரியும் இருளாக அலைகிறாள். சொல்லக்காத்திருக்கும் அழிக்காளியாக மாறி அழகம்மா பிஞ்சால் ராமன்,பரமன் இருவரையும் கூந்தலிலும்,தன்யங்களிலும் உதிரம் பூசுகிறாள்.குரும்பனை மட்டும் ஒன்னும் செய்யாமல் விடுகிறாள். அவளுக்குத் தன்னைக் கொன்ற புருஷன் மேல் தான் எவ்வளவு ஆசை? நூறு ஊர்களின் மடக்கு ஓலைகளில் கீறிய கிணறுகளை குறீயீடாக்கி புதுமைப்பித்தனின் ஞானக்குகையில் வரும் வாலைக் கனிவு குன்றா கன்னியின் மோனமும்,பேய்மையின் சிரிப்பும், உயிர் குடிக்கும் வெறியும், உடனே மாறும் குழந்தையின் சிரிப்பும் அழகம்மா கதையில் சாத்தியப்பட்டிருந்தும் ஊர் எல்லையிலேயே நின்றுவிட்ட தழும்புகள் சிவந்த வாய்மொழிக் கதைக் கூற்றுகளின் அடர்த்திக்குள் அமைந்துவிடுகின்றன மறுசொல்லாய். ஸில்வியாவின் ‘பெண் வேடமிட்ட பெண்’ கதையின் சொல்லாடல்களை கதை இயக்கத்தின் விசிறி மடிப்பாக வெவ்வேறு பேசு பொருள்களை முரண்பட்ட தன்னிலையில் இருந்து பன்மை பிரதியாக்கத்துக்கு இட்டுச்செல்கிறது. ஆயினும் ஒரு சீரான கதையாக்கம் நடந்திருக்கிறது அழகம்மா கதையில். 

தொகுதியின் கடைசிக் கதையான ‘வெகுநாட்களுக்குப் பின்னான மழை’ கதையில் கரட்டுப்பட்டிக்கு திரும்பிக்கொண்டிருந்த ஒரு கொலைக்கு உடந்தையானவனின் கசங்கிய மனச்சாயைகளின் இருட்பரப்பு. நண்பனின் ஊரில் அவனோடு கொலைக்கு நிழலாகச் செல்கிறான் காணாமல்போன பொம்முசாமியின் மகன். நண்பன் தன் சித்தியின் கழுத்தில் கத்தியை பதித்த கணத்தில் கைப்பிடியோடு விரல்களும் புகுந்திருந்தது அவள் குரல்வளையைப் பிடித்து. இவன், சாவில் நடுங்கும் அவள் கால்களை அமுக்கி பிடித்துக் கொள்ள அப்பெண்ணின் உயிர் அடங்கிய இறுதித் துடிப்புகளை இவன் கையோடு கொண்டு வந்திருந்தான் தப்பி வந்த கரட்டுப்பட்டிக்கு. தண்ணீப்பானையில் நீர் கோரிக் கழுவக், கழுவ கரங்களில் இருந்த சாவு கரையவில்லை. நினைவிலும், மறதியிலும், குழப்பத்திலும், இரவிலும், பொருட்களிலும் உதிர வாடை வீசியது. இறந்த பெண்ணின் விழிகள் அவன் கால்களை தொடர்ந்து விரட்டுகின்றன. இக்கதை இறந்த பெண்ணின் திறந்த விழிகளுக்குள் சாவுடன் மெல்ல இறங்குகிறது. மலை முகட்டில் இரு விழிகளும் உருண்டு சிதைந்து எதிரொலிப்பதைக் கேட்டான். மலைக் கரட்டின் மேடு பள்ளங்களில் அவன் ஒரே வகையான நடையை நடந்தான். செத்த நடையில் நடப்பதைப் போன்ற நடைதான் அது. தவளைகள் இல்லாத கிணறு ஊருக்கு வந்து சேருகிறான். பத்து வருடத்திற்குப் பின் உருமாறியிருந்த அவனைத் தாத்தாவிற்கு ஜாடை தெரியவில்லை. பின் இக்கதையில் தாத்தாவின் குரலாக தன்னூர் நிலங்களின் கதையும் மலையிடுக்கில் கஞ்சாச் செடி வளர்த்து எல்லோரும் பிழைத்த ஊர்க்கதையும் சொல்லாகவே தொடர்கிறது.
நீர்வறண்ட கரட்டுப்பட்டி அடிவாரத்தில் பாரஸ்ட்டுக்கு சொந்தமான பினாத்தி மரத்தோப்பு இருந்தது. தீக்குச்சி செய்யப் பயன்படும் அந்த மரங்கள் மட்டுமே அந்த நிலப்பகுதியின் ஒரே தாவரையல் ஆதாரம். அதன் பொருட்டு சில துளி மழைத் தூத்தல் அதில் முந்திரித் தோப்பு ஆனது. அதுவும் அழிந்துவிடும் நிலையில் இப்போது. இயற்கை உலர்ந்த பாறைகளின் மேல் ஆடுகள் மட்டுமே ஜீவனோபாயம். மனித நடமாட்டம் இல்லாத ஊரில் இவன் அந்தக் கொலையின் சாயைகள் அவனை வெறுமையின் ஆழத்தில் புதைத்தது. இவனிடம்தான் கிழவன் முதன் முதலில் செல்போனைப் பார்த்தான். நண்பன் இவனுக்கு போனில் பேசினான். அவனைத் தேடி வருவதாகச் சொல்லி ஊருக்கு வழி கேட்டான். மறுநாள் விடிந்த போது நான்கைந்து போலீஸும் இரு இளைஞனும் பாறையிலிருந்து வருவதைப் பார்த்தான் சுற்றி மேயும் ஆடுகளுக்கிடையே. 

வடமெக்ஸிகோவின் வறண்ட விளையாத எரியும் சமவெளியின் மேல் காமேடரஸ் மலைகள் டோரிக்கோ சகோதரர்களைப் போன்ற குற்றவாளிகளைத் தன் பாறைப் புடவுகளிலிருந்து பெற்றெடுத்தது. காலத்தில் எட்டி வளர்ந்த வறண்ட மலைகளின் தியானத்திலிருந்தே இந்தக் குற்றவாளியும் கரட்டிலிருந்து ஓடிப்போய் ஆந்திராவில் முறுக்கு விற்பவனாக முதலாளியிடம் அடிவாங்கி சூட்டுக்கோல் புண்களால் சீழ் வைத்துக் குதறிய ராத்திரிகளோடு அங்கிருந்தும் திருட்டு ரயிலேறி பெருநகருக்கு ஓடிப்போகிறான். இருண்ட தார்விரிப்பின் ஓரங்களில் அடையாளந் தெரியாத நபராகி திறந்த ரணமாய் எதிர்ப்பட்ட நண்பன் குமாரோடு டிஸ்வாஷராக ஹோட்டல் பெஞ்சுகளுக்கடியில் அழுக்குத் துணியில் கந்தலாய் அடிப்பட்ட வாழ்விலிருந்து கிழித்துக் கொண்டு வெளியேறி தன் நண்பனின் கொலைக்கு உடந்தையாக அவனுக்கு துரோகமளித்த மூளியலங்காரியான கொடுமைக்காரச் சித்தியைக் கொல்வதற்கு இவனும் அவனும் கொலையைப்பற்றி ராத்திரியெல்லாம் உரையாடிய சமையலறையின் இருட்டில் ஸ்டீல் கத்தி பளபளத்தது. உடைந்த சமையலறைக் கண்ணாடியிடம் இருவரும் விடைபெற்று வெளியேறிப்போகிறார்கள். 

