சனி, 10 ஏப்ரல், 2010

மௌனத்தின் சொல்



உன்னைச் சிறப்பாக அழைப்பதற்கு
சொற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
அன்பைவிட பெரியசொல்
இதுவரை பூமியில் உச்சரிக்கப்படாத
ஆதிச்சொல்
உன்மத்தம் பிடித்தலையச் செய்யும் அழகியசொல்
தேடிக்கலைகிறேன்
எங்கும் இல்லை அந்த பொன் பொறித்த சொல்
கடைசியில் கண்டடைந்தேன்
மௌனத்தில் விரியும் என் புன்னகையே
உனக்கான தேவச்சொல் என்பதை

2
முடிவில்லா புன்னகை

அவன் உதடுகளில்
மௌனம் அழகானது
முத்தங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவை
புன்னகை முடிவில்லாக் கவிதை
உதிரும் சொற்கள் பேரண்டம் ஆளுபவை
ஆகா! அவனது உதடுகள்
பனித்துளி மிதக்கும் காடு
மழைகுடித்த காட்டுப்பூக்கள்
ஆம் அவன் உதடுகள் எழில்வாய்ந்தவை
நானே அவைகளின் பேரரசி

3
தொடர்பற்ற நதி

பரந்துகிடக்கும் வெளி
அடைக்கும் மௌனம்
சிதைந்த ஒலி
வெளிறிய வெளிச்சம்
நட்பறுந்த பொழுதுகள்
காதலின் மரணம்
குழந்தையின் வீறிடல்
அம்மாவின் கண்ணீர்
இவை தொடர்பற்று தொடர்புகொண்டிருக்கிறது
ஓடிக்கொண்டிருக்கும் நதியைப்போல

(ஏபரல் 2010 அம்ருதா இலக்கிய இதழில் வெளிவந்த எனது கவிதைகள்.)