இத்தொகுப்பில் 361 டிகிரியில் வந்த ‘அறைக்குள் புகுந்த தனிமை’ கதையில் பைக்கில் வந்தவனுக்கும் இவளுக்குமான உரையாடலும், தோழிக்கும் இவளுக்குமான உரையாடலும், விடுதி, பீச், காந்தி சிலை, பீட்சா கார்னர் உரையாடல்கள் binary சொல்லல் முறையில் கருத்துருவாகவே நிகழ்ந்துள்ளது. அவள் வீடு சென்ற பின்னும் முன்முடிவான சம்பவங்களும் உரையாடல்களும் அக்கதையின் பிளக்கும் நிகழ்காலத் தனிமைகளை தன்னிலை உரையாடலின் மூலம் தர்க்கத்தை உடைத்து கதையை விடுவிக்க முடியவில்லை”.

-நன்றி
கல்குதிரை (பனிக்காலஇதழ்)
 

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

எனது சிறுகதைகள் குறித்து கவிஞர் ஏகாதசி



வயிற்றுப் பாட்டிற்காய் எங்கள் ஊர்க்காரர்களோடு சேர்ந்து என்
அம்மா கதிரறுக்க ஊர் ஊராய்ப் போய்த் திரிந்த என் பால்ய நாட்களின்
இரவுத் தூக்கமெல்லாம் என் அமத்தாவின் கயிற்றுக் கட்டில் கீழ்தான்.
என்னோடு சேர்ந்து என் கடைசி சின்னம்மா பரமேஸ்வரியும் என்
அமத்தாவின் மேல் படர்ந்து கிடக்கும் கறுப்புத் தேமல்போல்
வேம்பின் நிழல். அந்த கவிழ்ந்த ‘ப’ வடிவ கூரை வீட்டில் திண்ணை
யிலும் வீட்டிற்குள்ளுமாக என் மற்ற இரண்டு சின்னம்மாக்களும்
நான்கு மாமன்களும் படுத்திருப்பார்கள். சியான் நர்சரி காவலுக்கு
போய்விட்டிருப்பார். அம்மாவை பிரிந்திருக்கும் நான் ஏங்கிப்
போய்விடக் கூடாதென்பதற்காக என்னை கையோடே வைத்திருப்
பாள் அமத்தா. இவள் பெருங்கொண்டை கதைக்காரி.
அந்தக் காலக்கட்டத்து கிராமங்களில் நாய்களுக்கு பெரும்பாலும்
‘மணி’ என்றே பெயர் வைத்திருப்பார்கள். அப்படி ஒரு மணி எங்கள்
வீட்டிலும் இருந்தது. எங்கெங்கோ சுற்றிவிட்டு வந்தாலும் சாமத்தில்
அது என் கால்மாட்டில்தான் படுத்திருக்கும். மணிக்கு கதை பிடிக்காது
போலும். அமத்தா கதை ஆரம்பிக்கும் பொழுதும் முடிக்கும்
பொழுதும் என்னருகில் இருந்ததில்லை. “கதை கேக்காத நாய்
செருப்பக் கொண்டி அடி” என்பாள். கதை சொல்லிக் கொண்டிருக்
கும் பொழுது கட்டிலின் கீழிருந்து நான் ‘உம்’ கொடுத்துக்
கொண்டிருப்பேன். ‘உம்’ நின்றுவிட்டால் ‘சாமி?’ என்பாள்.
“கேட்டுக்குத்தான் இருக்கேன். ஒம்பாட்டுல சொல்லிகிட்டே இரு”
என்பேன். மீண்டும் சொல்லத் துவங்குவாள். நான் தூங்கிப் போய்
விட்ட பிறகும்கூட அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கதை
சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்பதும் நான் தூங்கிய பின்னும்கூட
அரை மணி நேரத்திற்கும் மேலாக ‘உம்’ கொடுத்துக் கொண்டிருந்த
அதிசய சிறுவனாகவும் இருந்திருக்கிறேன் என்பதும் வேடிக்கையான
விசயம்தான். அதனால்தான் விட்ட இடத்திலிருந்து துவங்கித்
துவங்கி ஒவ்வொரு கதையையும் பல வருசங்களாகக் கேட்டுக்
கரைந்திருக்கிறேன்.

கதை சொல்ல ஆரம்பித்த சில நொடிகளில் சின்னம்மா தூங்கி
விடும். இறுதியில் எல்லா கதைகளையும் கேட்டவனாக நான்
இருந்தேன். என் சுயபுராணத்தில் தூங்கிப் போன என் சின்னம்மா
விழித்திருந்து கதை கேட்டிருந்தால் சந்திராவைப் போன்று எழுத்தாள
ராக இருக்கும்.தலித் இலக்கியம் பேசுகிற கதை,கவிதை எழுதுகிற பெண்ணாக சந்திராவின் முகத்தை சில இதழ்களில் பார்த்திருக்கிறேன். சில வாரங்களக்கு முன்பு அவர்களின் ‘அழகம்மா’ நூல் பற்றிப் பேச என்னை அழைத்திருந்த தென் சென்னை த.மு.எ.க.ச
எம்.எம்.டி.எ. கிளை நடத்திய கூட்டத்தில் முதன்முதலாய் நேரில்
பார்த்தேன். சந்திரா என் சின்னம்மா பரமேஸ்வரியின் பிரதிபோல்
காணப்பட்டார். ஆனால், இவருக்குள் இவரது அம்மாவும்
பெரியம்மாளும் கதைகளோடு கூடுவிட்டு கூடு பாய்ந்திருக்கிறார்கள்.
சந்திராவும் அவரது தோழிகளும் கதை கேட்கும் சிறுமிகளாகவும் கதை
சொல்லும் கிழவிகளாகவும் இருந்திருக்கிறார்கள்.

எழுத்தாளர்களாக இருந்து கொண்டு சினிமாவில் குதிக்க
நினைக்கும் மனிதர்களுக்கு நடுவில், சினிமாவில் இருந்துகொண்டு
எழுத்தாளராக மலர்ந்திருக்கும் சந்திராவை எனக்குப் பிடித்திருக்
கிறது. கிளைகள் நகரத்தில் படர்ந்திருப்பினும் வேர்கள் கூடலூர்
மண்ணில்.

11, 12 வயதுகளில் பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தப்பட்
டிருந்த சிறுமிகள் ஒரு நாள் “கல்யாணத்துக்கு வந்துருண்ணே” ன்னு
சொல்லிவிட்டுப் போவார்கள். பின்னொரு நாள் “மூத்தவனுக்கு காது
குத்து வச்சிருக்கேன் மறக்காம வந்துருண்ணே” என்பார்கள்.
படிப்படியாக சிதைந்து கொண்டிருக்கும் அவர்களது வாழ்வும்
உருவமும் என்னைச் சாகடிக்கும்.
“எங்கள் ஊரில் நிறைய பெண் பிள்ளைகளின் படிப்பு தரை
வகுப்புகளோடு முடிந்துவிடும்” எனச் சொல்லும் சந்திராவின்
‘திறக்கப்படாத பள்ளிக்கூடத்தின் கதவுகள்’ கதையில் பெண்களின்
ஜீவன் கண்ணெதிரே மாண்டு போவதைப் பார்க்க முடிகிறது.
காலங்காலமாய் கல்வி மறுக்கப்பட்டு வருவதால் கேள்விகளைப்
பெற முடியாத பெண்கள் ஆண் சமூகம் என்கிற பாம்புக் கூட்டத்திற்
குள் வாழ்ந்து மடிகிற அவலம் இந்தக் கதையின் குறுக்கு வெட்டாய்க்
கிடக்கிறது.

“சீக்கிரம் சாப்பிடும்மா இவன் உன் பங்கை பிடுங்கிடுவான்”
என்று அண்ணன் என் பங்கு இருக்கும் கையைப் பிடித்துக்
கொள்வான். “சின்னப் பையன் அவனுக்கு ஆசையா இருக்கும்ல,
இனிமே நான் சாப்பிட்டு என்ன ஆகப்போகுது” என்று தன் பங்கில்
பாதியை அம்மா கொடுத்துவிடும். எனக்கு விபரம் தெரியத் தெரிய
என் பங்கைக் கடைசியாய்ச் சாப்பிட்டேன் என்று குழந்தைகள்
நிறைந்த வீட்டைப் பற்றியும் அவர்களின் அன்பு பரிமாற்றம் பற்றியும்
பேசி மனதை நெகிழ்வுறச் செய்கிறது “பூனைகள் இல்லாத வீடு”.
பெற்ற பிள்ளைகளையும் வளர்க்கும் பிராணிகளையும் சமமாய்ப்
பாவித்து பாசம் காட்டுகிறது குடும்பம். வீட்டைச் சுற்றிக் கிடக்கிற
இலைகளின் வாசனையும் மலர்களின் வாசனையும் வீட்டோர்களின்
குணமெனக் காட்டுகிறது. ஏழ்மையிலும் பிரியத்தால் உயர்ந்து நிற்கிற
சுத்தமான குடும்பம், காலச்சூழல் காரணமாக ஒரு நிலைக்
கண்ணாடியைப் போல் தன் பாதரசத்தைத் தோய்த்து நிற்கிறது. அந்த வீட்டில் வாழ்ந்த அத்தனை பேரும் வீட்டை விட்டுப் பிரிந்துவிட்டார்கள். மனிதர்கள் ஒவ்வொருவராக வீட்டை விட்டுச் செல்ல செல்ல பிரிவுத் துயராலும் பசி பட்டினியாலும் பூனைகளும்
செத்துப் போகின்றன. கூட்டமாக இருந்த வீட்டை தனிமையும் துயர
வெப்பமும் ரெண்டாய்ப் பிளந்து போட்ட சோகத்தைப் பதிவு
செய்துள்ளது இந்தக் கதை.

ஊரே பயந்து கிடக்கிறது ஒரு பேய்க்கு. அந்தப் பேய் ஊர்
நினைப்பது போன்றில்லாமல் ஒரு சிறுமியிடம் அன்பாகப் பேசி
முத்தம் கொடுக்க, அந்த சிறுமிக்கு பயம் போய் பேய் மேல் பரிதாபம்
ஏற்படுகிறது. அது ‘கிழவி நாச்சி’ கதை. பிஞ்சுகளின் வேர்களில்
நம்பிக்கை நீரை ஊற்றிச் செல்கிறது. பயம் என்கிற சொல்லை
உடைக்கிற ஒரு ஆயுதமாக இந்தக் கதையைப் பார்க்கிறேன்.

ஜாதி, மதம் மீறி காதலித்து திருப்பூருக்கு ஓடிவந்து தாலி கட்டிக்
கொள்கிறார்கள் நிகிலா-செல்வம் ஜோடி. வேலை நிமித்தமாகச்
சென்னை சென்று வருவதாக கூறிச் செல்கிற செல்வம் பல
மாதங்களாக வீடு திரும்பாமலும் தகவலின்றியும் போக, வயிற்றுப்
பிள்ளையோடு செல்வத்தைத் தேடி சென்னையில் அல்லாடுகிறாள் நிகிலா.
மாமிச வெறி பிடித்த மனித மிருகங்களின் கண்களிலிருந்து தப்பித்துத்
தப்பித்து பிரசவ வலியோடு துடிக்கும் நிகழ்வின் துக்கம் என்
நெஞ்சில் பாராங்கல்லைத் தூக்கிப் போடுகிறது. இது ‘நிகிலா’
என்கிற கதை. இந்தக் கதையைப் படித்த பின்பு நகரத்து
சாலைகளிலும் தெருக்களிலும் துணிப்பைகளோடு பிச்சையெடுத்துக்
கொண்டு அலையும் ஒவ்வொரு பெண்களுக்குப் பின்னும் ரணம்
மிகுந்த கதை ஒன்று இருப்பதாகவும் அவர்கள் அதை ஆற்ற
முடியாமல் தவிப்பதாகவும் படுகிறதெனக்கு.

மருதாணிக்கும் ஐயப்பனுக்கும் சண்டை வந்து அவளை சைக்கி
ளின் பின் சீட்டிலும் குழந்தையை முன்னால் இருக்கும் கேரியர்
கூடையிலும் வைத்துக்கொண்டு ஆற்றுப் பாலத்தின் வழியாகச்
செல்லும் போதெல்லாம், குழந்தை, மரம், செடி, கொடிகளை
வேடிக்கை பார்த்தபடி ஆனந்தத்தில் கூத்தாடிக்கொண்டு போகும்
என்று ‘மருதாணி’ கதையில் வரும் காட்சி என் மனத்திரையில் எதை
எதையோ எழுதிச் செல்கிறது. அதன் உள்ளீடு வெளிகளை எரித்தபடி
என்னை உக்கிப் போகச் செய்கிறது.

திரைப்படத் துறையில் அனுபவம் பெற்று இவர் எழுதியிருக்கும்
சில கதைகளில் ‘கட் செய்த பின்னும் காமிரா ஓடிக் கொண்டிருந்தது’
என்னும் கதை ‘ரிச் கேர்ள்ஸ்’ என்றாலே உதாசீனப்படுத்தி ஏலனம்
பேசும் தவறான கண்ணோட்டத்தை மிக வன்மையாகக் கண்டிக்
கிறது. வயிற்றுப் பசிக்காக ஆடைகளை அவிழ்க்கும் என் பெண்களின்
அரை நிர்வாணத்தை நினைக்கும்பொழுது என் கண்கள் கண்ணீரை
உதிர்க்க தெம்பின்றி உடைந்து விழுகின்றன.

இறுதியாக ‘அழகம்மா’ என்கிற கதையைச் சொல்லியாக
வேண்டும். பெருங்குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப் பிறந்த
அழகம்மா செல்லமாய் வளர்க்கப்படுகிற பேரழகி. 
தேவதை. அவள் அக்காமார்களுக்கும் அண்ணன்மார்களுக்கும்
பிரியமாகச் சமைத்துப் போடுவதைத் தவிர வேறு வேலைக்கோ ஏன்
சொந்த தோட்டத்திற்கோகூட செல்ல அனுமதிக்கப்படவில்லை.
குழந்தையைப் போன்றே அவளை கொஞ்சி மகிழ்ந்தார்கள். திடீரென
எல்லோரும் முழித்துக் கொண்டிருக்க ஒரு நாள் பெரிய பெண்ணாக
மலர்ந்தாள் அழகம்மா. அடுத்த சில வருசங்களில் அழகம்மாவிற்கும்
அதே தெருவைச் சேர்ந்த குறும்பனுக்கும் திருமணம் நடந்தேறு
கிறது. அழகம்மா வலது கால் வைத்து நுழைந்த நிமிடத்திலிருந்தே
மாமியாரின் விசம் கலந்த வார்த்தை மெல்லிய மனதைக் காயப்படுத்
துகிறது. எதற்கெடுத்தாலும் “வெடுக் வெடுக்” என்று பேசுவதும்,
சாணி சகதியை பொழுதெல்லாம் அள்ளவிட்டு நொறுக்குவதுமாய்த்
தொடர, இதில் குறும்பனும் சேர்ந்துகொண்டு அவளை அடித்து
உதைத்து... என அந்தக் கதையை நான் படித்துக்கொண்டு
செல்கையில் நெஞ்சதிர்கிற ஓர் இடம்வந்து நான் மீண்டும் வாசிக்கத்
தொடர்கிற மனதறுந்தவனாய் புத்தகத்தை மூடி வைத்து அதன்
அட்டை மீது என் பார்வையை தவழ விட, நூல் வாங்கிய ஒருவார
காலமாக ஒன்றும் செய்யாத அந்த அட்டை ஓவியம் துக்கம் சுமந்த
அந்த பெண்ணின் முகம். அதுவும் அழகம்மாவின் முகம்.
அட்டையை விட்டு மேலெழும்பத் துடிப்பதைக் கண்டு குலை
நடுங்கிப் போனேன். அதிலிருந்து மீண்டு அந்தக் கதையைத் தொடர
சில மணி நேரம் ஆனது. அடுத்த இரண்டு நாட்களாக என் மேஜையின்
முன் அட்டை காட்டிக் கிடக்கும் அந்த நூலிலிருந்து அழகம்மா
வெளியேறவே துடித்தாள். எனக்குப் பயமாகவும் போனதால் அதை
எடுத்து மறைத்து வைத்துவிட்டேன்.யோசித்துப் பார்க்கிறேன் என் பயத்திற்கான காரணத்தை. ஒருவேளை அழகம்மாவின் கொடூர கணவன் என்கிற குறும்பன் நான்
தானோ என்று, உண்மைதான் என்பது போலவே என் உள்மனம்
படக்படக்கென அடித்துக் கொண்டது.

இப்படியாக சந்திராவின் எந்தக் கதையைப் பற்றியும் எழுதாமல்
என்னால் இடம் பெயர முடியவில்லை. இருப்பினும் இட ஒதுக்கீடு
அளவு காரணமாக சிலவற்றை மட்டும் குறிப்பிட்டு உள்ளேன்.
சந்திராவின் கதைகள் ஆச்சரியப்படுத்துவதைத் தாண்டி கதைகளின்
வரிகளே கூட சாகசத்தையும் சூதாட்டத்தையும் சாமர்த்தியமாய்
நிகழ்த்தி விடுகின்றன. சந்திராவின் எல்லா கதைகளின் முடிவும்
மனதை கனக்கச் செய்கின்றனவாய் இருக்கின்றன. இது படைப்பாளி
யின் வெற்றிதான் எனினும் கதைகளின் வெவ்வேறு முகங்களையும்
சந்திராவின் எழுத்து கொண்டுவர வேண்டும் என்பது என் தனிப்பட்ட
கருத்து. “தோழர்கள் கடத்தல்காரர்களான கதை” என்னும் கதை
அவரின் சொந்த அனுபவங்களிலிருந்து சரியென்று தோன்றினாலும்
ஒரு பெரிய இயக்கத்தின்பால் போராட்டக் குழுவின்பால் எறிகிற சிறு
கல்லாக இருக்கிறது. பரவாயில்லை, அதை விமர்சனமாகக்கூட
எடுத்துக் கொள்ளலாம்.

இவர் வாழ்க்கையை ஓரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்
கொண்டு எழுதியதாய்ப் படவில்லை. கதவைப் பற்றி திண்ணையில்
உட்கார்ந்தும் தந்தையின் மடியில் உட்கார்ந்தபடி மீசையைப் பற்றியும்
அம்மாவின் அடிவயிற்றுக் கதகதப்பில் முகம் புதைத்து அவளின்
பசியையும் தோழிகளின் தீட்டுத் துணியை கையில் ஏந்தியபடி
அவர்களின் அவஸ்தையையும் பால்ய நண்பர்களை வாசம் மாறாமல்
நெஞ்சில் சுமந்துகொண்டும் வனம் தந்த கறுப்பு வெய்யிலை
முதுகில் சுமந்துகொண்டும் நகரத்தின் கூர்மையான கத்திகளை
உடலில் செலுத்திக் கொண்டும் வாழ்வை இடைவெளியின்றி எழுதி
யிருக்கிறார். மருத்துவச்சி பிரசவம் பார்க்கிற கலை நுட்பத்தோடு.
‘பூனைகள் இல்லாத வீடு’ முதல் தொகுப்பில், ‘புளியம் பூ’,
‘திறக்கப்படாத பள்ளிக்கூடத்தின் கதவுகள்’, ‘பூனைகள் இல்லாத
வீடு’, ‘கிழவி நாச்சி’, ‘நிகிலா’, ‘ராஜா ராணி ஜோக்கர்’ போன்ற
கதைகளும், சந்திராவின் இரண்டாவது தொகுப்பான ‘காட்டின்
பெருங்கனவு’ நூலில் ‘காட்டின் பெருங்கனவு’, ‘மருதாணி’,
‘ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை’ உள்ளிட்ட கதைகளும்,
கடைசியாய் வந்த ‘அழகம்மா’ தொகுப்பில் ‘அழகேசனின் பாடல்’,
‘கட் சொன்ன பின்பும் காமிரா ஓடிக்கொண்டிருந்தது’, ‘அழகம்மா’,
‘வெகு நாட்களுக்குப் பின்னான மழை’ போன்ற கதைகளும் தமிழ்
சிறுகதை உலகில் மிகமிக முக்கியமான சிறுகதைகளாகப் பார்க்கி
றேன். முதல் தொகுதியை உயிர்மையும் அதன்பின் வந்த இரண்டு
தொகுதிகளை உயிர் எழுத்தும் வெளியிட்டிருக்கிறார்கள். நீங்கிச்
செல்லும் பேரன்பு என்னும் கவிதை நூலும் சந்திராவுடையது.
என் அக்காக்களையும் தங்கைகளையும் மரங்களைப் போன்று
வெட்டிக் கூறு போட்டு ரத்த ருசி பார்த்துக் கொண்டிருக்கும்
ஆணாதிக்க வெறியர்களின் பட்டியல் சந்திராவின் கதைகளில்
குறிக்கப்பட்டிருக்கிறது. சாதி மனித மனங்களை எப்படி ஒரு தாளைப்
போல் கிழித்துப் போட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் பதிவு
செய்யப்பட்டிருக்கிறது.

கதைகள் முழுக்க வெக்கை மிகுந்த வாழ்வின் நசநசப்பையும்
குரூரத்தையும் மிக மிக அருகிருந்தும் அனுபவித்தும் எழுதியிருக்
கிறார் சந்திரா. முல்லை பெரியாறு நதியிலிருந்து இரு கை நிறைய
தண்ணீரை அள்ளிக்கொண்டு ஒரு சொட்டுக் கூட சிந்தாமல் ஐநூறு
கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்து சென்னையில் சேர்த்தது போல்
இருக்கிறது இவரின் கதைகள்.

சிறுகதைத் தொகுதிகள்
- பூனைகள் இல்லாத வீடு, உயிர்மை, டிச. 2007
- காற்றின் பெருங்கனவு, உயிர் எழுத்து, டிச. 2009
- அழகம்மா

நன்றி:மாற்றுவெளி ஆய்விதழ்

- 2012 ஜுன், ”மாற்றுவெளி” சிறுகதைச் சிறப்பிதழில் எனது சிறுகதைகள் குறித்து கவிஞர் ஏகாதசி எழுதிய ஆய்வுக்கட்டுரை.

வியாழன், 19 மே, 2011

தணிக்கை மீறும் உணர்வுகளின் புனைவு வெளி _ அசதா


’காட்டின் பெருங்கனவு’ தொகுப்பு,அதன் கதைகளில் சந்திரா படைத்துதரும் பெண்களின் பருண்மையுலகும் மரபான சமரசங்கள் கொண்டு கட்டப்படாத அவர்களின் அகவுலகும் சமகால தமிழ்ச்சிறுகதை வெளியில் இதுவரை காணாத சில திறப்புகளைக் கொண்டு விளங்குவதனை முன்னிட்டு ஒரு முக்கியத் தொகுப்பாக அமைகிறது. புனைவின் பொதுவளியில் பெண் கதை மொழிதல் என்பதன் வழமைகளும் மறுப்புகளும் மீறப்படுதலில் தொடங்கி,பெண்ணிய கருத்தாக்கங்களை மீட்டுருவாக்கம் செய்வது வரையிலான எழுத்துக்களை நாம் தொடர்ந்து கண்டு வரும்போதும் பெண் புனைகதையாளர்களது எண்ணிக்கை சொற்பத்திலும் சொற்பமாக நிற்கையில் மிக சுருங்கியது எனச் சொல்லத்தக்கதான என் வாசிப்பு வெளி அம்பை, லதா ராமகிருஷ்ணன்(அனாமிகா),உமா மகேஸ்வரி,சு.தமிழ்ச்செல்வி,சந்திரா,உமா ஷக்தி என்பதான வெகு சில பெயர்களையே உள்ளடக்கியதாய் இருக்கிறது.பரந்த வாசிப்பனுபவம் உடைய வொருவரும் இப்பட்டியலோடு ஒன்றோ அல்லது இரண்டோ பெயர்களை இணைக்குமளவிலேயே நம் சூழலின் யதார்த்தம் அமைந்திருக்கிறது என்பது என் துணிபு. இப்பின்னணியைக் கருத்தில் கொள்கையில் சந்திராவின் ‘காட்டின் பெருங்கனவு’ தொகுப்பினை ஒரு முக்கிய வரவாக நாம் காணவேண்டியுள்ளதன் அவசியத்துக்கு இன்னும் வலு கூடுகிறது.
தலைப்புக் கதையான ’காட்டின் பெருங்கனவு’ குறிஞ்சி நிலக்காட்சிகளை பின்புலமாகக் கொண்டமைந்து,பதின்ம வயது பெண் மனதின் அசலான உணர்வுகளை மரபார்ந்த தணிக்கைகளுக்கு தொலைவே வைத்து புனைவாக்கிய வகையில் தொகுப்பில் சிறந்த கதையாக நிற்கிறது. கேரளத்தை ஒட்டிய மேற்கு மலைத்தொடரின் காட்சிகளும், நாம் அதிகம் அறிந்திறாத மிளகு பிடுங்குதல் போன்ற வாழ்வாதாரச் செயல்களும் ஊடுபாவிய ஒரு நிலவெளியில் தூரிகையால் தீட்டுவது போல கதை வளர்க்கப்படுகிறது. கதைப் பெண்ணின் தன்னிலை வழியாக விவரிக்கப்படும் காதலின் முகிழ்ப்பும்,தீவிரமும்,தவிப்பும்,பிரிவும் என கனவுத்தன்மை விலகாத காட்சிகள் வழி பெண்மையின் காதல் அபோதமானது, தத்துவம் மற்றும் தர்க்கங்களின் நிழல் கவியாத தூரத்தில் அப்படியே படைத்து தரப்படும் பாங்கில் தீர்க்கமும் வலுவானதொரு பிரதியாக இக்கதை இருக்கிறது. பிரிவின் தருணத்தில் அவளின் காதலை உணர்ந்துவிடும் பெரியம்மா கூட அதை வெளிக்காட்டிக்கொள்ளாமிலிருப்பது கதையின் போக்கில் உறுத்தலின்றி பதிவாகையில் காதல் குறித்த அசலானதொரு பெண்ணிய கருத்தாடல் இயங்கும் பிரதியாக இக்கதை முழுமை பெறுகிறது.
’காட்டின் பெருங்கனவு’ கதையின் பெண்ணைப் போன்றவளே ‘மருதாணி’. ஆனால் மருதாணியின் உள வேட்கையும் காதல் அபோதமும் சமூகத்தின் பின்னணியில் ’மருதாணி’ கூடுதலானதொரு அர்த்த பரிமாணத்தை பெறுகிறது. இவ்வேட்கையைப் பின்பற்றிச் செல்வதன் எல்லா எதிர்மறை விளைவுகளையும் அறிந்தவளான மருதாணி அவை பற்றி கவலை எதுவும் கொண்டவளாகத் தெரிவதில்லை. ‘காட்டின் பெருங்கனவு’ கதையின் பெரியம்மாவைப் போல மருதாணியின் அண்டையில் வசிக்கும் பெண்களும் அவளது அந்தரங்க காதலை அறிந்தும் அதன் எதிர்மறை விளைவுகள் பற்றி அறிவுரை சொல்வதோ அல்லது அவளை கேடானவளாக கருதி விலக்குவோ இல்லை என்பது இங்கு முக்கியமாகக் காணத்தக்கது. எந்த வகையானாலும் பெண்ணின் காதலென்பது ஒழுக்கக் கேடாகவும் மீறலாகவும் சமூக கட்டுமானம் இக்கதையை வேறொரு தளத்துக்கு நகர்த்துகிறது. திருமண உறவை தாண்டிய தன் காதலை-இக்காதல் உண்டாக்கி வளர்ந்த சம்பவப் பின்னணி மருதாணியின் தரப்பை நியாயம் செய்பவையாக அமைந்திருக்கின்றன-அடைய முனைவதான மருதாணியின் செயல்களில் துளியும் அச்சமோ குற்றவுணர்வோ இல்லையென்பதோடு தன் காதல் உணர்வின் உந்துதலைப் பின்பற்றி செல்லும் மருதாணி அதற்கான வசைகலையும் அடிகளையும் தாய்வீட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் அவமானத்தையும்கூட தன் அந்தரங்க காதலோடு சேர்ந்து செயல்களாக கருதி இயல்புகாக்கிறாள் என்பது இங்கு குறிப்பிடத் தகுந்தது.சங்கப் பாடல்கள் தொடங்கி ஆண்டாள் வழியாக மேலை நவீன இலக்கியங்கள் வரை நாம் கண்டு வந்திருக்கும் காதல் மேலிட்ட பெண்களை ஒரு கணம் பழம் வார்ப்புகளாக தோன்றச் செய்வதான வலுவுடனும் புத்தாக்கத்துடனும் இப்பெண்கள் படைக்கப்பட்டிருப்பதாக ஒருவர் கூறவியலும்.
பெண்ணின் அகமன வாதைகளைப் பேசும் கதைகளாக ‘பன்னீர் மரத்தெரு’, ‘ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை’ ஆகிய கதைகள் அமைந்திருக்கின்றன. ஒரு கதை சொல்லியாக தனது இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் தொலைக்காட்சி பெட்டியினால் மன சமநிலை குலையும் அகிலாவைப் பற்றி ‘பன்னீர் மரத்தெரு’ மனதோடு ஒன்றிய இயல்பான விசயங்களை துறந்து நவீன வாழ்வின் அர்த்தமற்ற ஜோடனைகளுக்கு தம்மை ஒப்புக் கொடுக்க முடியாதவர்களது- அதுவும் பன்னீர் பூக்களையும்,குழந்தைக் கதைகளையும் நேசிக்கும் தனிமை பீடித்த ஒரு பெண்ணின்- அகத்துயரம் பற்றியது. பெண்ணின் வாதைகள் கட்டமைக்கப்படும்விதம் ‘ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை’ கதையில் சொல்லப்படுகிறது. கணவனது சுயநலத்துக்காக கவிதா திட்டமிட்டே பைத்தியமாக சித்தரிக்கப்படுகையில் உறவும்,சமூகமும்,நமது மருத்துவ முறைகளும் உதவி செய்ய அவள் நிஜமான பைத்திய நிலையைத் தொடர்கிறாள். சிறுநகரத்து மனநல மருத்துமனையில் தன்னைவிடவும் மோசமான நிலையில் காணப்படும் பெண்களை கண்டு பரிதாபப்படுபவளாக இருக்கும் கவிதா அவள் கணவனுக்கு வெறும் போக வஸ்து. தனது கள்ள உறவை கண்டு பிடித்துவிடும் அவளை பைத்திய பட்டமும் கட்டி பழி தீர்க்கிறான் கணவன். மாமியாரோ அவள் குழந்தையை அவளிடமிருந்தும் பறிக்கத் தீர்மானம் கொண்டவளாகயிருக்கிறாள். கவிதாவின் சித்தி கூட இரக்கப்படுவதைத்தாண்டி அவளை புரிந்து கொள்ள முயல்வதில்லை. இவ்வாறு எல்லாராலும் கைவிடப்பட்ட தனிமையின் பெருதுயர் சூழ அவள் நிஜமாகவே பைத்தியமாகிறாள். பெண்ணானவள் தனிமை, துயர் ஆகிய எந்தரக்கற்கள் கழுத்தில் கட்டப்பட்டு மாயும் யதார்த்த உலகின் ஒரு சிறு கீற்றாக இக்கதை பதிவு பெறுகிறது.
‘சூது நகரம்’, ’கழிவரை காதல் பிரதி’ கதைகள் நகர்சார்ந்த வாழ்வின் பின்னணியில் விளிம்பு மக்களை பேசும் வகையில் ஒன்றாக வைத்து பார்க்க வேண்டிய கதைகள். இரு கதைகளுமே ஒருவித இணைக்கோட்டு தன்மையான விவரிப்பனை உத்தியாக கொண்டிருப்பவை. நகரத்தின் இரக்கமற்ற முகமும் சூதுவாதற்று எவரையும் நம்பும் எளியவர்களை அது தன் சூழலுக்குள் சிக்க வைத்து கபளீகரம் செய்து விடுதலும் ’சூது நகரம்’ கதை. நகரத்தின் பெரு விரிவில் தமது முகங்களை மறைத்து ஆடும் கண்ணாமூச்சியின் முடிவில் நிஜம் தெரிய வரும்போது ஏற்படும் ஏமாற்றம் ‘கழிவரை காதல் பிரதி’ இரு கதைகளுமே ஒருவித நம்பிக்கை வறண்ட எதிர்மறையான தொனியில் புனையப்பட்டிருக்கின்றன என்ற போதும் நகர் சார்ந்த புறச்சித்தரிப்புகளும் கதை மாந்தர்களது சித்தரிப்பும் கதைகளை ரசிப்புக்கு உகந்ததாக்குகின்றன. ‘தரை தேடிப் பறத்தல்’ சுதந்திரம் என்னும் கருத்துருவாக்கத்தை வழமைக்கு மாறான பின்னோக்கிய உருவகமாக பறந்து கொண்டிருக்கும் பறவை தரையைக் கண்டுவிடுவதை ஏக்கமாக கொண்டிருப்பதாக புனைந்திருப்பது புதுமையானது. கருஞ்சிவப்பு,வெள்ளை,மஞ்சள்,நீல பறவைகள் வழியாக இக்கதை விரிவு பெறுகிறது.’வாழ்க்கை எதற்குள்ளும் ஒளிந்து கொள்வதல்ல. அது பறப்பது. சுயமாய் இருப்பது. இரை தேடப் பழகு. கூடு கட்டப் பழகு. பறவையாய் வாழப் பழகு’ நீலப் பறவை வெள்ளைப் பறவைக்கு அறிவுறுத்துகிறது. குறியீடானாலும் கதையின் பெண்ணிய பார்வை தீர்க்கமாக புலப்படும் வகையிலமைந்தகதை இது. ‘நதியில் மிதக்கும் கானல்’ கதை பெண்ணின் காதல் துயர் பற்றியதாக இருந்தபோதும் ‘காட்டின் பெருங்கனவு’ கதையினை போலின்றி கழிவிரக்கமும் புலம்பலுமான சோகமுமாக நிறைவடைகிறது. அங்கதம் தேர்ந்த புனைக் கதை எழுத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று.’பீத்தோவனும் கலைந்த காதலும்’ அங்கதத்தின் பாற்பட்ட எளிமையான, அடங்கிய அங்கதம் அமைந்த கதை.
பெண்ணிய நோக்கிலான புனைவெழுத்தினை சமரசமற்ற பாத்திர உருவாக்கங்களினால் புதிய தளங்களை நோக்கி நகர்த்தும் சந்திரா தீர்க்கமான பின்னல்களுடன் கதையை கட்டமைப்பதிலும் சரளமாக அதை சொல்லிப் போவதிலும் தனக்கிருக்கும் தேர்ச்சியை இத்தொகுப்பின் மூலமாக நிரூபித்திருக்கிறார். கதை மொழிக்கு கூர்மையளிப்பது தனது கதை புலன்களை வாழ்வு குறித்த பலவித பார்வைகளுக்குமாக விஸ்தரித்துக் கொள்வது போன்றவற்றால் இன்னும் சிறப்பான கதைகளை அவர் எழுத முடியும். அந்த நம்பிக்கையினை இந்த தொகுப்பு குறைவில்லாது வழங்குவதாகவே இருக்கிறது.

’காட்டின் பெருங்கனவு’- சிறுகதைகள்(2009).ஆசிரியர்:சந்திரா,வெளியீடு:உயிர் எழுத்து பதிப்பகம்.9,முதல் தளம்,தீபம் வணிக வளாகம்,கரு மண்டபம்,திருச்சி 620 001.

நன்றி:கல்குதிரை
வேனிற் காலங்களின் இதழ்.

சனி, 19 ஜூன், 2010

விலக எத்தனிக்கும் அன்பும்.. கையறு நிலைக்கு முந்தைய கணங்களும்... சந்திராவின் "காட்டின் பெருங்கனவு" சிறுகதை தொகுப்பை முன்வைத்து- விஷ்ணுபுரம் சரவணன்



(மே 29 ந்தேதி பெரம்பலூரில் விடுதலை குயில்கள் கலை இலக்கிய அமைப்பு துவக்கவிழாவில் பேசியதின் எழுத்து வடிவம்..)

தொடக்கம் மையப்பகுதி பகுதி இறுதி அல்லது உச்சப்பகுதி என தமிழ்ச் சிறுகதைகள் வரையறுத்து வைக்கப்பட்டிருந்த இலக்கணங்களை எல்லாம் உதறிவிட்டு எழுத ஆரம்பித்து பல ஆண்டுகளாயிற்று. மையம் நோக்கி கதை சொல்லி நகர்வதே பிரதானம் என்பதெல்லாம் மறைந்து மையம் என்பது ஒன்றல்ல என்பதான படைப்புகள் வந்தவண்ணமிருக்கின்றன.மாயப்புனைவு எழுத்துக்களின் வழியே பயணித்த சிறுகதைகளில் பெரும்பாலும் இன்றைக்கான அரசியலை தெளிவாக முன்வைக்கமுடியாமல்போய்விடுகிற விபத்து நேர்ந்துவிடுவதால் அனேகர் யதார்த்த வகை சிறுகதையையே தேர்ந்தெடுத்துவிடுகின்றனர். ஆயினும் அது தன்குறிப்பு பதிவு போலவோ அல்லது ஒருவித தட்டைத் தன்மையோடும் இல்லாமல் செய்கின்ற முயற்சியில்தான் அது சிறந்த கதையாக மாறுகிறது.

இச்சூழலில்.. புதிதாக எழுத வருபவர் இரண்டுவிதமான கூறுகளை முக்கியமாக எதிர்க்கொள்கின்றனர். ஒன்று அவர்களுக்கு முந்தைய தலைமுறை எழுதியவற்றின் மிச்சத்தை அல்லது எழுத மறுத்ததை எழுதவேண்டியிருப்பதும். அடுத்து.. எழுத்தாளர்களையும் மீறி மாறிக்கொண்டேயிருக்கும் வடிவம் குறித்த பிரக்ஞையே அவை. இவை இரண்டிற்கும் தொடர்ந்த வாசிப்பும் உரையாடலும் முக்கியமானது.

முந்தைய தலைமுறை தவிர்த்த வாழ்வனுபவங்களை எழுதுவதில் தலித் இலக்கியமும் பெண்ணிய இலக்கியமும் தீவிரமாக முன்னெடுத்துச்செல்கின்றன. எதன் ஒன்றால் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அதனை கொண்டாட்டமாகவும், இயல்பினை ஒட்டியும் எழுதி வருவதை நாம் காணலாம். பெண்ணிய கவிதை தளத்தில் உடல்மொழி எவ்வித பிரதானமான இடத்தில் செயல்பட்டதோ அதேபோல் சிறுகதை மற்றும் நாவல்களில் பெண்ணிய மனவுலகம் சார்ந்த உலகம் முன்வைக்கப்பட்டது. இதுவரை காதல், காமம் போன்றவைகளின் வெளிப்பாடு என்பது பெண்ணிய பார்வையையும் ஆண்களே பெண் குரலாக பதிவு செய்தார்களோ அவை கடந்த பத்தாண்டுகளாக உடைந்து பெண்ணின் மனக்குரலை பெண்களே பதிந்து வருவதில் அவை வேறொரு நிறமாகவும், குரலாகவும் வெளிப்படுவதை நாம் காணமுடிகிறது. மிக இயல்பான அதே சமயம் இடக்கையால் புறந்தள்ளப்பட்ட மெல்லிய உணர்வுகள் பெண்களின் எழுத்து வருகைக்கு பிறகே அது நிகழ்ந்தது.

கவிதை எழுதுபவர்கள் பலர் உரைநடைகளும் எழுதும்போது கவிதைக்கான தன்மையோடு அவை மாற்றம் பெறுவதை தவிர்க்கவியலாது. கவிதையில் வெளிப்படும் படிமம் குறீட்டுத்தன்மை பூடகமான தொனி அனைத்தும் சிறுகதைகளிலும் வெளிப்படுவதுபோல, கவிதைகளில் வெளிப்படுத்தப்படும் மிக நுண்ணிய உணர்வுகளும் கதைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. அவை பல சிறுகதைகளுக்கு பலமாகவும் சிலவற்றில் உணர்வுக்குவியலாக தேங்கி பலவீனமாக மாறிவிடுகிறது.

இந்த சூழலில் வெளிவந்திருக்கும் சந்திராவில் காட்டின் பெருங்கனவு எனும் கவிதைக்கான தலைப்பை போல வந்திருக்கும் சிறுகதை தொகுப்பு முக்கியமான தொகுப்புகளூள் ஒன்றே. இத்தொகுப்பிற்கு உப தலைப்பு இடச்சொன்னால் நான் வைப்பது விலக எத்தனிக்கும் அன்பும், கையறு நிலைக்கு முந்தையை கணங்களும் என்று வைப்பேன். ஆம். அந்தளவு ஒரு சிறுகதை தவிர்த்து மற்றவைகள் அனைத்திலும் விலகஎத்தனைக்கும் அன்பையும், விலகியப்பின் சூழப்போகிற வெறுமையும் கையறு நிலைக்கும் இடைப்பட்ட கணங்களை ஒருவித பரிதவிப்போடே எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. கதையாக்கத்தில் எவ்வித சிக்கலுமற்று நேர்க்கோட்டு நடையில் எழுதியிருப்பது இன்னும் நெருக்கமாக்குகிறது.

சந்திரா இப்படி எழுதுவதற்கான மனநிலை அவர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல அவரது அப்பாவின் மரணம் முக்கியமான காரணமாக இருக்கக்கூடும். இழந்துபோன அப்பாவின் அன்பை மற்ற உறவுகளில் பொருத்திப் பார்த்தோ அல்லது ஏற்கனவே இழந்த அன்புக்கதையாடல்களை மீட்டுறுவாக்கம் செய்யவோ அவருடைய அப்பாவின் மரணம் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.

அவற்றில் முக்கியமான கதையாக பன்னீர் மரத்தெரு கதையைச் சொல்லலாம். குழந்தைகளுக்கான கதை சொல்லலில் பூரணத்துவம் ஆகிற பெண்ணிடமிருந்து குழந்தைகள் தொலைந்துபோகிற நாளிலிருந்து அவள் மனப்பிறழ்வாகிறாள். மனப்பிறழ்வற்ற நாட்களுக்கும் இப்போதைக்குமான இடைவெளிகள் அவளுக்கே தெரிவதுதான் சிக்கலான ஒன்றாக இருக்கிறது. இதே சிக்கலில்தான் ரத்தத்தில் மிதக்கும் படுக்கை அறை கதையில் வரும் பெண்ணும் சிக்கிக்கொள்கிறாள். விபத்து மற்றும் இன்னபிற விடங்களால் மனப்பிறழ்வாகிறவர்களுக்கும் புறக்கணிப்பட்ட அன்பினால் மனப்பிறழ்வாகிறவர்களுக்கான வித்தியாசத்தை மிக நேர்த்தியாக இந்த இரு கதைகளில் பதிவு செய்திருக்கிறார் சந்திரா.

பன்னீர்மரத்தெரு கதையில் வரும் அகிலாவிற்கு தன்னிலிருந்து பறிக்கப்பட்ட அல்லது எது வாழ்நாள் இறுதி வரை போதுமென நினைத்திருந்தமோ அது தொலைந்ததை ஏற்றுக்கொள்ளமுடியாமல் அவள் தனக்குள்ளே சுழன்று சுழன்று பேசிக்கொள்கிறாள். ஒருவேளை சிறார்கள் கேட்க மறுத்ததை கூட அவள் சொல்லிக்கொண்டேயிருந்திருக்கலா ம். அதற்கு இடையூறான எல்லாவற்றின் மீதும் அவள் வன்மம் கொள்கிறாள். அதன் வன்மத்தை மனிதர்கள் மீது பிரயோகிக்க அவள் எந்த சூழலிலும் தயாரில்லை. தன் காதுகளை அடைத்துக்கொள்வதும், டிவி பின்களை யாருமில்லாத நேரத்தில் பிடுங்குவதுமான அவள் மனநிலை இன்னும் யாருக்கோ கதை சொல்லுவதற்கான தயாரிப்போடே இருப்பதற்கான வெளிப்பாடே.

ஏறத்தாழ இதே மனநிலையோடேதான் ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை கதையில் வரும் பறிக்கப்பட்ட அன்பிற்கெதிராகவும் வன்மத்தை பிரயோகிக்காத மனநிலையோடே இருப்பதுபோன்ற சித்திரிப்பு அவர்களின் இழந்த இயல்பு மனவோட்டம் குறித்த பிரக்ஞையோடு இருப்பதுதான்.

நதியில் மிதக்கும் கானல் மற்றும் காட்டின் பெருங்கனவு கதைகளில் இதோ.. இதோ .. கண்ணெதிரே துடிக்கவிட்டு பிரியும் அன்பினை பற்றிய தவிப்பாகவும் வெளிப்பட்டிருக்கிறது. இதிலும் இயல்பாக இருக்கிறாள் ஆனால் இயல்பாக அவள் சிந்திக்கவோ செய்யவோ முடியவில்லை. இந்த மனத்தள்ளாட்டத்தான் கதையில் முக்கிய இழையாக நகர்கிறது.

இந்த தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் இரண்டை ஒன்றாக்கினால் கூட அவை ஒன்றின் தொடர்ச்சிபோலவே காணப்படுவை பன்னீர்மரத்தெரு மற்றது ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை .குழந்தைக்களுக்கான கதை சொல்லி அத்தெரு வீடுகளில் தொலைக்காட்சி ஆக்கிரமித்துவிட தனித்து போனவளின் மனச்சிதைவு திருமணத்தை மறுத்து அவள் ஏற்றுக்கொள்ளும் தனிமை தருகிற கூடுதல் சிதைவு.. இவளின் நீட்சியாக தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து அதன் மூலம் அவள் கணவன் சந்தேகித்து மனச்சிதைவுக்குள்ளாகிற பெண் இருவரும் ஏறத்தாழ ஒருவளே. இருவருக்கும் இயல்புக்கு இயல்பற்றவைக்கு இனம் காணமுடிவதே மனச்சிதைவை விடவான சிக்கலாகிவிடுகிறது. நான் சரியாகிவிடுவேனா என மருத்துவரிடம் கேட்குமளவும் , வீடுதிரும்பிய தன்னுடன் கணவன் வன்புணர்வு செய்வதை வழியற்று ஏற்றுக்கொள்ளும் அல்லது புரிந்துக்கொள்ளுமளவான தெளிவே அவளுக்கு பெருதுயராக மாறிவிடுகிறது.

சந்திராவின் கதைகளின் மிக இயலபாக நிகழ்வது கதை சொல்லப்படும் பகுதியின் நிலவியல் வரையறை. காட்டின் பெருங்கனவில் காட்டின் சூழலும் அங்கே வாழும் மனிதர்களின் வாழ்நிலையில் அதனின் இருப்பும் கதையோட்டத்தில் தனித்து தெரியாது சொல்லப்படுவதைப்போல, நகரமும் நகர்புறம் சார்ந்த மனிதர்களின் மனநிலையை வாழ்பகுதி எந்த அளவு பாதிப்பு நிகழ்த்தும் என்பதற்கு சூதுநகரம் கதை சிறந்த உதாரணமாக சொல்லலாம். கூடுதலாக கழிவறை காதல்பிரதி கதையும் இதில் அடங்கும்.

சந்திராவின் கதைகள் உள்ளோட்டமாக இன்னுமொன்றையும் காணமுடிகிறது. நகரமயமாதலின் அத்தனை கூறுகளும் எளிய வாழ்முறையை மேற்கொள்ளும் மனிதர்களின் எண்ணவோட்டத்தையும், எதிர்கால சூழல் மீதான மிகையற்ற நினைவில் இருப்பவர்களின் கருத்துக்களை புரட்டிப்போடுவதை நகரமயமாதலின் விளைவுகளாக கதைகள் வெளிப்படுகின்றன. பன்னிர்மரத்தெருவிற்கு தொலைக்காட்சி வருவதும், செல்போன் தகவல்கள் தொடக்கமாகி சிதையும் மனநிலை, கட்டணக் கழிவறையில் காசு வசூலிக்கும் வேலைக்கு செல்லும் பெண்ணின் இருப்புச்சூழல் என ஒரு வாழ்முறையிலிருந்து அடுத்த வாழ்முறைக்கு கட்டாயமாக மாற்றப்படுவதன் மீதான அவஸ்தையை நுணுக்கமாக பதிந்து செல்கின்றன கதைகள்.

இழந்த அன்புக்கு பிறகான கையறு நிலையை எல்லா கதைகளும் பேசுகையில் ஒரேயொரு கதை மாத்திரம் விருப்பட்ட ஒன்றினை வேறெந்த சூழல் குறித்து கவலையேதுமற்று வன்முறையாக அந்த அன்பை தனக்கானதாக்கி கொள்ளும் கதையாக மருதாணி. கணவரின் நண்பர் மீது தவிர்க்கவே முடியாமல் ஏற்பட்டுவிட்ட அன்பை , அந்த அன்பு தவிர மற்றவைகளை துச்சமாக எண்ணி , அதன் புற விளைவுகள் பற்றி அச்சமற்று அந்த விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்வது இடாலோ கால்வினா வின் மனைவியின் சாகசம் கதையை ஒத்தது. கால்வினா கதையிலும் இரவு முழுவது வெறொருவருடன் செல்வழித்துவிட்டு விடியலில் வீட்டிற்கு வரும் மனைவி, அந்த அடுக்குமாடி வாசல் திறக்கும்வரை எதிரேயிருக்கும் உணவு விடுதியில் நேரத்தை கழிக்கையில் சந்திக்கும் மனிதர்கள் மூலம் அவளின் மனநிலை வாசகருக்கு வெளிப்படுத்திவிடும் வித்தையாக இருக்கும். குறியீட்டு கதையாக வரும் தரை தேடிப்பறத்தல் கதையில் இன்னும் அக்கரையோடு எழுதியிருக்கும்பட்சத்தில் சிறந்த கதையாக வரவாய்ப்பிருக்கிறது.

சந்திராவின் கதை உலகம் மிக இயல்பாக ஆனால் கூர்மையாக கைகூடிய மொழிநடையுடன் பயணிக்கிறது. ஜெயமோகன் குறிப்பிடுவது போல..
"இன்றைய சிறுகதையின் முன் உள்ள சவாலே இதுதான் என்று படுகிறது. உண்மையின் பலவேறுபட்ட ஆழங்களைச் சொல்லும் கவித்துவம் கொண்ட வடிவையும் பலக்குரல்தன்மையையும் இன்றுள்ள தேவைக்கு ஏற்ப அடைவது எப்படி என்பது. அதற்கான முயற்சிகளாக எதிர்கால கதைகள் இருக்கலாம்."
அம்முயற்சிகளாக தொடங்கியிருக்கும் சந்திராவின் அடுத்தடுத்த கதைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் எனும் நம்பிக்கையை தருகின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள்.